search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரியில் டாக்டரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1½ லட்சம் கொள்ளை
    X

    புதுச்சேரியில் டாக்டரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1½ லட்சம் கொள்ளை

    புதுவையில் டாக்டரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை காராமணிக்குப்பம் மாரியம்மன் நகர் மூவேந்தர் வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது62). இவர் புதுவை கால்நடை துறையில் இணை இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது இவர் ரெயின்போ நகரில் கால்நடைகளுக்கான கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று மாலை மனோகரன் தட்டாஞ்சாவடியில் உள்ள ஒரு தேசிய வங்கியில் ரூ. 1½ லட்சம் பணத்தை எடுத்து பேக்கில் வைத்து தனது காரில் கொண்டு வந்தார். காரை கிளினிக் அருகே நிறுத்திவிட்டு கிளினிக் உள்ளே சென்றார். பின்னர் வீட்டுக்கு செல்ல காரை எடுக்க வந்தபோது காரின் பக்கவாடு கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காரில் பேக்கில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் மற்றும் வங்கி புத்தகம், ஏ.டி.எம். கார்டுகளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் வங்கியில் இருந்து நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்து காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மனோகரன் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.
    Next Story
    ×