search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வினருக்கு எதிராக அராஜகத்தை தூண்டுவதா?: மு.க.ஸ்டாலின் கண்டனம்
    X

    தி.மு.க.வினருக்கு எதிராக அராஜகத்தை தூண்டுவதா?: மு.க.ஸ்டாலின் கண்டனம்

    முதல்-அமைச்சர் தொகுதியில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறை நிர்வாகமும் சேர்ந்து தி.மு.க.வினருக்கு எதிரான அராஜகச் செயல்களில் ஈடுபட்டு வருவதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறை நிர்வாகமும் கைகோர்த்துக் கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு எதிரான அராஜகச் செயல்களில் ஈடுபட்டு வருவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சேலம் தெற்கு மாவட்டத்தில் உள்ள கொங்கணா புரம் அடுத்த எருமைப்பட்டியில் அமைந்துள்ள கட்சராயன் ஏரியை கழக தோழர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களும் இணைந்து புதர்களை அகற்றி, தூர்வாரி ஏரிக்கரைகளை எல்லாம் செம்மைப்படுத்தி புத்தம்புதிய ஏரி போன்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

    ஏறத்தாழ ஏழரை ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த ஏரி இன்றைக்கு புதுப்பொலிவுடன் பொது மக்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்து, முழுமையாக சீரமைக்கப்பட்டு விட்டது.

    ஏரியில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பணிகள் நிறைவு பெற்று நாளை (27-ந் தேதி) நான் அந்த ஏரியை பார்வையிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென்று அ.தி.மு.க.வினர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலில், அந்த ஏரிக்குள் நுழைந்த அ.தி.மு.க.வினர் அங்கு தி.மு.க.வினர் சீரமைத்திருந்த கரைகளை உடைத்து சேதப்படுத்தி, சட்ட விரோதமாக மணல் அள்ளிச் சென்றுள்ளனர். தன் சொந்தத் தொகுதியில் அ.தி.மு.க.வினரை வரம்பு மீறி அராஜகச் செயல்களில் ஈடுபட ஒரு முதலமைச்சரே உத்தரவிட்டிருப்பது வெட்கக் கேடானது.

    இதை மாவட்ட காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் கைகட்டி வேடிக்கைப் பார்த்ததால், நேற்றைய தினம் கழகத்தொண்டர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்பிறகு நடைபெற்ற காவல்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க.வினர் மணல் அள்ளுவதும் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், இன்று காலை முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்தும், “குட்கா” டி.ஜி.பி.யிடமிருந்தும் சென்ற உத்தரவினைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித காரணமும் இன்றி திடீரென செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட காவல்துறை நிர்வாகமும் ஏரி மணலை மீண்டும் அ.தி.மு.க.வினர் அள்ளிச் செல்ல அனுமதித்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வினரின் இந்த அராஜகச் செயல்களை எதிர்த்து ஒன்றுபட்ட சேலம் மாவட்ட கழகத்தின் சார்பில் அனைத்து கழக முன்னணியினரும் தொண்டர்களும் தற்போது போராட்டத்திலும், மறியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வினரின் அராஜகச் செயல்களை எல்லாம் தடுக்க வேண்டிய காவல்துறை, அதற்கு மாறாக போராடும் தி.மு.க.வினரை கைது செய்து வருகிறது. “முதல்-அமைச்சர் தொகுதியில் எப்படி ஏரியை தூர்வாரலாம்”, என்று மாவட்ட நிர்வாகத்தில் உள்ளவர்களும், அ.தி.மு.க.வினரும் கேட்டு பிரச்னை எழுப்புகிறார்கள்.

    இந்த இயக்கம் எப்படிப்பட்ட அடக்குமுறைகளையும் சந்தித்து வீறு கொண்டு எழுந்த இயக்கம் என்பதை ‘குதிரை பேரம்’ மூலமாக முதல்-அமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்வது நல்லது. காவல்துறையை வைத்துக்காட்டும் இதுபோன்ற சலசலப்புகளுக்கு எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகமோ, தொண்டனோ அஞ்சமாட்டான் என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும்.

    கடந்த சில மாதங்களாக தி.மு.க.வினர் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே ஏரிகளை தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு, அங்கெல்லாம் நான் நேரடியாகச் சென்று பார்வையிட்டு வருகிறேன். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி தொகுதியில் இருக்கும் கட்சராயன் ஏரியை நிச்சயம் நான் நாளை பார்வையிடுவேன் என்பதைத் தெரிந்து கொண்டு, அதனைத் தடுக்கவே இது போன்ற கலவரங்களில் அ.தி.மு.க.வினர் ஈடுபட்டுள்ளார்கள்.

    சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வேலையை விடுத்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்தத் தொகுதி மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது தான் அவர் வகிக்கும் பதவிக்கு அழகு.

    தொகுதி மக்களுக்காக பிரதான எதிர்க்கட்சி செய்துள்ள ஆக்கபூர்வமான பணியை தடுப்பது சேலம் மாவட்ட நிர்வாகத்தின் வேலையல்ல என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன், சேலம் மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட முன்வர வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×