search icon
என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • ஆந்திராவைச் சேர்ந்த ரோஹித் வெமுலா கடந்த 2016 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்
    • பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவரின் தற்கொலைக்கு, சாதி வேறுபாடு தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது

    ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிப்பு படித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த ரோஹித் வெமுலா கடந்த 2016 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவரின் தற்கொலைக்கு, பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., உடனான மோதலும், சாதி வேறுபாடும் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஹைதராபாத் போலீசார், தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

    அதில் "ரோகித் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரே அல்ல. அவரின் தந்தை ஓ.பி.சி. இனத்தைச் சேர்ந்தவர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த ரோகித்தின் தாய் ராதிகா, உண்மையை மறைத்து போலி சான்றிதழ் பெற்றுள்ளார். உண்மையான சாதி அடையாளம் வெளியே தெரிந்ததால் பிரச்சனை ஏற்படும் என்ற அச்சத்தில் தான் ரோகித் தற்கொலை செய்துள்ளார். இதற்கு யாரும் காரணம் அல்ல" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, ரோகித் வழக்கு முடித்து வைக்கப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதே சமயம், இந்த அறிக்கையில் சில சந்தேகங்கள் உள்ளன. ரோகித் வெமுலாவின் தாயும், அவரைச் சார்ந்தோரும் சில சந்தேகங்களை எழுப்பினர்

    ஆதலால், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்று தெலங்கானா டிஜிபி ரவி குப்தா தெரிவித்துள்ளார்.

    • ஜீவன் ரெட்டி ஆத்திரமடைந்து பெண்ணை கன்னத்தில் அறைந்தார்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜீவன் ரெட்டி போட்டியிடுகிறார். இவர் ஆர்மூர் பகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பெண்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அங்கு சென்று ஜீவன் ரெட்டி வாக்கு கேட்டார்.

    அப்போது ஒரு பெண்ணிடம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார். அதற்கு பதில் அளித்த அந்த பெண் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தேன் எனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அதனால் இந்த தேர்தலில் தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பேன் என்றார்.

    இதனை கேட்டதும் ஜீவன் ரெட்டி ஆத்திரமடைந்து அந்த பெண்ணை கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கிருந்த பெண்களுக்கும் அவர்களுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். காங்கிரஸ் வேட்பாளர் பெண்ணை கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.

    இந்த சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் வேட்பாளருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்பட்ட ரூ.10,000 சமீபத்தில் நிறுத்தப்பட்டது.
    • நடிகர் பவன் கல்யாணின் 'பீமலா நாயக்'கின் திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மொகிலையா புகழ்பெற்றார்.

    தெலுங்கானாவை சேர்ந்தவர் தர்ஷனம் மொகிலையா. இவர் கின்னரா என்ற பழங்குடி இசைக்கருவியை இசைக்கும் கலைஞர்களில் எஞ்சியிருப்பவர். கின்னேரா என்பது வீணை போன்ற ஒரு சரம் கொண்ட கருவியாகும்.

    அரிய இசைக்கருவியான 'கின்னரா'வை புதுப்பித்ததற்காக, தர்ஷனம் மொகிலையாவுக்கு 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    இதையடுத்து அப்போதைய முதல்-மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்த தர்ஷன் மொகிலையாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஐதராபாத்தில் அரசு சார்பில் ஒரு வீட்டு மனை ஒதுக்குவதாகவும், அதன் கட்டுமானம் மற்றும் இதர செலவுகளுக்காக 1 கோடி ரூபாய் வழங்குவதாகவும் முதல்-மந்திரி தெரிவித்தார்.

    இந்நிலையில், நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற தர்ஷன் மொகிலையாவின் தற்போதைய நிலை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    ஐதராபாத் அருகே துர்க்காயமஞ்சலில் உள்ள கட்டுமான தளத்தில் மொகிலையா வேலை பார்த்து வருகிறார். இதுகுறித்து மொகிலையா கூறும் போது, "எனது மகன்களில் ஒருவன் வலிப்பு நோயால் அவதிப்படுகிறான். எனக்கும், என் மகனுக்கும் மருந்துக்கு மட்டும் மாதம் 7,000 ரூபாய் தேவைப்படுகிறது. பிறகு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் இதர செலவுகள் உள்ளன. அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்பட்ட ரூ.10,000 சமீபத்தில் நிறுத்தப்பட்டது. ஏன் நிறுத்தப்பட்டது என்று தெரியவில்லை. இதுகுறித்து கேட்ட போது, அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை என்றார்.

    மேலும் ரூ.1 கோடி மானியத்துடன் ராங்காரெட்டி மாவட்டத்தில் 600 சதுர அடி கொண்ட இடத்தை ஒதுக்குவதாக அரசு கூறியது. ஆனால் அந்த ஒதுக்கீடு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்றார்.

    முன்னதாக, நடிகர் பவன் கல்யாணின் 'பீமலா நாயக்'கின் திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மொகிலையா புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை தினேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.
    • தினேஷிடம் பணம் இழந்த பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தில்ஷிப் நகரை சேர்ந்தவர் தினேஷ். இவர் தன்னை ஒரு பெண்ணாக காட்டி டேட்டிங் செயலி மூலம் ஒரு வாலிபருடன் நட்பு கொண்டார்.

    சில வாரங்கள் அவருடன் அரட்டை அடித்த தினேஷ் அவசர தேவை என்று கூறி அவரிடமிருந்து ரூ 4.09 லட்சத்தை அவரது வங்கி கணக்கில் பெற்றார்.

    இதேபோல் இந்திய டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி பலரிடம் இருந்து ரூ.2 கோடி வரை பணம் பறித்தார்.

    பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை தினேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடன் டேட்டிங்கில் ஈடுபடுபவர் பெண் இல்லை ஒரு ஆண் என்பதை கண்டுபிடித்தனர்.

    தினேஷிடம் பணம் இழந்த பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷை கைது செய்து அவரிடமிருந்து ரூ. 2 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • கட்சி தலைமை உத்தரவின் படி 2 தொகுதிகளிலும் தமிழிசை சவுந்தரராஜன் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
    • ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி போட்டியிடுகிறார்.

    தென் சென்னை பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் தொகுதிகளின் முக்கிய பொறுப்பாளராக தமிழிசை சவுந்தரராஜனை பா.ஜ.க. நியமித்துள்ளது.

    தேர்தல் முடியும் வரை அவர் ஐதராபாத்தில் தங்கி இருப்பார் என தெரிவித்துள்ளனர். கட்சி தலைமை உத்தரவின் படி 2 தொகுதிகளிலும் தமிழிசை சவுந்தரராஜன் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    அவர் மாநிலம் முழுவதும் உள்ள 17 தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். ஆனாலும் இந்த 3 தொகுதிகளில் உள்ள தேர்தல் பணிகளையும் சேர்த்து அவர் கவனிக்கிறார்.

    ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் மாதவி லதா என்ற சமூக ஆர்வலர் களத்தில் உள்ளார். இந்த தொகுதியில் பொறுப்பாளராக தமிழிசை நியமிக்கப்பட்டதன் மூலம் 2 சக்தி வாய்ந்த பெண்களை ஒவைசி எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இது ஒவைசிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

    நேற்று தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்த தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில்:-

    நம்மிடம் வலிமையான பிரதமர் உள்ளார். இந்தியாவிற்கே திறமையான தலைமையை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இது. தெலுங்கானா மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    நான் கவர்னராக இருந்தாலும் சாதாரண பா.ஜ.க. நிர்வாகியாக இருந்தாலும் இந்த மாநில மக்களுடைய தொடர்பை புறக்கணிக்க முடியாது. அதனால்தான் கட்சி தலைமை உத்தரவிட்ட உடனே பிரசாரத்திற்கு வந்தேன் என்றார்.

    • காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திரசேகர ராவ் இழிவாக பேசியுள்ளார் என்று காங்கிரஸ் தேர்தல் ஆணையதிடம் புகார் அளித்தார்
    • சந்திரசேகர ராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 5-ம் தேதி தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் பி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது.

    இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திரசேகர ராவ் இழிவாக பேசியுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ஜி நிரஞ்சன் தேர்தல் ஆணையதிடம் புகார் அளித்தார்.

    இந்த புகார் தொடர்பாக சந்திரசேகர ராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    இந்த புகாரின் விசாரணையில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் காங்கிரஸ் தொண்டர்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் என்று தேர்தல் ஆணையம் கண்டறிந்தது.

    இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இன்று இரவு 8 மணி முதல் இந்த தற்காலிக தடை அமலுக்கு வருகிறது.

    இந்த 48 மணி நேர தடையில் பொதுக் கூட்டங்கள், பொது ஊர்வலங்கள், பொது பேரணிகள், நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்கள், ஊடகங்களில் (மின்னணு, அச்சு, சமூக ஊடகங்கள்) பகிரங்கமாக பேச கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தல் ஆணையம், அரசியலமைப்பின் 324 வது பிரிவை மேற்கோள் காட்டி இந்த தடையை விதித்துள்ளது.

    • தெலுங்கானா தனி மாநிலம் என்பது என்னுடைய கனவு.
    • தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

    பிஆர்எஸ் கட்சியின் தலைவரும், தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் கூறியதாவது:-

    தெலுங்கானா தனி மாநிலம் என்பது என்னுடைய கனவு. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது மக்கள் உணர்ந்துள்ளனர். காங்கிரஸ் மீது பயங்கர கோபமாக உள்ளனர். நாங்கள் 17 தொகுதிகளில் குறைந்தது 12 இடங்களிலாவது வெற்றி பெறுவோம்.

    இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் பற்றி கூறுவது, மிகவும் முன் செயலாகும். தேர்தல் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி முழு மெஜாரிட்டியை பெறாது. பா.ஜனதா 272 இடங்களை பிடிக்காது.

    இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    • உடனடியாக பணம் கொண்டு வந்த 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • வாலிபர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வாலிபர்களை கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து நெல்லூருக்கு வந்தே பாரத் ரெயில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் பெட்டிகளில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

    2 வாலிபர்கள் வைத்திருந்த சூட்கேஸை போலீசார் சோதனை செய்தபோது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. உடனடியாக பணம் கொண்டு வந்த 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பணத்தை எண்ணிப் பார்த்ததில் ரூ.50 லட்சம் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் ஆந்திர மாநிலம் ஆத்மகூரு சட்டமன்றத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ. வேட்பாளராக போட்டியிடும் மேகவதி விக்ரம் ரெட்டிக்கு சொந்தமான பணம் என தெரிவித்தனர்.

    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். வருமானவரித்துறை அதிகாரிகள் போலீஸ் நிலையத்திற்கு வந்து ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    வாலிபர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது ஆசையை தனது கணவரிடம் கூற இந்த வயதில் தாலி கட்டி என்ன செய்யப் போகிறோம் எனக் கூறினார்.
    • விடாப்பிடியாக மூதாட்டி தனது ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என அடம்பிடித்தார்.

    தெலுங்கானா மாநிலம் மாவட்டம் மகபூபாபாத் தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சமீதா நாயக் (வயது 80). இவரது மனைவி கோகுலத் லாலி (70).

    தம்பதியினர் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    அப்போது காதல் வயப்பட்ட இருவரும் பெற்றோரின் கடும் எதிர்ப்பை தாண்டி திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களது பெற்றோர் அவர்களை சேர்த்துக் கொள்ளவில்லை. இருவரும் அந்த காலத்தில் கந்தர்வ முறைப்படி மாலை மாற்றி மட்டும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

    காலப்போக்கில் கடுமையாக உழைத்து மனைவியை காப்பாற்றி வந்த நாயக் அதன் பிறகு மகன்கள், மகள்களுக்கு, திருமணம் செய்து வைத்தார்.

    இப்படியே காலம் உருண்டோட குடும்பம் பேரன், பேத்திகள் என பெரிதாகி விட்டது. 60 ஆண்டுகள் ஆனாலும் தனது கணவர் தனக்கு தாலி கட்டவில்லையே என்ற ஏக்கம் கோகுலத் லாலிக்கு ஏற்பட்டது.

    தனது ஆசையை தனது கணவரிடம் கூற இந்த வயதில் தாலி கட்டி என்ன செய்யப் போகிறோம் எனக் கூறினார்.

    ஆனாலும் விடாப்பிடியாக மூதாட்டி தனது ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என அடம்பிடித்தார்.

    இதையடுத்து தனது பிள்ளைகளிடமும் பேரன், பேத்திகளிடமும் கூற அவர்களும் மகிழ்ச்சியுடன் இதனை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து உறவினர்கள் புடை சூழ திருமணம் நடந்தது. 60 ஆண்டுகளாக தன்னுடன் மனைவியாக வாழ்ந்த மூதாட்டிக்கு உற்றார் உறவினர் மட்டுமல்லாது தான் பெற்ற பிள்ளைகள், பேரன், பேத்திகள் முன்னிலையில் கை நடுங்கியபடி முதியவர் தாலி கட்டினார்.

    அப்போது மணப்பெண் அலங்காரத்தில் இருந்த மூதாட்டி வெட்கத்தில் தலை குனிந்தார்.

    தொடர்ந்து அக்கினியை வலம் வந்து தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

    இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினர்.

    அவர்களிடம் மகன், மகள்கள், பேரன், பேத்திகள் ஆசிபெற்றனர்.

    • கட்சி மேலிட உத்தரவின் பேரில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.
    • ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் நடிகை குஷ்பு பா.ஜ.க.வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தில் 10 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர் நேற்று ஐதராபாத் புறப்பட்டு சென்றார். தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக தெலுங்கானா மாநிலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கவர்னராக பணியாற்றி வந்தார்.

    அரசு திட்டங்கள் மற்றும் மக்களை நேரடியாக சந்திப்பதில் அவர் தீவிரம் கவனம் செலுத்தினார். தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெலுங்கானாவில் செல்வாக்கு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கட்சி மேலிட உத்தரவின் பேரில் அவர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.

    ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் நடிகை குஷ்பு பா.ஜ.க.வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நடிகை ஜெயப்பிரதா ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் கட்சி மேலிடம் உத்தரவிட்டால் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன் என நேற்று தெரிவித்தார். வெளிமாநிலங்களில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டி வருவதால் அங்குள்ள பா.ஜ.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    • தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரசாரத்தில் குதித்துள்ளார்.
    • தேர்தல் பிரசாரத்தில் திறந்த வேனில் நின்றபடி குஷ்பு உற்சாகமாக பேசினார்.

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் தொடங்கினார்.

    வேலூரில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து நடிகர் குஷ்பூ பிரசாரம் செய்த அவர் திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    உடல் நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. டாக்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என கூறியதால் பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக பா.ஜனதா தலைவர் நட்டாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார். குஷ்புவுக்கு பதிலாக அவரது கணவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி பிரசார களத்தில் இறங்கினார். வேலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரசாரத்தில் குதித்துள்ளார். செகந்திராபாத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் கிஷன் ரெட்டியை ஆதரித்து நேற்று குஷ்பு பிரசாரம் செய்தார்.

    அவரை காண உள்ளூர் தலைவர்களுடன் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் பிரசாரத்தில் திறந்த வேனில் நின்றபடி குஷ்பு உற்சாகமாக பேசினார். அவர் தனது ரசிகர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதியில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிகை குஷ்பு நடித்து பிரபலமானார்.

    இதனால் குஷ்புவை பாஜக மேலிடம் பிரசார களத்தில் இறக்கி உள்ளது. தமிழகத்தில் பிரசாரத்திற்கு மறுத்த குஷ்பு தெலுங்கானா மாநிலத்தில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை அமல்படுத்த 400 இடங்களை கோருகிறது.
    • ஆர்எஸ்எஸ் திட்டங்களாக முத்தலாக், சட்டப்பிரிவு 370-ஐ நீக்குதல், பொது சிவில் சட்டம், சிஏஏ ஆகியவற்றை செயல்படுத்துயுள்ளது.

    தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-

    பா. ஜனதாவின் 400 இடங்களுக்கு மேல் என்ற இலக்கின் காரணம், அரசியலமைப்பை முற்றிலும் மாற்ற விரும்புவதற்காகத்தான். அதன் மூலம் அவர்கள் இடஒதுக்கீட்டை ஒழிக்கவும், இடஒதுக்கீடு இல்லாம இந்தியாவை உருவாக்கவும் விரும்புகிறார்கள்.

    பிரதமர் மோடி, அமித் ஷா நாட்டின் பூர்வீகக்காரர்களாகிய தலித்கள், எஸ்டி-கள் மற்றும் ஓபிசிகள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் செய்கிறார்கள். இந்த தேர்தலை சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கான களமாக மாற்ற அவர்கள் (பாஜக) முடிவு செய்துள்ளனர்.

    ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை அமல்படுத்த 400 இடங்களை கோருகிறது. ஆர்எஸ்எஸ் திட்டங்களாக முத்தலாக், சட்டப்பிரிவு 370-ஐ நீக்குதல், பொது சிவில் சட்டம், சிஏஏ ஆகியவற்றை செயல்படுத்துயுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி-க்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக்க பாஜக முயற்சிக்கிறது.

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ×