என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சக்தி மயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது.
    • விஜய் தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெற்றி கண்டவர்கள்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.

    கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மன்னராட்சி முதல்வரே, உங்கள் ஆட்சியை பற்றி கேட்டால், உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தி இருந்தால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்காக இருந்திருக்கும். 2026-ம் ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டே இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்று த.வெ.க. இன்னொன்று தி.மு.க. என்று கூறினார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

    ஒரு சினிமா பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

    "மன்னராட்சி காத்து நின்ற தெங்கள் கைகளே

    மக்களாட்சி காணச்செய்த தெங்கள் நெஞ்சமே

    எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே

    கல்லில் வீடுகட்டித் தந்த தெங்கள் கைகளே

    கருணைத் தீபம் ஏற்றிவைத்த தெங்கள் நெஞ்சமே"

    இதுதான் அவருக்கு பதிலாக சொல்லிக்கொள்கிறேன்.

    * பெண்கள் தான் இந்த ஆட்சியை மீண்டும் 2026-ம் ஆண்டு தூக்கி பிடிப்பார்கள்.

    * முதலமைச்சர் எங்கு போனாலும் வரவேற்கிற கூட்டத்தில் 80 சதவீத கூட்டம் பெண்கள் கூட்டம்தான்.

    * சக்தி மயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது.

    * விஜய் தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெற்றி கண்டவர்கள்.

    * பல கரடு முரடான பாதைகளை கடந்து வந்தவர்கள்.

    * சிறை என்றால் என்னவென்று தெரியாதவர்கள், போராட்ட களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், ஆர்ப்பாட்ட களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், பொதுக்கூட்டம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், மக்கள் பணி என்றால் என்னவென்று தெரியாதவர்கள், புயல், மழை, வெள்ளம் போன்றவற்றை கூட தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்து வந்து 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து அதை போட்டோ போட்டுக்கொண்டு, அதையும் பிரசுரிப்பதற்கு ஊடகங்கள் தயாராக இருந்தால் தமிழகத்தின் நிலை இப்படி தான் இருக்கும். இப்படி தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வியர்வை சிந்தி உழைத்த மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது.
    • தி.மு.க.தான் தங்களுக்கு போட்டி என நடிகர் விஜய் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து.

    சின்னாளபட்டி:

    100 நாள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், பழனி, நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆத்தூர் சட்ட மன்றத்திற்குட்பட்ட பித்தளைப்பட்டி பிரிவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில்,

    தமிழகத்திற்கு தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் கடந்த 4 மாதமாக வழங்க வேண்டிய ரூ.4039 கோடியை மத்திய அரசு வழங்காமல் உள்ளது. இதனால் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வரவு வைக்கப்படாமல் உள்ளது. கிராமப்புற பெண்கள் இத்தொழில் மூலம் சுய சார்பு நிலையை அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தினசரி ரூ.240 முதல் ரூ.270 வரை சம்பளம் கிடைக்கிறது. வியர்வை சிந்தி உழைத்த மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது.

    தமிழகத்திற்கு இதேபோல் கல்வி நிதியை வழங்காமலும், மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் மத்திய அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தும் துறை சார்ந்த அமைச்சருக்கு மனு அளித்தும் இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை. எனவே மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் பிரதமர் மோடியின் செவிகளுக்கு விழும்வரை எங்களது போராட்டம் தொடரும்.

    நிதியை விரைவில் ஒதுக்காவிட்டால் எங்களது அடுத்தகட்ட போராட்டமும் தொடரும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி, ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் மீடியா சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுககு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நடிகர் விஜய் கூறியதைபோல தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடைபெறவில்லை. மன்னர் ஆட்சி என்றால் எப்படி இருக்கும் என்று அவருக்கு தெரியாது. மக்கள் வாக்களித்து அவர்களுக்காக செயல்படும் திராவிட மாடல் அரசாக தி.மு.க. விளக்கி வருகிறது. தி.மு.க.தான் தங்களுக்கு போட்டி என நடிகர் விஜய் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு யாரும் போட்டி கிடையாது. மக்கள் ஆதரவுடன் மீண்டும் வருகிற தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாம் சுயமரியாதையுடன் இருப்பதற்கு பெரியாரும், அம்பேத்கருமே காரணம்.
    • கடந்த ஆண்டு மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எஸ்.சி., எஸ்.டி. நலத்துறை மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்றனர்.

    எஸ்.சி., எஸ்.டி. மக்களின் வளர்ச்சிக்காக தீட்டப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * சமூக நீதி அடிப்படையில் கல்வி, திறன்மேம்பாடு, வீட்டு வசதி, உள்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    * ஆதி திராவிட பழங்குடியின வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் தமிழக அரசு செயல்படுகிறது.

    * ஆதி திராவிட மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    * நாம் சுயமரியாதையுடன் இருப்பதற்கு பெரியாரும், அம்பேத்கருமே காரணம்.

    * தி.மு.க. அரசு சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக செயல்படுகிறது.

    * சமூக நீதி அடிப்படையில் கல்வி, திறன்மேம்பாடு, வீட்டுவசதி, உள்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    * வன்கொடுமை அடிப்படையில் பதியப்படும் வழங்குகள் எண்ணிக்கை கடந்தாண்டை விட 6 சதவீதம் குறைந்துள்ளது.

    * வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17,098 நபர்களுக்கு தீர்வு உதவித்தொகையாக ரூ.207 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    * வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 421 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * பழங்குடியின மக்கள் எளிதாக கல்வி பெற அப்பகுதியிலேயே 328 உண்டு உறைவிடப்பள்ளிகள் நடத்தப்படுகிறது.

    * கடந்த ஆண்டு மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    * பழங்குடியினர் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?
    • மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், "ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது" என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுக-விற்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?

    செப் 2021- தனுஷ், சௌந்தர்யா, கனிமொழி

    அக் 2021- அனு, கீர்த்திவாசன்

    நவ 2021- சுபாஷ் சந்திரபோஸ்

    ஜூன் 2022- தனுஷ்

    ஜூலை 2022- முரளி கிருஷ்ணா, நிஷாந்தி

    ஆகஸ்ட் 2022- ப்ரீத்தி ஸ்ரீ

    செப் 2022- லஷ்மண ஸ்வேதா, ராஜலட்சுமி

    மார்ச் 2023- சந்துரு

    ஏப்ரல் 2023- நிஷா

    ஆகஸ்ட் 2023- ஜெகதீசன்

    டிசம்பர் 2023- ஆகாஷ்

    அக்டோபர் 2024- புனிதா

    மார்ச் 2025-இந்து, தர்ஷினி

    இந்த 19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கும் மு.க.ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன?

    உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்?

    தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?

    மாணவி தர்ஷினி மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு! எனவே, நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மாணவர்களை ஏமாற்றாதீர்கள் மு.க.ஸ்டாலின்!

    மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள். வாழ்க்கை பெரிது; உலகம் பெரிது! வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது. "நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்ற நம்பிக்கையோடு எப்போதும் முன் செல்லுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்து கெஞ்சும்!

    #நீட்ரகசியம்_திமுக_சதுரங்கவேட்டை என கூறியுள்ளார். 



    • பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், பிரவீனை கைது செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் டொம்பு சேரி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது33). எலக்ட்ரீசியன் வேைல பார்த்து வந்தார். இவரது அண்ணன் மருதமுத்து (36). இவரது மனைவி வீரலட்சுமி (32). இவரும் அதே பகுதியில் வசித்த பிரவீன் (24) என்பவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இவர்கள் கள்ளத்தொடர்பு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து ஊர் பெரியவர்கள் மூலம் பேசி அவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர்.

    இனிமேல் இதுபோன்று செயல்பட்டால் போலீசில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். ஆனால் அதனையும் மீறி வீரலட்சுமி, பிரவீன் கள்ளத்தொடர்பு தொடர்ந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 26ந் தேதி வீரலட்சுமியுடன் பேசிக்கொண்டிருந்த பிரவீனை கணவர் மருதமுத்து கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் மருதமுத்துவை தினேஷ்குமார் (27) என்பவர் பிடித்துக்கொள்ள பிரவீன் கத்தியால் குத்த முயன்றார். ஆனால் தகராறை தடுக்க சென்ற ராஜா மீது கத்திக்குத்து விழுந்தது. பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், பிரவீனை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பிரவீனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் உடந்தையாக இருந்த தினேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் நடராஜன் உத்தரவிட்டார்.

    • யாகசாலை அமைப்பது, வர்ணம்பூசும் பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகின்றன.
    • மருதமலை முருகன் கோவிலில் 1-ந்தேதி முதல் யாகசாலையில் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    வடவள்ளி:

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    மருதமலை முருகன் கோவிலில் வருகிற 4-ந்தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதனையொட்டி கோவிலில் கும்பாபிஷேக விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. யாகசாலை அமைப்பது, வர்ணம்பூசும் பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகின்றன.

    மேலும் அமைச்சர், கலெக்டர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அறங்காவலர் குழுவினர் கும்பாபிஷேக அழைப்பிதழையும் வழங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் மருதமலை முருகன் கோவிலில் 1-ந்தேதி முதல் யாகசாலையில் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி ஏப்ரல் 1-ந்தேதி மாலை 5 மணிக்கு மேல் கோவிலில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில் சக்தி கலசங்களை வைத்து பூஜை செய்யப்பட உள்ளது. இதனால் அன்றைய தினம் மாலை 5 மணி முதல் 3-ந்தேதி வரை பக்தர்கள் அனைவரும் யாகசாலையில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களை யாக சாலையில் தரிசனம் செய்யலாம்.

    ஏப்ரல் 4-ந்தேதி கும்பாபிஷேக விழா முடிந்ததும் மீண்டும் வழக்கமான நடைமுறையில், பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு சன்னதிகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வருகிற 4-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை 3 நாட்கள் மலை மீது இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை.

    பக்தர்கள் படிக்கட்டு வழியாகவும், கோவில் பஸ்கள் மூலமாகவும் மலைக்கோவிலுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 1,170 இடங்களில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ராமநாதபுரம் முதுகுளத்தூரில் காலி தட்டுகளை ஏந்தி பெண்கள், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை வழங்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 1,170 இடங்களில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோரை திரட்டி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் முதுகுளத்தூரில் காலி தட்டுகளை ஏந்தி பெண்கள், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் மற்றும் பெண்கள் கோஷமிட்டனர். மத்திய அரசு நிலுவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    • சிவில் என்ஜினீயர் வருண் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டுவது தொடர்பாக சுப்பிரமணியனை சந்தித்துள்ளார்.
    • லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவில் உதவியாளராக சுப்பிரமணியம் என்பவர் (வயது 48) பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிவில் என்ஜினீயர் வருண் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டுவது தொடர்பாக சுப்பிரமணியனை சந்தித்துள்ளார்.

    அப்போது புதிய கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பதற்கு ரூ.40 ஆயிரம் வேண்டும் என சுப்பிரமணியம், என்ஜினீயர் வருணிடம் பேசி உள்ளார். பின்னர் முடிவில் ரூ.30 ஆயிரம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் லஞ்ச பணம் கொடுக்க மனம் இல்லாத வருண் இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல் படி வருண் கடந்த 25ம் தேதி கோபி செட்டிபாளையத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். வருண் ரசாயனம் தடவிய பணத்தை சுப்பிரமணியிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை ஏ.டி.எஸ்.பி ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சுப்பிரமணியை கையும் களவுமாக பிடித்தனர்.

    பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர். இந்நிலையில் நகராட்சி மண்டல இயக்குனர் விசாரணை நடத்தி லஞ்ச வழக்கில் சிக்கிய உதவியாளர் சுப்பிரமணியத்தின் மீது நடவடிக்கை எடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் நகராட்சி உதவியாளர் சுப்ரமணியம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    • சர்வதேச விமானங்களில் 23 ஆயிரத்து 641 பயணிகளும், உள்நாட்டு விமானங்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 37 பயணிகளும் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 678 பேர் பயணம் செய்துள்ளனர்.
    • தமிழ்நாட்டில் அதிக பயணிகளை கையாளும் 2-வது பரபரப்பான விமான நிலையமாக கோவை விமான நிலையம் இருந்து வருகிறது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சராசரியாக 30 விமானங்கள் சேவை வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் விமான இயக்கங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற விமான போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து குறித்த விவரங்களை விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.

    இதன்படி கோவை விமான நிலையத்தில் இருந்து பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 179 சர்வதேச விமானங்களும், 1,651 உள்நாட்டு விமானங்களும் என மொத்தம் 1,830 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

    இது கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 21.43 சதவீதம் அதிகமாகும்.

    சர்வதேச விமானங்களில் 23 ஆயிரத்து 641 பயணிகளும், உள்நாட்டு விமானங்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 37 பயணிகளும் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 678 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 31.23 சதவீதம் கூடுதலாகும்.

    இதேபோல சர்வதேச விமானங்களில் 180.1 மெட்ரிக் டன் சரக்குகளும், உள்நாட்டு விமானங்களில் 764.7 மெட்ரிக் டன் சரக்குகளும் என மொத்தம் 944.8 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 19.52 சதவீதம் அதிகமாகும்.

    தமிழ்நாட்டில் அதிக பயணிகளை கையாளும் 2-வது பரபரப்பான விமான நிலையமாக கோவை விமான நிலையம் இருந்து வருவதாகவும், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விமான நிலைய முனையத்தை விரைவாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • நடப்பு ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்த விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    • கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

    சேலம்:

    தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகளில் இருந்து 5 ஆயிரம் டேங்கர் லாரிகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 6 மாநிலங்களில் உள்ள கியாஸ் சிலிண்டர்களில் நிரப்பும் பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    இதற்கிடையே நடப்பு ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்த விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு ள்ளதாக கூறி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் காலை முதல் கால வரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

    இதனால் எண்ணெய் நிறுவன கிடங்குகளில் இருந்து பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் ஏற்றி செல்லப்படும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளன. இதனால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கோவையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்கிறது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

    அதன் படி 3-வது நாளாக இன்றும் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பாட்டலிங் பிளாண்டுகளில் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    மேலும் போராட்டம் தொடர்ந்தால் விரைவில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 20-ந் தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 310-க்கும், ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்து 480-க்கும் விற்பனை ஆனது. இது அப்போதைய உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. அதற்கு மறுநாளே விலை குறையத் தொடங்கியது.

    தொடர்ந்து 25-ந்தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், கடந்த 26-ந் தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை உயர்ந்து காணப்பட்டது.அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 235-க்கும், ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 880-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,360-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,880-க்கும் விற்பனையானது.

    வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 113 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,720

    27-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,880

    26-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,560

    25-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,480

    24-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,720

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-03-2025- ஒரு கிராம் ரூ.114

    27-03-2025- ஒரு கிராம் ரூ.111

    26-03-2025- ஒரு கிராம் ரூ.111

    25-03-2025- ஒரு கிராம் ரூ.110

    24-03-2025- ஒரு கிராம் ரூ.110

    • காயமடைந்த சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • சந்தோஷ், முத்தையா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்

    எட்டயபுரம் அருகே காதலிக்க மறுத்த சிறுமி மீது வாலிபர் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்தார். இதில் உடல் கருகி பலத்த காயமடைந்த சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிறுமி எட்டயபுரம் போலீசாருக்கு அளித்த அந்த வாக்குமூலத்தில், 'பாட்டியின் வீட்டில் தனியாக இருந்தபோது சந்தோஷ் தனது நண்பருடன் வந்தார். சந்தோஷ் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். நான் மறுத்ததால் என் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு, அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்' என்று கூறியிருந்தார்.

    அதன் அடிப்படையில் சந்தோஷ், முத்தையா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் வாலிபரால் மண்எண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி பலியானார்.

    கடந்த 23-ந்தேதி தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார். 

    ×