என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையிலேயே செங்கோட்டையன் இருப்பதாக கூறப்படுகிறது.
    • தற்போது சபாநாயர் அறையில் இருப்பதை தவிர்க்க 9.25 மணிக்கு சபைக்கு வருகிறார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    இதனிடையே, சட்டமன்றத்தில் செங்கோட்டையனிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டெல்லி பயணம் தொடர்பாக கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏன் டெல்லி சென்றீர்கள் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், கடம்பூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி, அம்மன் அர்ஜூனன் ஆகியோர் கேட்டதாகவும் அதற்கு செங்கோட்டையன் பதில் எதுவும் கூறாமல் சென்றதாக கூறப்படுகிறது.

    தொடக்கத்தில் சபாநாயகர் அறையில் செங்கோட்டையன் அமர்ந்தது சர்ச்சையான நிலையில் தற்போது சபாநாயர் அறையில் இருப்பதை தவிர்க்க 9.25 மணிக்கு சபைக்கு வருகிறார். மேலும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையிலேயே செங்கோட்டையன் இருப்பதாக கூறப்படுகிறது.

    • பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர் கோவில்களில் ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள்.
    • கிடா வகை ஆடுகள் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தை தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற எட்டையபுரம் சந்தைக்கு அடுத்து பெரிய சந்தையாக விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் விற்பனை நடந்து வருகிறது.

    இங்கு ஆடுகள் மட்டுமின்றி மாடு, கோழி, கருவாடு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படும். அதனை வாங்க அண்டை மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் வருவார்கள்.

    இதனால் இங்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் விற்பனை நடைபெறும். ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இந்த சந்தையில் கூடுதலாக விற்பனை நடக்கும்.

    இந்த நிலையில் பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர் கோவில்களில் ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள். தற்போது பங்குனி உத்திரம் வருகிற 10-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நாளில் ஏராளமான பக்தர்கள் கோவில்களில் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஆடு, கிடாய் உள்ளிட்டவற்றை பலியிடுவார்கள். இந்த திருவிழா நெருங்கி வருவதால், இன்று மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.

    இதற்காக நேற்று இரவு முதலே வியாபாரிகள் தங்களது ஆடு, மாடுகளுடன் சந்தைக்கு வந்தனர். வியாபாரிகள், பொதுமக்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் சந்தையில் குவிந்தனர். மேலும் விற்பனைக்காக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன. அவை தரத்துக்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. கிடா வகை ஆடுகள் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. பெரும்பாலானோர் கிடாய்களை தான் கோவில்களில் நேர்த்திக்கடனாக பலியிடுவார்கள் என்பதால் இன்று கிடாய்களுக்கு மவுசு ஏற்பட்டது.

    அதே நேரம் இளம் ஆடுகளின் கறி சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும் என்பதால் குட்டி ஆடுகளையும் ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். ஆடுகள் விற்பனை கோடிக்கணக்கில் அமோகமாக நடந்ததால் மேலப்பாளையம் சந்தை களைகட்டி காணப்பட்டது.

    • 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வரவேண்டிய நிதி மத்திய அரசு இன்னும் ஒதுக்கவில்லை.
    • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிதானமாகவும், பொறுமையாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பேச வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்திய மூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டுடன் திருத்தணி இணைந்த நாள் இன்று. அதற்காக போராடிய தியாகிகளை நினைவுகூர்ந்து புகழ் அஞ்சலி செலுத்துகிறோம் .

    வருகிற 6-ந்தேதி பிரதமர் மோடி மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்கிறார். அவரது வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஏன் இந்த போராட்டம் என்று கேட்கிறார்கள்.

    அடுத்த தலைமுறையை நல்ல முறையில் உருவாக்கும் கல்வித்துறையை சீரழித்து வருவதை கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 52 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஆங்கிலம், இந்தி ஆகிய இருமொழி கொள்கைகள் தான் உள்ளன. இப்போது தேர்தல் வரும்போது மும்மொழி திட்டத்தை கொண்டு வருவது ஏன்?

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வரவேண்டிய நிதி மத்திய அரசு இன்னும் ஒதுக்கவில்லை. மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து நடத்தும் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கப்படுவதில்லை. இவற்றை கண்டித்து தான் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிதானமாகவும், பொறுமையாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பேச வேண்டும். யாரோ வாய்க்கு வந்தபடி கூறியதை கேட்டு அள்ளித் தெளிக்க கூடாது. டிக்கி நிறுவனம் என்பது இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத் திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் கழிவுகளை அகற்றி விஷ வாயுத்தாக்கி உயிரிழந்த குடும்பத்தினரின் வாரிசுகளை தேர்வு செய்து அவர்களை தொழில்முனைவோர் ஆக்கியுள்ளனர். இதில் பணியாற்றும் ஒருவர் எனது உறவினர். அவ்வளவுதான் மற்றபடி எனக்கும் இந்தத் திட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? மேலும் சொல்லப் போனால் உங்கள் பிரதமர் மோடியே இந்த திட்டத்தை பாராட்டி இருக்கிறார். அவர் பாராட்டிய திட்டத்தை அண்ணாமலை தவறு நடந்திருப்பதாக குறை கூறுகிறார்.

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வர வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. பா.ஜ.க. ஆளாத மாநிலங்கள் அனைத்திற்கும் இதுதான் நிலைமை. அதே போலதான் இந்த திட்டத்திலும் தவறு நடப்பதாக கூறுகிறார். உங்களிடம் விசாரணை அமைப்புகள் உள்ளன.

    அதன் மூலம் உண்மையை அறிந்து பேச வேண்டும்.எதையும் அரைகுறையாக பேசக்கூடாது. இந்தத் திட்டத்தில் பல மாவட்டங்கள் சிறப்பாக செயல்பட்டது என தேர்வு செய்து மத்திய மோடி அரசு விருது வழங்கி இருக்கிறது. அப்படியானால் தவறாக இந்த விருதுகள் கொடுக்கப்பட்டதாக அண்ணாமலை சொல்கிறாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, மாநில நிர்வாகிகள் கோபண்ணா, இதயத்துல்லா, தளபதி பாஸ்கர் மற்றும் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 708 நகர்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
    • 2023-ம் ஆண்டு 500 மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று சென்னை திரு.வி.க. நகர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. தாயகம் ரவி பேசும் போது, நகர்ப்புறநலவாழ்வு மையம் செயல்பாடு பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 708 நகர்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இவற்றில் 2023-ம் ஆண்டு 500 மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 208 மையங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்புரான் திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல்வேறு சர்ச்சை கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக செய்திகள் பரவியது.
    • திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

    கூடலூர்:

    மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் திரைப்படம் கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல்வேறு சர்ச்சை கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக செய்திகள் பரவியது. குறிப்பாக குஜராத் கலவரம் தொடர்பாக காட்சிகள் வைக்கப்பட்டதால் வலதுசாரி அமைப்புகள் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டம் வெடிக்கும் எனவும் தெரிவித்தனர்.

    அதன்பின் சர்ச்சைக்குரிய 17 காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் படம் திரையிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. இருந்தபோதும் இந்த படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த கருத்துகள் இடம் பெற்றுள்ளது என்றும், அதனை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் எம்புரான் படம் திரையிட்ட தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில்,

    இந்த திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து ஏற்கனவே நாங்கள் அறிக்கை வெளியிட்டு படக்குழுவினரிடம் அதனை நீக்க வலியுறுத்தினோம். இதுவரை நீக்கப்படவில்லை. ஆனால் வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு காரணமாக 17 காட்சிகளை நீக்கி திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர் .அப்படியானால் தமிழக விவசாயிகளின் உணர்வுக்கு மதிப்பு இல்லையா? தமிழினத்திற்கு எதிரான கருத்துகளை உமிழும் வகையில் திரைப்படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசு இந்த திரைப்படத்தை தணிக்கை செய்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை திரட்டி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    • எம்.எல்.ஏ.க்கள் கூறும் திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியை ஒதுக்கி கொடுக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    • சாத்தியப்படும் பணிகள் அனைத்தையும் உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டத்தின் கீழ் நிறைவேற்றிக்கொண்டு தான் இருக்கிறோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறைகளுக்கான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. திண்டுக்கல் சீனிவாசன் உங்கள் தொகுதி முதல்வன் திட்டத்தின் கீழ் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் பயன்பெற்று உள்ளனர் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உங்கள் தொகுதி முதல்வன் திட்டத்தின் கீழ் 57 எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

    கட்சி பாகுபாடு இன்றி அந்த திட்டம் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

    இதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டத்தின் கீழ் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு நிதி அதிகமாகும் என்ற காரணத்தை கூறி திட்டங்களை செயல்படுத்த மறுக்கிறார்கள். 10 திட்டங்களை வைத்தால் 2 திட்டங்கள் தான் எடுத்துக் கொள்கிறார்கள். நானும் எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற கோரிக்கை வைத்தேன். அதில் 2 பணிகளை மட்டும் எடுத்து உள்ளனர். மற்றவற்றை சாத்தியம் இல்லை என கூறி நிராகரித்து உள்ளனர். எனவே எம்.எல்.ஏ.க்கள் கூறும் திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியை ஒதுக்கி கொடுக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் கட்சி பாகுபாடு இன்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு நானே இந்த திட்டத்தை ஆய்வு செய்து அறிவுரைகள் கூறி வருகிறேன். உங்கள் தொகுதி முதல்வன் திட்டத்தின் கீழ் எந்த கோரிக்கையும் வைக்காத எம்.எல்.ஏ.க்களிடம் திட்டங்களை கேட்டு பெற்று செயல்படுத்தி வருகிறோம்.

    உதாரணத்திற்கு அ.தி.மு.க. உறுப்பினர் விஜயபாஸ்கர் அந்த திட்டத்தில் எதுவும் கேட்கவில்லை. ஆனால் என்ன தேவைகள் உள்ளது என்று நாங்களாகவே கேட்டு உள்ளோம். இப்படி சாத்தியப்படும் பணிகள் அனைத்தையும் உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டத்தின் கீழ் நிறைவேற்றிக்கொண்டு தான் இருக்கிறோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • காலாவதியான 13 சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த சுங்கச்சாவடிகளை அகற்றகோரி மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்றும், அதனை ரத்து செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

    தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தை திரும்ப பெறுமாறு ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம். நேரில் சென்றும் அது பற்றி வலியுறுத்த உள்ளோம். காலாவதியான 13 சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளை அகற்றகோரி மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளோம். ஆனால் மத்திய அரசு சார்பில் காலாவதியான சுங்கச்சாவடிகள் இருக்கும் சாலைகளில் சிறிய மேம்பாலங்கள், சாலை மேம்பாட்டு பணிகள் நடக்க இருப்பதால் அவைகளை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளதாக பதில் அனுப்பி உள்ளார்கள். இதன் காரணமாகவே காலாவதியான சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.

    சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தும் போது காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றவும் வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களும் 10 கோரிக்கைகளை வழங்க வேண்டும்.
    • மதுரையில் நூலகம் ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில், இன்று கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் நூலகங்கள் பற்றிப் பேசும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-

    அன்பழகன் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கப்பட்டிருக்கிற நூலகங்களுக்கு மாபெரும் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது என்ற கருத்தினை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். அதிலே குறிப்பாக, பொதுப் பணித்துறை சார்ந்த நான்கு ஆண்டு சாதனைகள் தொடர்பான புத்தகத்தில், ஏற்கெனவே இந்த அவையில் அறிவிக்கப்பட்டவாறு, திருச்சியில் 290 கோடி ரூபாய் செலவில் என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட மாபெரும் நூலகத்திற்கு தலைவர் கலைஞரின் பெயர் சூட்டப்பட்டிருப்பதாக நான் பார்த்தேன்.

    நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரையில், தலைவர் கலைஞரின் திருக்கரங்களால் கோட்டூர்புரத்தில் திறந்து வைக்கப்பட்ட நூலகத்திற்கு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று பெயர் சூட்டப்பட்டது. மதுரையில் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, ஒரே ஆண்டில் அதன் கட்டுமானப் பணிகள் முடிவுற்று, மாபெரும் சாதனை செய்யப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என்பதை எல்லோரும் அறிவர். இதுவரை சுமார் 16 லட்சம் பொதுமக்களும், மாணவர்களும் இந்த நூலகத்தால் பயனடைந்திருக்கிறார்கள்.

    அதனைத் தொடர்ந்து, அண்மையில் கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டபோது, கோவையில் ஒரு மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்று என்னால் அறிவிக்கப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

    அதேபோன்று, திருச்சியில் அறிவிக்கப்பட்டிருக்கிற நூலகத்திற்கு கடந்த மாதத்தில் நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இந்தப் பணிகளும் முடக்கிவிடப்பட்டுள்ளன.

    கோவையில் தந்தை பெரியார், சென்னையில் பேரறிஞர் அண்ணா, மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்களின் பெயர்களைத் தாங்கி நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளதோ, அதனைத் தொடர்ந்து, திருச்சியில் அமையவிருக்கும் நூலகத்திற்குப் பெருந்தலைவர் காமராசரின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

    எனவே, தமிழ்நாட்டில் கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் தொடங்கி, மதிய உணவு அளித்து, லட்சக்கணக்கான குடும்பங்களின் கல்விக் கண்களைத் திறந்து, தமிழ்நாட்டின் கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட பெருந்தலைவர் காமராசரின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி, திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசரின் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட வேண்டுமென்று முதலமைச்சர் என்ற முறையில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மத்திய மந்திரி எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோரும் தேர்வு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
    • தலைவர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்து விட்டது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக பிரதமர் மோடியும், மத்திய மந்திரி அமித்ஷாவும் ஆலோசித்து வருகிறார்கள்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து திரும்பியதும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இதற்கிடையில் இந்த இரு கட்சிகள் நெருங்கி வருவது தமிழக பா.ஜ.க. தலைவர் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் பேசுபொருளாகி இருக்கிறது.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பா.ஜ.க. தனித்துவமான கட்சியாக செயல்பட வேண்டும். தேர்தலில் சீட்டுக்காக திராவிட கட்சிகளிடம் கை ஏந்தும் நிலை இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

    மேலும் தற்போது தமிழகத்தில் அரசியல் களம் எப்படி இருக்கிறது? ஒவ்வொரு கட்சியினர் பற்றியும் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? கட்சிகளின் செல்வாக்கு எப்படி இருக்கிறது? என்பது போன்ற பல்வேறு விவரங்களை துல்லியமாக 234 தொகுதிகளிலும் ஆய்வு செய்து அந்த அறிக்கையை அமித்ஷாவிடம் கொடுத்து உள்ளார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததால் தான் கூட்டணி அமையாமல் போனது என்று பலர் ஆதங்கப்படுகிறார்கள். எனவே இந்த தேர்தலிலும் அந்த மாதிரி சூழ்நிலை வரக்கூடாது என்று அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் கருதுகிறார்கள்.

    அமித்ஷாவுடனான சந்திப்பின் போதும் எடப்பாடி பழனிசாமி இதுபற்றி தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக அண்ணாமலையிடம் அமித்ஷா விவாதித்துள்ளார். தான் எந்த தலைவருக்கும் எதிரானவன் இல்லை. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்க்கிறேன். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. கட்சியில் எந்த பணியையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று உறுதியாக கூறி இருக்கிறார்.

    எனவே அண்ணாமலை மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. இதை அடுத்து தலைவர் பதவியை குறி வைத்து மூத்த நிர்வாகிகள் காய் நகர்த்தி வருகிறார்கள். நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் இந்த ரேசில் இருப்பதாக கூறப்படுகிறது.

    அண்ணாமலைக்கே மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. மாற்றுவதாக இருந்தால் யாருக்கு கொடுக்கலாம் என்பது பற்றி பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன. இதுவரை நாடார், கவுண்டர், தலித், பிராமணர் ஆகிய சமூகங்களை சேர்ந்தவர்கள் தலைவர்களாக இருந்துள்ளார்கள். எனவே பெரும்பான்மையாக இருக்கும் தேவர் சமூகத்துக்கு வழங்கலாம். அதன்படி நயினார் நாகேந்திரனை தேர்வு செய்யலாம் என்கிறார்கள்.

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் அதிரடியாக பேசக்கூடியவர். கவர்னர் பதவியை உதறிவிட்டு தேர்தல் களத்துக்கு வந்தார். வெற்றி பெறாவிட்டாலும் 2-ம் இடத்துக்கு வந்தார். எனவே அவரை தேர்வு செய்யலாம் என்கிறார்கள்.

    அதே போல் மத்திய மந்திரி எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோரும் தேர்வு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி கட்சி நிர்வாகிகள் கூறும்போது, "தலைவர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்து விட்டது. வருகிற 6-ந்தேதி பிரதமர் மோடி ராமேசுவரம் வருகிறார். அவர் வந்து சென்ற பிறகு தமிழ் புத்தாண்டு தினத்தில் (ஏப்ரல் 14) அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    தமிழ் புத்தாண்டு தினத்தில் கேரளாவில் விஷு பண்டிகை கொண்டாடப்படும். கேரளாவுக்கும் புதிய மாநில தலைவரை நியமிக்க வேண்டும். எனவே இரு மாநிலங்களுக்கும் மகிழ்ச்சிகரமான புத்தாண்டு தினத்தில் புதிய தலைவர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றனர்.

    • அமலாக்கத் துறை சார்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • மனுவில், டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தன.

    சென்னை:

    சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் மதுபான கொள்முதல் நடவடிக்கைகளில் ரூ.1000 கோடி வரை முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அடிப்படை கட்டமைப்புக்கு விரோதமானது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானதாக அறிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக உள்துறை செயலாளர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும். எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்களையும் அமலாக்கத்துறை தெரிவிக்க உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நிலையில் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அறிவித்தனர். இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும் படியும் பரிந்துரைத்தனர்.

    அதே நேரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட்டு கோரிக்கை வைக்காமல், பொத்தாம் பொதுவாக உள்ளதால் அதை திருத்தம் செய்து புதிய மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

    அதன்படி டாஸ்மாக் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்ட டாஸ்மாக் நிறுவனமும், தமிழக அரசும் இணைந்து திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்து உள்ளன. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    அப்போது அமலாக்கத்துறை சார்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தமிழக அரசின் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஆரம்ப கட்டத்திலே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடாது. அமலாக்கத்துறையின் சட்டப்பூர்வமான விசாரணையை திசை திருப்பும் வகையில் இந்த வழக்குகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ளது. தமிழக அரசுக்கு அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு ஆணையத்திடம் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.

    ஆனால் அங்கு எந்தவிதமான வழக்கும் தொடராமல் நேரடியாக உயர்நீதிமன்றத்தை நாடியது தவறானது. கடந்த காலங்களில் டாஸ்மாக் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது" என்று கூறப்பட்டிருந்தது.

    இதையடுத்து இந்த பதில் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை 8ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், 7 ந்தேதி பதில் மனுக்களை தாக்கல் செய்து ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த வழக்கு 8 மற்றும் 9-ந்தேதிகளில் விசாரிக்கப்படும். அனைத்து தரப்பும் தவறாமல் வாதங்களை முன் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    • பள்ளிக்கு கூடுதல் கட்டடம் வேண்டும் என கேட்கும்போது அதற்கு சாத்தியம் இல்லை என எப்படி கூற முடியும்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சி பாகுபாடின்றி கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக தெரிவித்தார்.

    தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

    சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற சாத்தியமில்லை என கூறுவதா? என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

    மேலும், பள்ளிக்கு கூடுதல் கட்டடம் வேண்டும் என கேட்கும்போது அதற்கு சாத்தியம் இல்லை என எப்படி கூற முடியும். அறிவித்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தான் கேள்வியை முன்வைக்கின்றோம் என்று கூறினார்.

    எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, சாத்தியக்கூறு இல்லை என்று கூறும் பதிலில் உள்நோக்கம் இல்லை. எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை முறையாக ஆய்வு செய்த பின்னரே சாத்தியக்கூறு உள்ளதா? இல்லையா? என கூறுகிறோம் என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சி பாகுபாடின்றி கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக தெரிவித்தார்.

    ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்கள் தொகுதிக்கு 10 திட்டங்களை முன்வைக்கலாம். சாத்தியமான திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி வருகின்றனர்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா இன்று நடை பெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம், தேர் திருவிழா வெகு விமரிசியாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    ஒவ்வொரு நாளும் பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா இன்று நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து நாளை தேர் திருவிழா நடைபெறுகிறது. வருகிற 5-ந் தேதி பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் நடப்பட்ட கம்பங்கள் எடுக்கப்பட்டு ஊர்வலமாக வந்து காவிரி ஆற்றில் விடப்படுகிறது. கோவில் திருவிழா காரணமாக ஈரோடு மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதன் வளாகத்திலேயே பழச் சந்தையும் செயல்பட்டு வருகிறது.

    தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், பெங்களூர், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எப்பவும் வ.உ.சி மார்க்கெட் ஆட்கள் நடமாட்டமாக பரபரப்புடன் காட்சியளிக்கும்.

    இந்நிலையில் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி இன்று காலை ஆயிரக்கணக்கான காய்கறி வியாபாரிகள் கருங்கல்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் புனித நீரை எடுத்து ஊர்வலமாக வந்து ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

    இன்று காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட தகவல் தெரியாமல் ஏராளமான பொதுமக்கள் காய்கறி வாங்க வந்திருந்தனர். விடுமுறை அளிக்க ப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ×