என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப்பெரிய தவறாகும்.
- இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்.
மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கருணை உள்ளத்தோடு "மாற்றுத் திறனாளிகள்"" என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத்திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் - வருத்தமும் அடைந்தேன். கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப்பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் தளபதி அவர்கள், எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
- பொன்முடி வகித்து வரும் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- பொன்முடி பதவி பறிக்கப்பட்ட நிலையில் திருச்சி சிவாவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து தி.மு.க.வில் அமைச்சர் பொன்முடி வகித்து வரும் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
பொன்முடி வகித்து வரும் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பொன்முடி பதவி பறிக்கப்பட்ட நிலையில் திருச்சி சிவாவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவாவை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தி.மு.க. துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- மண விழாவில் பூஜிக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது.
- பழனியாண்டவர் குடும்பத்தினர் தேங்காயை ஏலம் எடுத்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியில் 350 ஆண்டுகள் பழமையான சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணத்தில் திருமாங்கல்யம் சுற்றப்பட்டு வைத்திருந்த தேங்காய் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மண விழாவில் பூஜிக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. ரூ.5 ஆயிரத்தில் தொடங்கிய ஏலம் படிப்படியாக உயர்ந்து ரூ.52 ஆயிரத்தில் நிறைவடைந்தது.
போடி குளாளர் பாளையத்தைச் சேர்ந்த பழனியாண்டவர் குடும்பத்தினர் நீண்ட போட்டிக்கு பின்பு அந்த தேங்காயை ஏலம் எடுத்தனர். கடந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில் ஒரு தேங்காய் ரூ.30 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த ஆண்டு அதை விட ரூ.22 ஆயிரம் கூடுதலாக ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூஜிக்கப்பட்ட இந்த தேங்காயை தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்டால் ஐஸ்வர்யம் பெருகுவதுடன் குடும்ப ஒற்றுமை, வியாபார விருத்தி உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பல்வேறு கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.
- தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் மறைவிற்கு நேரில் சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். இன்று பல்வேறு கட்சி தலைவர்களை அவர் சந்திக்க உள்ளார். இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி இன்று முடிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா புறப்பட்டு சென்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் மறைவிற்கு அவரை நேரில் சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார்.
- இன்று அதிகாலை 2.15 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
- ரெயில்கள் தாமதம் காரணமாக 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
நாகர்கோவில்:
நாகர்கோவில் சந்திப்பு மற்றும் டவுன் ரெயில் நிலையங்களில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் அருகே உள்ள பழையாற்றில் பழைய இரும்பு பாலம் உள்ள நிலையில் புதிதாக 2 பாலங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து பழைய பாலத்தின் தூண்களை பலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது.

பழையாற்றை ஒட்டி உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் வெளியே செல்ல வசதியாக புதிய பாலத்தில் தண்டவாளத்தின் கீழ் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பழைய தண்ட வாளத்தின் கீழ் பகுதியிலும் புதிதாக குழாய் அமைக்க ரெயில்வே துறை நேற்று நடவடிக்கை எடுத்தது. குழாய் அமைக்க வேண்டிய பகுதியில் தண்டவாளத்தை முற்றிலும் அகற்றிவிட்டு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பள்ளம் தோண்டி அதன் பிறகு குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து எதுவும் இல்லாததால் அந்த நேரத்தில் பணியை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் நேற்று இரவு 11 மணிக்கு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். தண்டவாளத்தை அப்புறப் படுத்திவிட்டு அந்த பகுதியில் 12 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது.
இந்த பணியின் போது இன்று அதிகாலை 2.15 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களான கோவையைச் சேர்ந்த ஜானகிராமன் (வயது47), பாளையங்கோட்டையை சேர்ந்த சிங்கராஜா (39), மதுரையை சேர்ந்த பால கிருஷ்ணன் (42) ஆகியோர் சிக்கி கொண்டனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மண்ணுக்குள் சிக்கிய 3 தொழிலாளர்களும் மீட்கப்பட்டு 108 ஆம்பு லன்சு மூலமாக சிகிச்சைக் காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மண்சரிவு ஏற்பட்டதை யடுத்து அந்த பகுதியில் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் குழாய் பதிக்கும் திட்டத்தை கை விட்டு விட்டு உடனடியாக ரெயில் போக்குவரத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தோண்டப்பட்ட பள்ளம், மணல் மற்றும் ஜல்லிக்கற்கள் கொண்டு மூடப்பட்டது. இந்த பணி முடிய காலை 6 மணி வரை ஆகிவிட்டது. இதன் காரணமாக நாகர்கோவில், கன்னியாகுமரி வரும் ரெயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப் பட்டன.
சென்னை, பெங்களூரூ, கோவையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாங்குநேரி, மேலப்பாளையம், நெல்லை, கோவில்பட்டி நிலையங்களில் நிறுத்தப்பட்டன. இதனால் அந்த ரெயில்களில் வந்த பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட னர்.
மண் சரிவு சரி செய்யப்பட்ட பின்பு தான் இந்த ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்பட்டன. மேலும் பணி நடத்த இடத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்க அறிவுறுத்தப்பட்டன. அந்த பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு அதி காலை 4.40 மணிக்கு வர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதமாக காலை 7.40 மணிக்கு வந்தடைந்தது.
இதேபோல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 3½ மணி நேரம் தாமதமாக காலை 8.05 மணிக்கு தான் நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
தாம்பரம்-நாகர்கோவில் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் 8.45 மணிக்கும், பெங்களூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.30 மணிக்கு வந்து சேர்ந்தது. வழக்கமாக இந்த ரெயில் காலை 7.20 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் டவுன் நிலையம் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.15 மணிக்கு வந்து சென்றது. கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக மும்பை செல்லும் சிறப்பு ரெயில் இன்று காலை 3.15 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு வந்தது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த பிறகு அந்த ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு காலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இதற்கிடையில் இணைப்பு ரெயில்கள் தாமதம் காரணமாக 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் பயணிகள் ரெயில், நாகர்கோவில்-கொச்சிவேளி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
- அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- தி.மு.க.வில் அமைச்சர் பொன்முடி வகித்து வரும் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தி.மு.க.வில் அமைச்சர் பொன்முடி வகித்து வரும் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொன்முடி வகித்து வரும் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1200 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1000 கனஅடியாக குறைந்து வந்தது.
நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- தலைமை பீடமாகவும் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
- நீண்ட வரிசையில் நின்று பாத தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மாதம் 15 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் ஆழி தேரோட்டம் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.
இந்தநிலையில் பங்குனித் திருவிழாவின் அடுத்த முக்கிய நிகழ்வான தியாகராஜர் இடதுபாத தரிசனம் அருளும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பாத தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை, மகாஅபிசேகம், நடராஜன் அபிசேகம் ஆகியவை நடைபெற்றது. பாத தரிசனத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்: கருண் கரட் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- டி.டி.வி.தினகரனுக்கு நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதி.
- டி.டி.வி.தினகரனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டி.டி.வி.தினகரனுக்கு நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அதனை தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் டி.டி.வி.தினகரன் தரப்பில், வழக்கமான பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காதணி விழா நடத்துவது வழக்கம்.
- குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவர் முருகப்பெருமான்.
திருச்செந்தூர்:
ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் சாஸ்தா கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்துக்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடும் சாஸ்தா கோவிலுக்கு சென்று பொங்கல் வைப்பது, குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காதணி விழா நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று ஏராளமானவர்கள் திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள குன்றுமேலய்யன் சாஸ்தா, இல்லங்குடி சாஸ்தா, அல்லி ஊத்து கல்லால் அய்யனார், கலியுக வரதர் சாஸ்தா, கற்குவேல் அய்யனார், மருதமலை அய்யனார், அருஞ்சுனை காத்த அய்யனார், தலையூன்றி சாஸ்தா போன்ற தங்கள் குலதெய்வமான சாஸ்தா கோவிலில் வழிபாடு செய்தனர்.
குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானை வழிபாடு செய்தால் சாஸ்தாவை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
உத்திரத்தை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6மணிக்கு வள்ளியம்மை தபசு காட்சிக்கு எழுந்தருளுதல் நடைபெற்றது.
மாலை 3மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் புறப்பாடு, மாலை 6 மணிக்கு தோள் மாலை மாற்றுதல், இரவு 10 மணிக்கு வள்ளி திருக்கல்யாணம் கோவில் வளாகத்தில் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- காவிரி நதிநீர் உரிமை குறித்து ஒரு தீர்மானம் கூட கொண்டுவரவில்லையே ஏன்?
- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், நீட் என்ற தேர்வை அறிமுகம் செய்தவரே உங்கள் கட்சியை சேர்ந்த அன்றைய மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தானே?
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொதுவாக, ஒரு ஆட்சிக்கான அடையாளமாக, அந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களே திகழும். ஆனால், ஸ்டாலின் மாடல் தி.மு.க. ஆட்சியோ, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பறிபோன பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம், எங்கும் எதிலும் ஊழல் என குறைகள் மட்டுமே நிறைவாக இருக்கும் ஒரு அவல ஆட்சியாக இருக்கிறது.
இதனை ஸ்டாலினும் நன்கு உணர்ந்தே இருக்கிறார். அதனால் தான், கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து இவைகளை திசைதிருப்ப வரிசையாக நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்.
கவுண்டமணி ஒரு நகைச்சுவையில் இலையில் செங்கலை வைத்துவிட்டு "சோத்துல கல்லு இருக்கு" என்பார். அதுபோலத் தான் இருக்கின்றன மு.க.ஸ்டாலின் கொண்டுவரும் தீர்மானங்கள்!
இந்த கருணாநிதி காலத்து டெக்னிக் எல்லாம் இன்னும் மக்களிடம் செல்லுபடியாகும் என்று நம்புகிறீர்களா? வாய்ப்பே இல்லை!
இவ்வளவு தீர்மானங்களை வரிசை கட்டிக்கொண்டு வருபவர், தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சனையான காவிரி நதிநீர் உரிமை குறித்து ஒரு தீர்மானம் கூட கொண்டுவரவில்லையே ஏன்?
எஜமான விசுவாசம் தடுக்கிறதா மு.க.ஸ்டாலின் அவர்களே?
கர்நாடக காங்கிரஸ் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோருடன் பல கூட்டங்களில் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கும் நீங்கள், ஒரு முறையாவது காவிரி குறித்து பேசியதுண்டா?
"மேகதாது அணை தமிழ்நாட்டுக்கு நன்மை தரும்" என்று தமிழ்நாட்டிலேயே கர்நாடக முதல்வரை பேசவிட்டு வேடிக்கை பார்த்த கொத்தடிமைகள் தானே நீங்கள்?
கேரள கம்யூனிஸ்ட் முதல்வருடன் பல மேடைகளைப் பகிர்ந்துகொண்டு கைகுலுக்கிக் கொண்டிருக்கும் நீங்கள்,
ஒரு முறையாவது முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் மாநில உரிமை குறித்து , ஒரு கோரிக்கையாவது வைத்தது உண்டா?
2009-14 UPA கூட்டணி ஆட்சியில், முதுகைக் காட்டினால் கூட கையெழுத்து போடும் அளவிற்கு காங்கிரசுக்கு அடிமை சாசனம் எழுதிவிட்டு மத்திய அரசில் பதவி சுகத்தை அனுபவித்த எஜமான விசுவாசிகள் நீங்கள் தானே?
இலங்கை இறுதிப் போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, காங்கிரசுக்கு சாமரம் வீசிக்கொண்டு, எத்தனை மந்திரி என விவாதித்துக் கொண்டிருந்த சுயநலவாதிகள் தானே நீங்கள்?
2ஜி இமாலய ஊழல் வழக்கில் திகார் சிறையின் கதவுகள் அழைத்தபோதும், அறிவாலய மேல் மாடியில் ரெய்டு நடந்த போதும், அன்றைக்கு உங்களை மிரட்டிய உங்கள் எஜமானரான காங்கிரஸ் கட்சியிடம் சரணாகதி அடைந்து, உங்கள் கட்சியையே அடகு வைத்தவர்கள் தானே நீங்கள்?
அறிவாலயக் கதவுகளை மூடிக்கொண்டாலும் உங்களின் கெஞ்சல், கதறல் சத்தம் அன்றைக்கு தமிழ்நாடு முழுக்க தான் நன்றாக கேட்டதே!
இவ்வளவு ஏன், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், நீட் என்ற தேர்வை அறிமுகம் செய்தவரே உங்கள் கட்சியை சேர்ந்த அன்றைய மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தானே?
இப்படிப்பட்ட வரலாறு கொண்ட உங்களுக்கு, அ.இ.அ.தி.மு.க. பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
முதலமைச்சருக்கு நேரடியாக சவால் விடுகிறேன்- தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன், மேகதாது அணை, காவிரி நதிநீர் விவகாரங்களில் செயல்படும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மதிக்காமல் செயல்படும் கேரள கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்தும் அரசினர் தனித் தீர்மானத்தை முடிந்தால் சட்டப்பேரவையில் கொண்டுவாருங்கள் பார்ப்போம்!
(பி.கு. : அமைச்சர் நேருவுக்காக "தொட்டுப் பார்- சீண்டிப்பார்" வீடியோ ஷூட்டிங் முடிந்துவிட்டதா? எப்போது ரிலீஸ்? சீரியஸ் அரசியலுக்கு நடுவில் மக்களுக்கு அந்த வீடியோ நல்ல நகைச்சுவையாக இருக்கும் என்பதால், அதனை தவறாமல் வெளியிட வேண்டுமென மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.)
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஈரோடு மாவட்டத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
- வீடுகளில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ஈரோடு:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சர்வ சாதாரணமாக 100 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.
ஈரோடு மாவட்டத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி வருகின்றனர். வீடுகளில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மதிய நேரங்களில் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, மேட்டூர் ரோடு, ஆர்.கே.வி. ரோடு ஆகியவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெளியே செல்லும் பெண்கள் குடையை கொண்டு செல்கின்றனர். இன்னும் சிலர் முகத்தில் துணியை மறைத்து செல்கின்றனர்.
வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்பானங்களை அதிக அளவில் பருகி வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் முலாம்பழம், நுங்கு, கரும்பு பால், இளநீர் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மக்கள் திணறி வருகின்றனர். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.






