என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பா.ஜ.க. தலைவா்களை தனித்தனியாக சந்தித்து தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி வியூகம் குறித்து கலந்தாலோசனை நடத்துகிறாா்.
    • பா.ஜ.க. முக்கிய நிா்வாகிகள் சென்னையில் தங்கி இருக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, சென்னைக்கு மே 3-ந்தேதி வருகை தரவுள்ளாா். சென்னை வரும் பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, பா.ஜ.க. மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

    மேலும், பா.ஜ.க. தலைவா்களை தனித்தனியாக சந்தித்து தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி வியூகம் குறித்து கலந்தாலோசனை நடத்துகிறாா்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவானதைத் தொடா்ந்து கூட்டணியை விரிவாக்கம் செய்து பலப்படுத்துதல், கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அவா், கட்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளாா்.

    அவரது வருகையையொட்டி பா.ஜ.க. முக்கிய நிா்வாகிகள் சென்னையில் தங்கி இருக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.

    டெல்லி சென்றுள்ள தமிழக பா.ஜ.க. தலைவா் நயினாா் நாகேந்திரன், பிரதமா் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளாா்.

    அவா்களது ஆலோசனை படி பா.ஜ.க.வினரையும், கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து செல்வது தொடா்பாக ஜெ.பி.நட்டா வருகையின்போது ஆலோசனை நடத்தப்படும் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

    • ஊக்கத்தொகை கொடுக்கிறோம் என்று உறுதி அளித்துவிட்டு தமிழ்நாடு அரசு கொடுக்காமல் இருந்ததில்லை.
    • ரூ.1.2 லட்சம் கோடி அளவிற்கான மின்னணு பொருட்கள் நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

    சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    * நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் மின்னணு உதிரி பாகங்கள் சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    * மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு இணையாக இந்த திட்டத்தில் grant வழங்கப்பட்டுள்ளது.

    * ஊக்கத்தொகை கொடுக்கிறோம் என்று உறுதி அளித்துவிட்டு தமிழ்நாடு அரசு கொடுக்காமல் இருந்ததில்லை.

    * தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கையால்தான் முதலீட்டாளர்கள் அதிக முதலீடுகள் செய்கின்றனர்.

    * ரூ.1.2 லட்சம் கோடி அளவிற்கான மின்னணு பொருட்கள் நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

    * தமிழ்நாட்டில் ரூ.30000 கோடி முதலீடுகளை ஈர்த்து 60000 நபர்களுக்கு வேலை வழங்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எத்தகைய கூட்டணி வந்தாலும் நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
    • நெருக்கடிகள் பலவற்றை சந்தித்தே வளர்ந்த இயக்கம் தி.மு.க.

    சென்னை:

    அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலுவின் இல்ல திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு ஊர்ந்து கொண்டிருந்ததாக கூறியதால் அ.தி.மு.க.வினருக்கு கோபம் வருகிறது.

    * ஊர்ந்து என்று கூறியது பிடிக்கவில்லை என்றால் தவழ்ந்து என்று போட்டுக்கொள்ளலாம் என்றேன்.

    * தவழ்ந்து என நான் கூறவில்லை, எடப்பாடி பழனிசாமியே தன்னை அப்படிதான் வெளிப்படுத்துகிறார்.

    * மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே எடுத்துக்காட்டான ஆட்சியை நாம் நடத்தி கொண்டிருக்கிறோம்.

    * 2026-ம் ஆண்டும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும். எதிர்க்கட்சி கூட்டணியை ஒரு கை பார்ப்போம்.

    * வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

    * நம்மை எதிர்ப்போர் யாராக இருந்தாலும் எத்தகைய கூட்டணி வந்தாலும் நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

    * நெருக்கடிகள் பலவற்றை சந்தித்தே வளர்ந்த இயக்கம் தி.மு.க.

    * எமர்ஜென்சியை பார்த்து பயப்படாமல் தீரத்துடன் எதிர்த்தவர்கள் நாம் என்றார்.

    • உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்!
    • எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம்…

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம்.

    மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! I love you Kovai and Kongu Thangams.

    நம் மீது இத்துணை அன்பைக் காட்டும் உங்களுக்கும் மக்களுக்கும், உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் நாம் காட்டும் அன்புக் காணிக்கையாக இருக்கும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம்.

    இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமெங்கும் உள்ள நம்முடைய இளம் தோழர்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்கள் சில உண்டு. அவை அன்புக் கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

    நம்முடைய இளைய தோழர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன.

    அதனால இப்ப கொஞ்சம் உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன்…

    நம்ம பயணத்தப்ப ஆம்புலன்ஸ் வந்ததும் அதுக்கு வழிய சரிபண்ணிவிட்ட உங்க செயல பாராட்டியே ஆகணும்…அதுதான் நீங்க…

    இப்டில்லாம் செய்ற நீங்க, அன்பின் காரணமா செய்ற சிலதையும் சொல்லி ஆகணும்…

    உங்களோட அன்ப புரிஞ்சுக்கறேன் ஃப்ரெண்ட்ஸ்…

    அதுக்கு நான் தலைவணங்கவும் செய்யறேன்…

    ஆனா எப்பவுமே நம்மளோட அன்பை வெளிப்படுத்துற விதம், அதீதமாகவே இருந்தாலும் அது மத்தவங்களுக்கு முன்னுதாரணமாத்தான் இருக்கணும்…

    எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம்…

    நீங்கதான் எனக்கு precious…

    இவ்ளோ அன்போட இருக்கிற நீங்க எனக்குக் கிடைச்சதுக்கு நான் என்ன தவம் செஞ்சேன்னு எனக்குத் தெரியல…

    உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்…

    உங்க அன்ப நான் மதிக்கறேன்… இனி எப்பவும் மதிப்பேன்… அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது…

    நான் இங்கே சொல்லி இருக்கற மாதிரி, இத நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாகவோ கூட எடுத்துக்கங்க…தப்பே இல்ல…

    நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம் 100% சமரசமற்றதாத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ்…

    அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும்...

    இனி அடுத்தடுத்து நம்ம மக்கள சந்திக்கிற நிகழ்ச்சிகளெல்லாம் இருக்கறதால நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன்… செய்வீங்க… செய்றீங்க…

    ஓகே?...

    Thank u friends….

    Love you all…

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தே.மு.தி.க. பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கட்சியின் தலைமை நிலைய செயலாளராக பார்த்தசாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாதம்பட்டி கே.வி.மஹாலில் இன்று தே.மு.தி.க. தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதை பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த், அவைத் தலைவராக டாக்டர் இளங்கோவன், பொருளாளராக எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளராக அழகாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.மோகன்ராஜ், துணை செயலாளர்களாக எம்.ஆர்.பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில்குமார், சுபா ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    மேலும் இக்கூட்டத்தில் தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக விஜயபிரபாகரன் நியமிக்கப்பட்டார்.

    இதில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர், தருமபுரி நகர செயலாளர் சுரேஷ், மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.கே.கணேசன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பி.கே.குமார், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், அணி துணை செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அவைத் தலைவர்கள், மாவட்ட பொருளாளர்கள், மாவட்ட துணை செயலாகள், ஒன்றிய, நகர செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் மற்றும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாநில செயலாளர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

    • புகாரையடுத்து மகளிர் ஆணைய அதிகாரிகள் பல்கலைக் கழகத்தில் நேரடி விசாரணை நடத்தினர்.
    • பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லை டவுனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். தொடர்ந்து அங்கு தற்காலிக பேராசிரியராக சில வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் ஆராய்ச்சி படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது அங்கு வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த அம்பையை சேர்ந்த கண்ணன்(வயது 55) என்பவர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாகவும், தனது ஆராய்ச்சி படிப்பை முடிப்பதற்கு பல்வேறு தடைகளை அவர் ஏற்படுத்தியதாகவும் அந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை மாநில மகளிர் ஆணையம், பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்டோருக்கு சமீபத்தில் புகார் மனு அளித்தார்.

    அந்த புகாரையடுத்து மகளிர் ஆணைய அதிகாரிகள் பல்கலைக் கழகத்தில் நேரடி விசாரணை நடத்தினர்.

    இதனிடையே இளம்பெண் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாணவியாக இருந்தபோது பேராசிரியர் கண்ணன் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்ததாகவும், தற்போது தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வரும் நிலையில் அங்கு படிக்கும் மாணவர்களை எனக்கு எதிராக தூண்டி விட்டு அசவுகரியமான சூழ்நிலையை உருவாக்கியதாகவும் புகார் அளித்தாா.

    அதன் அடிப்படையில் நெல்லை மாநகர மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் கீதா, டவுன் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதா உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட அந்த முன்னாள் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் அவரது புகார் மனு குறித்து பல்கலைக்கழக அளவில் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்திட நேற்று முன்தினம் துணை வேந்தர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று முதல் விசாரணை தொடங்கி உள்ளது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி, டவுன் மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் கண்ணன் மீது இந்திய தண்டனை சட்டம் 354(ஏ)-பாலியல் துன்புறுத்தல் என்ற பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மற்றும் நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.15 அடியாக உள்ளது.

    ஆண்டிபட்டி:

    உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 12-ந்தேதி நடைபெறுகிறது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரள்வார்கள். இதனை முன்னிட்டு வைகை அணையில் 4 நாட்களுக்கு முன்னர் தண்ணீர் திறக்கப்பட்டு மதுரைக்கு சென்றடையும் வகையில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இது குறித்து அணை அதிகாரிகள் கூறுகையில், மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து மே 8-ந்தேதி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மற்றும் நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.

    இன்று காலை நிலவரப்படி 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 55.76 அடி நீர் மட்டம் உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2842 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.15 அடியாக உள்ளது. வருகிற 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. அணையில் 1585 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.80 அடியாக உள்ளது. 39 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 99.83 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 39.20 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. போடியில் மட்டும் 21.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் ரூ.2 ஆயிரத்து 200 உயர்ந்து, சவரன் ரூ.74 ஆயிரத்து 320 எனும் இமாலய உச்சத்தை எட்டியது. இது, நடுத்தர, ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால், மறுநாளே அந்தர் பல்டியாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவு சரிவை சந்தித்தது.

    அதாவது, கடந்த 23-ந்தேதி, சவரன் ரூ.2 ஆயிரத்து 200 குறைந்து, மீண்டும் ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, 24-ந்தேதி ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.72 ஆயிரத்து 40-க்கு விற்கப்பட்டது. பின்னர், 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையில் தொடர்ந்து 4 நாட்கள், தங்கம் விலை எந்தவித மாற்றங்களும் இன்றி இருந்தது. இதனை தொடர்ந்து, நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,840-க்கும் ஒரு கிராம் ரூ.8,980-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், அட்சய திருதியை நாளான இன்று தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.8,980-க்கும், ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனையாகிறது.

    3-வது நாளாக இன்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    29-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    28-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520

    27-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    26-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    25-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    29-04-2025- ஒரு கிராம் ரூ.111

    28-04-2025- ஒரு கிராம் ரூ.111

    27-04-2025- ஒரு கிராம் ரூ.112

    26-04-2025- ஒரு கிராம் ரூ.112

    25-04-2025- ஒரு கிராம் ரூ.111

    • காலை முதலே சென்னையில் உள்ள அனைத்து நகைகக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.
    • நள்ளிரவு வரை விற்பனை நடைபெறும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வருகிற 3-வது திதியை 'அட்சய திருதியை' என்று குறிப்பிடுவார்கள். அந்த நாளில் சிறிய அளிவிலாவது தங்கம் உள்பட மங்கல பொருட்களை வாங்குவது வழக்கம். தங்க ஆபரணங்களை வாங்குவது நன்மை தரும் என்றும் அதன் மூலம் மேலும், மேலும் தங்கம் அபிவிருத்தியாகும் என்பது மக்களின் நம்பிக்கை.

    இந்த நிலையில், இன்று அட்சய திருதியை ஆகும். இதனால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் காலை முதலே சென்னையில் உள்ள அனைத்து நகைகக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு வரை விற்பனை நடைபெறும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் விலையில் மாற்றமில்லை. ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.8,980-க்கும் ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனையாகிறது.

    காலை 10.30 மணிக்கு தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும் என்பதால் காலையில் நகைக்கடைகளுக்கு செல்வோர் பழைய விலையில் தங்கம் வாங்கலாம் என நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். 

    • விடுதிக்குள் வெளிநபர்களை அனுமதிக்கக்கூடாது.
    • பெண்கள் படிக்கும் பள்ளிகளில் பெண்கள் மட்டுமே பணியில் இருத்தல் வேண்டும்.

    சென்னை:

    அனைத்துவகை பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சூழலை ஏற்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை சில நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பள்ளிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிமுறைகள் வருமாறு:-

    * பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அடுத்த 6 மாத காலத்துக்குள் முறையான பயிற்சி அளித்தலை உறுதிசெய்திட வேண்டும். அதன் பின்னர் 6 மாதத்துக்கு ஒருமுறை புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும்.

    * மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர்கள் அமர்த்தப்பட வேண்டும். அதேபோல் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்வி சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிரியர்களே மாணவிகளை அழைத்துசெல்லவேண்டும். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், சாரண-சாரணியர் இயக்க முகாம்களில் மாணவிகளுடன் பெண் ஆசிரியர்கள் மட்டுமே தங்குவது உறுதிசெய்யப்பட வேண்டும்.

    * விடுதிக்குள் வெளிநபர்களை அனுமதிக்கக்கூடாது. விடுதி பராமரிப்பு பணிகளுக்காக அனுமதிக்கப்படும் பணியாளர்கள், பெண்விடுதி காப்பாளர்கள் மேற்பார்வையில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும்.

    * பாலியல் குற்றங்கள் பற்றி குழந்தைகள் புகார் அளித்தாலோ, பாலியல் குற்றங்கள் பற்றி தெரியவந்தாலோ, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக போலீசாருக்கு புகார் அளிக்கவேண்டும். அவ்வாறு புகார் அளித்தவுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டும். மாணவர் மனசு புகார் பெட்டி அனைத்து பள்ளிகளிலும் நிறுவப்பட்டு, அது தினசரி பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புகார் அளிக்கும் குழந்தைகளின் விவரங்களை வெளியிடக்கூடாது என்பதால், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத இடத்தில் இந்த பெட்டியை வைக்கவேண்டும்.

    * கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி.டி.வி.) அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் செல்லும் அறைகள், விளையாட்டு மைதானம், வகுப்பறை முகப்பு, உள்ளே வருவது மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் அமைத்திட வேண்டும்.

    * ஆண் ஆசிரியர்கள், பணியாளர்கள் அறையில் குறிப்பாக பெண் குழந்தைகள் செல்வதை அனுமதிக்கக்கூடாது. இதனை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும். சிறப்பு வகுப்புகள் பள்ளி நேரமில்லாமல் நடத்தப்படும்போது, குறைவான மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதால், கண்காணிப்பதை கட்டாயமாக செயல்படுத்த ஒரு பெண் பணியாளர்கள் பொறுப்பாக மாற்றுப் பணியை செய்யவேண்டும்.

    * பெண்கள் படிக்கும் பள்ளிகளில் பெண்கள் மட்டுமே பணியில் இருத்தல் வேண்டும். இருபாலர் பள்ளிகளில் குறைந்தது 50 சதவீதம் பணியாளர்கள் பெண்களாக இருக்கவேண்டும்.

    * பாலியல் குற்றச்சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்பதில் அரசு மிகவும் உறுதியாக இருப்பதால் மேற்கூறியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

    • குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறின.
    • குடோனில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தாண்டிபுரத்தில் பட்டசு குடோனில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குடோன் முற்றிலும் எரிந்து சேதமானது.

    குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறின. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு பலமணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

    குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த குடோனில் அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டதால் மக்களிடையே அச்சம் நிலவியது. மேலும் குடோன் உரிமையாளர் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

    குடோனில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
    • சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

    சென்னை:

    சென்னை கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    வரும் சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்.

    அரசு பணத்தை தி.மு.க. அமைச்சர்கள் சூறையாடுகிறார்கள் என கூறும் பா.ஜ.க.வின் தமிழிசை சவுந்திரராஜனுக்கு வேறு வேலை கிடையாது. அதனால் தான் சொல்லிக் கொண்டு உள்ளார்.

    நாங்கள் ஏற்கனவே நீண்ட நாட்களுக்கு முன் சட்டசபை தேர்தல் பணியை தீவிரப்படுத்தி பிரசாரத்தை தொடங்கிவிட்டோம் என தெரிவித்தார்.

    ×