என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
- உப்பு உற்பத்தி தொடங்குவதற்கு இன்றும் 10 நாட்கள் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பானது தினமும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், வேதாரண்யம் பகுதியில் நேற்றிரவு திடீரென பெய்த மழையால் உப்பு பாத்திகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் உப்பு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
உற்பத்தியான உப்பை விற்பனை செய்தது போக, மீதமுள்ள உப்பை பாதுகாப்பாக தார்பாய் கொண்டு தொழிலாளர்கள் மூடி வைத்துள்ளனர்.
இதுகுறித்து உப்பள தொழிலாளர்கள் கூறுகையில்:-ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஜூலை வரையிலான 6 மாத காலத்தில் சுமார் 5 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக அவ்வப்போது பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ஆண்டு உற்பத்தி இலக்கான 6.5 லட்சம் டன் உப்பு உற்பத்தியை எட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.
இந்த திடீர் மழையால் உப்பு பாத்திகள் பாதிக்கப்பட்டு உள்ளதால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்குவதற்கு இன்றும் 10 நாட்கள் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- தேனி மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
- கடந்த வாரம் அணையின் கரையோரம் உள்ள பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.
அணையில் இருந்து மதுரை மாவட்ட பாசனத்துக்காக கடந்த 14 நாட்களாக 800 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டது. இன்று காலை முதல் அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கடந்த வாரம் அணையின் கரையோரம் உள்ள பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.41 அடியாக உள்ளது.
நீர்மின் நிலையம் வழியாக பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் இன்று அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 1594 கன அடி தண்ணீர் வருகிறது.
69 கன அடி மட்டும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5421 மி.கன அடியாக உள்ளது. இந்த முறை வைகை அணையில் 71 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு பின்னர் வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்து வருகின்றனர்.
தற்போது தேனி மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும் என்பதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு 1053 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1862 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 134.15 அடியாக உள்ளது. நீர் இருப்பு 5667 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மற்ற அணைகளுக்கும், நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
- தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி ஒரு சவரன் ரூ.75,040-க்கு விற்பனை ஆனது. இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை புதிய உச்சத்தை அன்றைய தினம் தொட்டு இருந்தது. அதன் பின்னரும் விலை அதிகரிக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. எந்த அளவுக்கு உயர்ந்ததோ, அதேபோல் விலை சரியவும் தொடங்கியது.
இடையில் சற்று விலை கூடினாலும், மற்ற நாட்களில் குறைந்த வண்ணமே இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்தை மீண்டும் தாண்டியது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும், ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,295-க்கும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 123 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
03-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320
02-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320
01-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200
31-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360
30-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
03-08-2025- ஒரு கிராம் ரூ.123
02-08-2025- ஒரு கிராம் ரூ.123
01-08-2025- ஒரு கிராம் ரூ.123
31-07-2025- ஒரு கிராம் ரூ.125
30-07-2025- ஒரு கிராம் ரூ.127
- புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியோடும் மங்காத உடல்நலத்தோடும் திகழ்ந்திட விழைகிறேன்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில்,
மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியோடும் மங்காத உடல்நலத்தோடும் திகழ்ந்திட விழைகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மலைப்பகுதிகளில் ஆடு, மாடு மேய்ப்பதை தடுத்தால் மீண்டும் மாடு மேய்க்கும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவோம்.
- சீமான் உள்ளிட்ட அக்கட்சியினர் 56 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாரம்பரிய நாட்டுமாடு இனமான மலைமாடுகளுக்கு வனப்பகுதியில் மேய்ச்சல் அனுமதி வழங்கக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி மாவட்டம் போடி அருகே முந்தல் பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்துக்கு வனத்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால், வனத்துறை மற்றும் போலீசார் முந்தல் அடவுப்பாறை பகுதியில் தடுப்புகள் அமைத்து இருந்தனர்.
தடையை மீறி சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மலைப்பகுதிக்கு சென்றனர். அப்போது கட்சியினர் அங்கு இருந்த தடுப்புகளை அகற்றினர். இதனால் போலீசாருக்கும், அக்கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதன்பிறகு மாடுகளையும் தடையை மீறி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். மாடு மேய்க்கும் போராட்டத்துக்காக சீமான் கையில் கம்புடன் மலையேறினார். அங்கு போராட்டத்தை நடத்திவிட்டு பின்னர் அவர் திரும்பி வந்தார்.
அப்போது பேசிய சீமான் கூறுகையில்,
தேனி மாவட்டத்தில் மலைகளில் கற்குவாரிகள் நடத்த அனுமதி கொடுக்கிறார்கள். ஆனால், பாரம்பரிய மாடுகளை மேய்ப்பதற்கு அனுமதிப்பது இல்லை. வனத்துறையினர் இதற்கு தடை விதித்ததால் 1 லட்சம் மாடுகள் இருந்த இடத்தில், தற்போது 5 ஆயிரம் மாடுகள் தான் உள்ளன. மலைப்பகுதிகளில் ஆடு, மாடு மேய்ப்பதை தடுத்தால் மீண்டும் மாடு மேய்க்கும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவோம் என்று கூறினார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அக்கட்சியினர் 56 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வனத்துறையினர் தடுத்து நிறுத்தியும் அத்துமீறி சென்று மாடு மேய்த்ததால் சீமான் மீது வன உயிரின விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு.
- இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக என்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறேன்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு.
இந்த வகையில், முதலமைச்சர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு பூரண குணமடைந்து இல்லம் திரும்பிய நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன்.
இதேபோன்று அவரது மூத்த சகோதரர் மு.க.முத்து மறைவு குறித்து இரங்கல் தெரிவித்தேன். இந்தச் சந்திப்பு தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. என்னுடைய மனைவியும், என்னுடைய தாயாரும் இறந்தபோது, என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியவர் முதலமைச்சர் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தச் சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், இந்தச் சந்திப்பை வைத்து என்னை தி.மு.க.வின் 'B' Team என்றும், நான் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், தி.மு.க.வில் இணையப் போவதாகவும் பல்வேறு வதந்திகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களும் இதுகுறித்த செய்திகளை கற்பனையாக வெளியிட்டு வருகின்றன. இதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் பயணிப்பவன். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் போவை பொதுத் தேர்தலில்அம்மா அவர்களின் ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதுதான் எங்களின் நோக்கம் என்பதையும், அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ப் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் நான் முதலமைச்சர் அவர்களை சந்தித்தேனே தவிர, இதில் துளியும் அரசியல் ஏதுமில்லை. இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களைப் பார்க்கும்போது, பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழியான "பண்பு தெரிந்தவர்கள் பாராட்டுகிறார்கள். அது இல்லாதவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்" என்பதுதான் என் நினைவிற்கு வருகிறது.
அடுத்தபடியாக, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நிதியை நான் ஏதோ இப்போதுதான் வெளியிடுவதுபோல சில விமர்சனங்கள் எழுகின்றன. இது முற்றிலும் தவறு. சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி 29-08-2024 அன்றே அறிக்கை வெளியிட்டவன் நான்.
இதேபோன்று, தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி விமர்சித்து பேசிய இந்து முன்னணிக்கு கண்டனம் தெரிவித்து 25-06-2025 அன்று அறிக்கை வெளியிட்டவன் நான். அம்மா அவர்களை பா.ஜ.க. முன்னாள் தலைவர் விமர்சித்தபோது அதற்கு கண்டனம் தெரிவித்து 12-06-2023 அன்று அறிக்கை வெளியிட்டவன் நான். இதே போன்று, இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக என்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறேன்.
இஸ்லாமிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வக்ப் வாரிய சட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் வாக்களிக்க உத்தரவிட்டேன். நான் எங்கு இருந்தாலும், தமிழக மக்களின் உரிமை, தமிழக மக்களின் நலன் என்று வந்துவிட்டால் அம்மா அவர்களின் வழியில் செயல்படக் கூடியவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
- தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை, வெப்பசலன மழை கடந்த சில மாதங்களாக கைக்கொடுத்து வருகிறது. இடையில் பல நாட்கள் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இந்த மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குமரி கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இன்று, நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுதினம் (புதன்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதேபோல், இன்று (திங்கட்கிழமை) கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை (செவ்வாய்க்கிழமை) நீலகிரி மாவட்டம், கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை வரையிலும் பெய்யக்கூடும். கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் எதிர்பார்க்க்படுகிறது.
நாளை மறுதினம் (புதன்கிழமை) கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதில் அதிகனமழை வரை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மிககனமழை வரை பெய்யும் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கனமழை வரை பெய்யும் இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
- தேர்தல் யுக்திகள், பரப்புரை வியூகம் குறித்து பாஜக-அதிமுக கூட்டணி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
- ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரமாண்ட விருந்திற்கு நயினார் நாகேந்திரன் ஏற்பாடு.
திருநெல்வேலியில் உள்ள நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த, ஆலோசனைக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
இந்த கூட்டத்தில், தேர்தல் யுக்திகள், பரப்புரை வியூகம் குறித்து பாஜக-அதிமுக கூட்டணி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரமாண்ட விருந்திற்கு நயினார் நாகேந்திரன் ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
- கள நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப தக்கநேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.
அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.
எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துரோகக் கூட்டத்திடமிருந்து மீட்டெடுப்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஏற்படுத்தி நாம் போராடி வருகிறோம். இதில் நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை நாம் எதிர்கொள்ளும் வகையில், எம்.ஜி.ஆரால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், ஜெயலலிதாவால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் செல்லவும், தி.மு.க. ஆட்சியில் தற்போது மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவுப் பாதையில் அழைத்துச் செல்லப்படுவதை மக்களுக்கு எடுத்துக் காட்டவும் பொதுக் கூட்டங்களை கழக நிர்வாகிகள் ஆங்காங்கே நடத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் செய்தித் தொடர்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். இதனை மீறிச் செயல்படுபவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூட்டணி குறித்த முடிவு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் கருத்தினைக் கேட்டு, கள நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப தக்கநேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- செல்வன் முகிலன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா?
- அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
திருப்பத்தூர் அருகே பள்ளியில் மூடப்பட்ட கிணற்றில் மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தில், மாணன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? போன்ற அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டம் தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த செல்வன் முகிலன் என்ற 11 ஆம் வகுப்பு மாணவன், அப்பள்ளியில் உள்ள கிணற்றில் உடலில் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்த மாணவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஒன்றாம் தேதி முதல் வகுப்பிற்கு வராத மாணவனை அவரது பெற்றோரும் போலீசாரும் தேடி வந்துள்ள நிலையில், பள்ளியில் மூடியிருந்த கிணற்றில் பள்ளி சீருடையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. செல்வன் முகிலன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா?
மாணவன் தொலைந்து இரண்டு நாட்களாகியும் பள்ளி நிர்வாகம் பள்ளியின் அனைத்து இடங்களிலும் அவரைத் தேடாதது ஏன்? இதில் அரசியல் தலையீடுகள் ஏதாவது இருக்கின்றனவா? போன்ற அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட வேண்டும். எவ்வித சமரசமுமின்றி இதில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
மேலும், கடந்த நான்காண்டுகளாக மாணவர்களின் மரணங்கள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், படிக்கும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான மனநிலையையும், பள்ளியில் அவர்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையையும் உருவாக்கிடத் தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு முன்னெடுக்க வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகர் சூர்யாவை கட்டியணைத்து கமல்ஹாசன் வாழ்த்தினார்.
- நான் ஓரளவுக்கு நல்லா நடிப்பேன். என் நடிப்பு மேல எனக்கே சந்தேகம் வந்திருச்சு.
நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர்.
மேலும், நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, சிவக்குமார், இயக்குனர் வெற்றி மாறான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன் பங்கேற்றார்.
அப்போது, சூர்யாவை கட்டியணைத்து கமல்ஹாசன் வாழ்த்தினார்.
பின்னர், நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
டீஸர், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா என எவ்வளவோ விழாக்கள் நடத்துகிறோம். அதிலெல்லாம் கிடைக்காத சந்தோசம் எனக்கு இதில் கிடைக்கிறது.
சனாதன சங்கிலிகளை, சர்வாதிகார சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான். இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள்.
நான் ஓரளவுக்கு நல்லா நடிப்பேன். என் நடிப்பு மேல எனக்கே சந்தேகம் வந்திருச்சு. அதனாலதான் இது(டிஷ்யூ பேப்பர்) கொண்டு வந்தேன். பரவால நான் நல்ல நடிகன்தான் அழாம பேசிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குளச்சல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கண்டன உரை.
- பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு விருது.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிந்துள்ளதாவது:-
புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் கடலரிப்பினால் ஏற்பட்ட சேதங்களை மாவட்ட ஆட்சியருடன் சென்று ஆய்வு செய்தோம். இங்கு, தடுப்பு சுவர் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்று வரும் தொடர் பரப்புரை தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.

மாவீரர் தீரன் சின்னமலை அவர்கள் நினைவு தினத்தில் அவர் நமது தாய் நாட்டிற்கு ஆற்றிய ஒப்பற்ற சேவைகளை நன்றியுடன் நினைவு கூர்வோம்.

இந்திய அரசியலமைப்பை அழிக்க முயற்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக குளச்சல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினேன்.
நாகர்கோவில் பட்டு வளர்ப்பு அலகில் பல்நோக்கு கட்டிடம் அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவீன் குமார் அரசு துறை சார்ந்த அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் தொடங்கி வைத்தோம்.

பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் வசந்த் & கோ கல்வி விருதுகள் 2025 இன்று குமரி மாவட்டம் மேற்கு பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

முளகுமூடு குழந்தை ஏசு மகளிர் கல்லூரியில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






