என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்நாட்டில் இன்று முதல் 25-ந்தேதி வரை பரவலாக மழை பெய்யக் கூடும்.
- காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 24-ந்தேதி (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வால், தமிழ்நாட்டில் இன்று முதல் 25-ந்தேதி வரை பரவலாக மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளையும், நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
24-ந்தேதி (திங்கட்கிழமை) கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
- மூத்த உறுப்பினர் முத்துவேலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பேசினார்.
- இதைக் கண்டு சிவகுமார் ஆனந்த கண்ணீர் விட்டார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 41-வது நாளாக நேற்று நடைபெற்ற 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் ஆலங்குளம் தொகுதி சார்பில் பங்கேற்ற தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் கலந்துகொண்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசிய சிவகுமார், "எங்க அப்பா முத்துவேல் 1967-ல் இருந்து திமுக உறுப்பினர். இப்பவும் டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசிட்டு இருக்காரு. உங்க கூட போட்டோ எடுக்க கூட்டிட்டு வரவா?'" என கோரிக்கை விடுத்தார்.
உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அப்பாவுக்கு போன் பண்ணுங்க, நானே பேசி வரச் சொல்லுறேன்" என கூறி, அவரது தந்தையுடனும் போனில் பேசினார். இதைக் கண்டு சிவகுமார் ஆனந்த கண்ணீர் விட்டார்.
இந்நிலையில் நேற்று தொலைபேசியில் பேசிய ஆலங்குளம் மூத்த உறுப்பினர் முத்துவேலை நேரில் அழைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கவுரவித்தார்.
அப்போது முதலமைச்சரிடம் பேசிய முத்துவேல், "எனது மகன்களுக்கு திராவிடமணி, ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கிறேன்" என்று கூறி பெருமிதம் அடைந்தார்.
- தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.
- சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே 2016ல் நகை, பணத்திற்காக தாய், மகளை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வசந்தா (64) மற்றும் அவரது மகள் தேன்மொழி (32) ஆகிய இருவரையும் வீட்டு வேலைக்கு வந்த சத்யா, தவ்லத் பேகம், இவர்களின் நண்பர் ஜெயக்குமார் இணைந்து கொலை செய்துள்ளனர். மேலும், தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.
வீட்டின் உள்ளே மயங்கிக் கிடந்த சிறுமி, மறுநாள் காலை வெளியே வந்தபோதுதான் இந்த கொலைச் சம்பவம் தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் மூவருக்கும் 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
- பல மணி நேரம் உணவுக்காக தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல்.
- திமுக-வை விட வல்லவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகிலே எவரும் இல்லை.
தூய்மை பணியாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படுவதாக திமுக அரசு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
சமீபத்தில், "தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்" என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நிகழ்ச்சி நடத்தினார் பொம்மை முதல்வர்.
இந்நிலையில், சென்னையில் 60% பேருக்குக் கூட உணவு விநியோகம் செய்யப்படவில்லை எனவும், பல மணி நேரம் உணவுக்காக தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
மேலும், தற்போது, கோவையில் செம்மொழிப் பூங்கா ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வரப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
தேர்தலுக்கு முன், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதைக் கேட்கும் தூய்மைப் பணியாளர்கள் ஜனநாயக உரிமையையும் பறித்துக்கொண்டு, அராஜகத்தால் அவர்களின் போராட்டங்களை ஒடுக்கி விட்டு, Damage Control ஆக ஒரு திட்டத்தைத் தருகிறேன் என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நடத்திவிட்டு, அதையும் கைவிட்டுவிட்டார் இன்றைய பொம்மை முதலமைச்சர்.
ஆனால், குப்பை வண்டியில் சாப்பாடு போட்டு இழிவு படுத்துவது என்பது, இதற்கு இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தவே வேண்டாம் என்றே சுயமரியாதை உள்ள எவருக்கும் தோன்றச் செய்கிறது.
எதிர்க்கட்சியாக இருக்கும் போது எளிய மக்களை ஏமாற்றுவதிலும், ஆட்சிக்கு வந்தபின் அதே மக்களை இழிவுபடுத்துவதிலும் திமுக-வை விட வல்லவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகிலே எவரும் இல்லை!
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முறையாக, அவர்களுக்கு உரிய மரியாதையுடன் செயல்படுத்திட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல் ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
- அரும்பாடுபட்டு சாகுபடி செய்த நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டி வரும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையில் நனைந்ததால், அவற்றை கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22% ஆக அதிகரிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு, அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் வருத்தமளிக்கின்றன.
நெல் ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அரும்பாடுபட்டு சாகுபடி செய்த நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டி வரும். எனவே, உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மஜாம் அலியை கைது செய்தனர்.
- வாழ்நாள் முழுவதும் (அதாவது சாகும் வரை) சிறை தண்டனை விதித்து கடந்த 2022-ம் ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த 20.1.2020 அன்று பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்தார். மாலை 4.30 மணி அளவில் வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அந்தப் பகுதியில் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜாம் அலி (வயது 20) என்பவர் அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்றுள்ளான்.
அவர் முட்புதற்களுக்குள் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர் சிறுமி அணிந்திருந்த உடையில் இணைக்கப்பட்டிருந்த கயிற்றின் மூலமாக அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பிவிட்டார். சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அதே பகுதியில் புதருக்குள் பிணமாக சிறுமி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மஜாம் அலியை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. மு வில் மஜாம் அலி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் (அதாவது சாகும் வரை) சிறை தண்டனை விதித்து கடந்த 2022-ம் ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக மஜாம் அலி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் பா.நம்பி செல்வன் ஆஜராகி, சிறுமி கொலை வழக்கில் நேரடி சாட்சியங்கள் கிடையாது. சூழ்நிலை சாட்சிகள் மற்றும் விஞ்ஞானபூர்வமான சாட்சிகளின் அடிப்படையில் கீழ் கோர்ட்டு மேல்முறையீட்டாளருக்கு தண்டனை விதித்து உள்ளது.
இறந்த சிறுமியின் உடலில் மேல்முறையீட்டாளர் முடி இருந்தது. இது அவருடையது தான் என்பது விஞ்ஞானபூர்வமான பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டாளருக்கு கீழ் கோர்ட்டு விதித்த சாகும் வரை தண்டனையை உறுதி செய்தும், அவருடைய மேல்முறையீட்டு மனுவை தள்ளு படி செய்தும் உத்தரவிட்டனர்.
- மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுநரின் அடாவடி.
- நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு.
கோவை - மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை முடக்கி தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
* கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு,
* #SIR மூலம் வாக்குரிமை பறிப்பு, #Delimitation மூலம் தமிழ்நாட்டின் தொகுதி குறைப்பு,
* மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுநரின் அடாவடி,
* நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு,
* தமிழ்மொழி மீதான தாக்குதல் & இந்தித் திணிப்பு
* என அனைத்துக்கும் எதிராகத் #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- “உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது?” என்று கேட்டபோது, “கவர்னர் வேலை பார்ப்பது” என்று தலைவர் கலைஞர் அவர்கள் பதிலளித்தார்.
- காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது.
தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது?" என்று கேட்டபோது, "கவர்னர் வேலை பார்ப்பது" என்று தலைவர் கலைஞர் அவர்கள் பதிலளித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தனது மக்களுக்கான உரிமைகளைக் காத்திடவும் மாநில நலன்களைப் பாதுகாக்கவும் சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை, காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது. இன்று உச்சநீதிமன்றமும் மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.
இனியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர் அவர்கள் அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கியூஆர் குறியீடுகள் ரெயில் நிலைய உணவகங்கள் மற்றும் கடைகளில் இடம்பெற்றிருக்கும்.
- ஸ்கேன் செய்தவுடன், அவர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்து அனுப்பலாம்.
சென்னை:
சென்னையில் உள்ள ரெயில் நிலையங்களில் இயங்கும் கடைகள், உணவகங்களில் குறை தீர்க்கும் திட்டத்தை தெற்கு ரெயில்வே கடந்த வாரம் தொடங்கியது. அதன்படி உணவு பொருட்கள் தரமில்லாவிட்டால் கியூஆர் குறியீடு மூலம் புகார் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது. இதன்மூலம் தரமற்ற உணவை விற்ற ஒரு உணவக ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ரெயில் நிலையங்களில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தரமில்லாமல் உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்கள் மீது புகார் செய்ய கியூஆர் குறியீடு உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த கியூஆர் குறியீடுகள் ரெயில் நிலைய உணவகங்கள் மற்றும் கடைகளில் இடம்பெற்றிருக்கும். பயணிகள் உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்வதையும், கருத்துகளை பகிர்ந்து கொள்வதையும் எளிதாக்குவதை இது நோக்கமாக கொண்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலித்தல், சேவையில் குறைபாடு, உணவின் மோசமான தரம், குறைவான அளவு, சுகாதாரமற்ற தண்ணீர் உள்ளிட்டவை தொடர்பான எந்தவொரு குறைகளையும் இதில் பதிவு செய்யலாம். சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் அமைந்து உள்ள ஒரு சில கடைகளில் உணவின் தரம் மோசமாக இருப்பதாகவும், அதிக விலை வசூலிப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. ரெயில்வே அதிகாரிகள் சரிபார்த்ததில் புகார்கள் உண்மையானவை என்பதை கண்டறிந்து கடைகளின் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்துள்ளனர். சென்னை கோட்டத்தில் உணவு மற்றும் பானங்களை விற்பனை செய்யும் 50 கடைகள் உள்ளன. கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பயணிகளுக்கு அந்த கடையின் இருப்பிடம் மற்றும் நிலைய குறியீடு பற்றிய விவரங்கள் வழங்கப்படுகின்றன. ஸ்கேன் செய்தவுடன், அவர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்து அனுப்பலாம்.
புகார் பதிவு செய்யப்பட்டவுடன், புகார்கள் தொடர்பான எச்சரிக்கைகள் உடனடியாக அந்தந்த ஆய்வாளர்கள் மற்றும் ரெயில் நிலைய மேலாளர்களுக்கு அனுப்பப்படும். இதனால் அவர்கள் பிரச்சினைகளை உடனடியாகக் கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
உணவு பொருட்களின் மீது அதிக கட்டணம் வசூலிப்பதை தடுப்பது மட்டுமல்லாமல், கடைகளில் போலி உணவு பொருட்கள் விற்பனையை தடுக்கவும் உதவும் என்பதால் இந்த முயற்சி மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாதாள சாக்கடை திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள் இல்லாத நிலை இருக்கிறது.
- பிரதமர் மோடி நேற்று கோவையில் கலந்து கொண்ட விவசாயிகள் மாநாட்டில் ரூ.18 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு வழங்கி உள்ளார்.
நெல்லை:
நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண்களுக்கு எதிரான வன்முறை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொலைகளும், கொள்ளைகளும் அதிகரித்து வருகின்றன. 2 நாட்களுக்கு முன்பு மட்டும் 4 கொலைகள் நடந்திருக்கிறது.
கடந்த ஆட்சியை விட குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. கற்பழிப்பு சம்பவங்கள் கடந்த ஆட்சியை விட 17 சதவீதம் உயர்ந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 60 சதவீதம் உயர்ந்திருக்கிறது. போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இவற்றில் தான் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. பாதாள சாக்கடை திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள் இல்லாத நிலை இருக்கிறது. சொத்துவரி, மின்கட்டணம் உயர்ந்துள்ளது.
நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் பெரும்பாலான சாலைகள் பாதாள சாக்கடை பணிக்காக சேதப்படுத்தப்பட்டு கிடக்கிறது. கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதிக்கு ஒரு சதுர அடிக்கு ரூ. 600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் தெளிவாக உள்ளனர்.
பிரதமர் மோடி நேற்று கோவையில் கலந்து கொண்ட விவசாயிகள் மாநாட்டில் ரூ.18 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு வழங்கி உள்ளார். இருந்தபோதிலும் பிரதமர் மீது குற்றம் குறை கூறி வருகின்றனர்.
கோவை-மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. மாறாக திருப்பி அனுப்ப கூறப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் திட்டத்தை கோவை பகுதிக்கு கொண்டு வரக்கூடாது என்ற நோக்கத்துடன் அந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. மெட்ரோ ரெயில் திட்டத்தை மத்திய அரசு ஒட்டுமொத்தமாக மறுக்கவில்லை.
திட்டத்திற்கான விரிவான அறிக்கையை திருப்பி அனுப்ப அறிவுறுத்தி உள்ளது. கோவையில் ரெயில் நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும் இடையேயான தூரம் குறைவாக இருக்கிறது. குறைந்தபட்சம் 22 மீட்டர் தொலைவு இருக்க வேண்டும்.
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்த வேலையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கருப்பு கொடி காட்டுகிறார்கள். அமெரிக்க அதிபரையே வந்து பார் என்று கூறுபவர் பிரதமர் மோடி. அவரால் முடியாதது எதுவுமில்லை. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து வெள்ளி, சனி ஆகிய நாள்களில் தலா 20 பஸ்கள் இயக்கப்படும்.
- பயணிகளின் தேவைக்கேற்ப தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும்.
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வார இறுதி விடுமுறையையொட்டி, நாளை (21-ந்தேதி), நாளை மறுநாளும் (22-ந் தேதி) சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும் அதிகம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே, பயணிகளின் வசதிக்காக தினசரி இயக்கும் பஸ்களுடன் கூடுதல் சிறப்புப் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) 340 சிறப்புப் பஸ்களும், சனிக்கிழமை (நவ.22) 350 சிறப்புப் பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை, நாளை மறுநாள் தலா 55 பஸ்கள் என மொத்தம் 110 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும்.
மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து வெள்ளி, சனி ஆகிய நாள்களில் தலா 20 பஸ்கள் இயக்கப்படும். இதுதவிர, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 100 சிறப்புப் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சேத்துப்பட்டில் மேம்படுத்தப்பட்ட சிறிய கால்பந்து மைதானம் என 20.89 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.
- டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ஆவடி, அன்னனூர், கோணாம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதல் பள்ளிக் கட்டிடங்கள், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள், புழல் மேட்டுபாளையத்தில் மேம்படுத்தப்பட்ட கால்பந்து மைதானம் மற்றும் சேத்துப்பட்டில் மேம்படுத்தப்பட்ட சிறிய கால்பந்து மைதானம் என 20.89 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 2024-ம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளை சென்னை, மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் தெ. ஞானசுந்தரம் (மரபுத் தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் இரா. காமராசு (ஆய்வுத் தமிழ்), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த க. சோமசுந்தரம் என்கிற கலாப்ரியா (படைப்புத்தமிழ்) ஆகியோருக்கு வழங்கி சிறப்பித்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை சார்பில் கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 59 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்து, தமிழ்நாட்டில் உள்ள 44 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளைத் திறன்மிகு மையங்களாக மேம்படுத்திடும் வகையில் டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், 190 உதவிப் பேராசிரியர்கள், 12 உதவி நூலகர்கள் மற்றும் 11 உதவி இயக்குநர் (உடற்கல்வி) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.






