என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.
    • ஓம் சக்தி.. பராசக்தி... என்ற பக்தி கோஷங்கள் விண்ணையே முட்டும் அளவுக்கு அதிர்ந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோவிலில் உள்ள கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது என்பது தனி சிறப்பு வாய்ந்தது.

    இதனால் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.

    இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் கடந்த 2014-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, 21 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு திருப்பணிகளுடன் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக குடமுழுக்கு நடைபெற்றது.

    இந்த குடமுழுக்கு விழாவுக்கான யாகபூஜைகள் செய்வதற்காக 41 யாக குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாக சாலை அமைக்கப்பட்டது. இங்கு கடந்த 3-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின.

    கடந்த 7-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன.

    இன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து மஹா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றது.

    பின்னர், யாகசாலையில் இருந்து மாரியம்மன் மற்றும் பரிவார கலசங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மேளவாத்தியங்களுடன் ராஜகோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள் தலையில் புனிதநீர் சுமந்து வந்தனர்.

    தொடர்ந்து, புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓத சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சரியாக 10 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன், விஷ்ணு துர்க்கை, பேச்சியம்மன் மற்றும் ராஜ கோபுரங்களில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது.

    அந்த நேரத்தில் வானில் கருடன் வட்டமிட்டது. பின்னர், மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய புன்னைநல்லூர் மாரியம்மா.. ஓம் சக்தி.. பராசக்தி... என்ற பக்தி கோஷங்கள் விண்ணையே முட்டும் அளவுக்கு அதிர்ந்தது. பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் ஷவர் மூலம் தெளிக்கப்பட்டது.

    குடமுழுக்கு விழாவை யொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவுப்படி ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் இன்று இரவு 7 மணிக்கு மாரியம்மன் திருவீதிஉலா நடைபெற உள்ளது. நாளை முதல் மண்டலாபிஷே பூஜைகள் நடைபெறும். 

    • பலரும் சீமானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் பலர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகினர்.

    தமிழ் நாட்டின் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சமீபத்தில் தான் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முன்னதாக இடைத்தேர்தல் குறித்த அறிவப்பு வெளியான சமயத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பார் சீமான் பெரியார் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார். இதனால் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள், பொது மக்கள் என பலரும் சீமானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனிடையே சீமான் பெரியர் குறித்து தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தது, நாம் தமிழர் கட்சியினர் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால், தமிழ் நாடு முழுக்க நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பலர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகினர். சிலர் மற்ற கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியில் இருந்து பலர் விலகி வருவதை அடுத்து, பெரியாரை ஏற்றுக் கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகி செல்லலாம் என்று சீமான் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "பெரியாரை தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனே ஏற்றுக் கொண்டாலும் நான் ஏற்க முடியாது. பெரியாரை ஏற்றுக் கொள்ளக்கூடிய தம்பிகள் என்னைவிட்டும், நாம் தமிழர் கட்சியை விட்டும் வெளியேறலாம்," என்று தெரிவித்தார்.

    • பக்தர்கள் வசதிக்காக 3 நாட்களுக்கு இலவச பஸ்கள் இயக்கம்.
    • முடி காணிக்கை செலுத்த சிறப்பு வசதி

    பழனி:

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

    மேலும் பஸ் மற்றும் ரெயில்களிலும் வந்து குவிந்து வருவதால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்க உள்ளனர்.

    பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்த வண்ணம் இருப்பதால் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை ஒவ்வொரு குழுவாக நிறுத்தி கோவில் நிர்வாகத்தினர் சாமி தரிசனம் செய்ய அனுப்புகின்றனர்.

    பக்தர்கள் வசதிக்காக பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் சண்முக நதியில் இருந்து இன்று முதல் 3 நாட்களுக்கு அரசு நகர பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக இலவசமாக இயக்கப்படும் அரசு பஸ்களுக்கான கட்டணத்தை பழனி திருக்கோவில் நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறது.

    இலவச அரசு பேருந்துகள் இயக்கத்தை பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி, சச்சிதானந்தம் எம்.பி., ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இன்று முதல் 3 நாட்களுக்கு இலவசமாக பஸ்கள் இயக்கப்படுவது போலவே இன்று முதல் மூன்று நாட்களுக்கு பழனி மலைக்கோவிலில் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் இலவச தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் திருக்கோவில் நிர்வாகிகள் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் பழனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி எதிர்புறம் என 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரை வெளியூர் செல்லும் அனைத்து பஸ்களும் இங்கிருந்தே சென்று வரும். இதே போல பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் சாலை உள்ளிட்ட இடங்களில் 5 தற்காலிக வாகன நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்துவது வழக்கம். இதற்காக 7 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். சாதாரண நாட்களில் காலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

    தைப்பூச திருவிழா நாட்களில் கூட்டம் அதிகரித்து வருவதால் இன்று முதல் வருகிற 12-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் முடி காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு கியூ.ஆர்.கோடுடன் இலவச டிக்கெட் வழங்கப்படும். அதனை காண்பித்து இலவசமாக முடி காணிக்கை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் பாதுகாப்புக்காக 3 நாட்களுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எல்லா கட்சியை சேர்ந்த விவசாயிகள் நடத்திய பாராட்டு விழா.
    • விவசாய கூட்டமைப்பினர் நடத்திய நிகழ்வில் அரசியல் கலப்பு இருக்கக்கூடாது.

    சென்னை:

    எடப்பாடி பழனிசாமியை பாராட்டி கோவையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதுகுறித்து இன்று காலை அவர் விளக்கம் அளித்தார். அப்போது செங்கோட்டையன் கூறும்போது, திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறினார்.

    இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அத்திக்கடவு-அவிநாசி திட்டம் எடப்பாடி ஆட்சிக்காலத்தில் தான் நிறைவுபெற்றது. எல்லா கட்சியை சேர்ந்த விவசாயிகள் நடத்திய பாராட்டு விழா. விவசாய கூட்டமைப்பினர் நடத்திய நிகழ்வில் அரசியல் கலப்பு இருக்கக்கூடாது.

    அரசியல் கலப்பு இருக்க கூடாது என்பதற்காகவே தலைவர்களின் படங்கள் வைக்கப்படவில்லை. பாராட்டு விழாவை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. கோகுல இந்திரா பொதுவெளியில் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை என்றார். 

    • முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
    • நாளை சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ம் திருநாளான 5-ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 5 மணிக்கு வந்தார்.

    பின்னர் அதிகாலை காலை 5 மணிமுதல் 5.45 மணிவரை ரதரோஹணம் (மகர லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.15 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் நான்கு உத்திர வீதிகளின் வழியாக காலை 9.20 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.

    நாளை (11-ந்தேதி) சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 12-ந்தேதி மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார்.

    வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார்.

    இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவதோடு தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அற நிலையத்துறை கோவில் இணை ஆணையர் மாரி யப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிமுகவில் ஒற்றுமை இல்லை.
    • யாருக்கும் எந்த நிர்பந்தமும் வேண்டாம்.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு இன்னும் ஓராண்டிற்குள் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அடிமட்ட அளவில் உள்ள நிர்வாகிகளுடன் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி, சென்னை அண்ணா நகரில் அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், கோகுல இந்திரா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசியதாவது:-

    அதிமுகவில் ஒற்றுமை இல்லை. எனக்காக இல்லை... என் செல்வாக்குக்காக இல்லை... பொதுச்செயலாளர் அறிவித்த ஆர்ப்பாட்டம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக... அதுதான் நோக்கமே தவிர... எல்லாரையும் தான் கூப்பிட்டோம். அதனால என்னை பார்த்து பேசுறதுக்கோ, என்னை பார்த்து கும்பிடறதுக்கோ, என்னை பார்த்து பயப்படறதுக்கோ... யாருக்கும் அச்சம் வேண்டாம். யாருக்கும் எந்த நிர்பந்தமும் வேண்டாம். என்ன ஒண்ணு நானும் தம்பியும் தானே சுத்துக்கிட்டு இருக்கோம். எங்களோட போட்டோவ போஸ்டரில் போட்டா சந்தோஷம் இருக்காதா... மகிழ்ச்சி இருக்காதா...

    எப்படி உங்களால என்னை மறக்க முடிகின்றது... என்ன நிர்பந்தம்... எந்த சுயநலம் என்பதை கேட்கிறேன். இருப்பினும் தொகுதியில் யார் நின்றாலும் அ.தி.மு.க. இங்கு வெற்றி பெறுவதற்கு நான் நிச்சயமாக உறுதியாக பணியாற்றுவேன் என்பதை இந்த நேரத்தில் சொல்லி யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது அல்ல. தேர்தல் நேரத்தில் இந்த ஒரு குருப்பிஷமும் இந்த விஷயமும் நடைபெறக்கூடாது என்பதற்காக இதை தெரிவிக்கிறேன்.

    முன்னாள் அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை என்பதை அறிந்தும், மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றார். 

    • 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
    • 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் நடந்து வந்தன. பட்ஜெட்டை இறுதி செய்யும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    இந்த நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 

    • முதலமைச்சர் முன்னிலையில் வி.சி.சந்திரகுமார் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
    • சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றார்.

    சபாநாயகர் அறையில் முதலமைச்சர் முன்னிலையில் வி.சி.சந்திரகுமார் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்நிகழ்வின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • சிறார் நீதிமன்றத்தில் 4 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.
    • 2 சகோதரர்கள் மற்றும் 2 சிறுவர்கள் கைது.

    நெல்லை:

    நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த 7-ந்தேதி மாலை 6.50 மணிக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டது.

    அந்த ரெயில் இரவு 8 மணி அளவில் காயல்பட்டினத்தை கடந்து வீரபாண்டியன்பட்டனம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் சுமார் 5 அடி நீளமுள்ள கம்பி வேலி அமைக்க பயன்படுத்தப்படும் 3 கற்கள் வைக்கப்பட்டு இருந்தது.

    இதைப்பார்த்து என்ஜின் டிரைவர், அதிர்ச்சி அடைந்து ரெயிலை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் ரெயில் சக்கரங்கள் 2 கற்களில் ஏறி உடைத்துவிட்டு நின்றது.

    இதையடுத்து தகவலை நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு அவர் தெரிவித்தார். பின்னர் 15 நிமிட தாமதத்திற்கு பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    தண்டவாளத்தில் கற்களை வைத்தது யார்? நாசவேலைக்காக கற்களை வைத்தார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது தண்டவாளத்தில் கற்களை வைத்தது வீரபாண்டியன்பட்டினம் அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்த 19 மற்றும் 18 வயதுடைய 2 சகோதரர்கள் மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், வாலிபர்கள் 2 பேரும் தண்டவாளத்தில் கல்லை வைத்து ரெயில் ஏறுவதை 'ரீல்ஸ்' வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதற்காக திட்டமிட்டிருந்ததும், அதன்படி தண்டவாளத்தில் கல் மீது ரெயில் ஏறுவதை அவர்கள் வீடியோ எடுத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அதில் 2 பேர் சிறார்கள் என்பதால் நீதிபதிகள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிறார் நீதிமன்றத்தில் சுமார் 4 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.

    பள்ளிக்கு சென்று படிப்பது, வாழ்வில் முன்னேறுவது குறித்து அறிவுரை கூறப்பட்டது. மேலும் கைதான 2 வாலிபர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவிலுக்கு புதிதாக தலைவர், செயலாளர், பொருளாளர் என பொறுப்புகள் உருவாக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலை நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டு பரமக்குடியில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திருவேட்டை உடைய அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோவிலாகும். அதேபோல் காட்டுபரமக்குடி கிராமத்தி னரின் பூர்வீக கோவிலாகவும் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இக்கோவிலை நடிகர் வடிவேலுவின் தூண்டுதலின் பெயரில் அவரது ஆதரவாளரான அறங்காவலர் பாக்யராஜ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அவருக்கு சொந்தமான கோவிலாக மாற்றம் செய்ய முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அறிந்த காட்டுபரமக்குடி கிராம மக்கள் மற்றும் குலதெய்வ குடிமக்கள் நேற்று கோவிலின் முன்பாக ஒன்று கூடி நடிகர் வடிவேலுக்கு எதிராக கோஷமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.

    அதேபோல் கோவிலுக்கு புதிதாக தலைவர், செயலாளர், பொருளாளர் என பொறுப்புகள் உருவாக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலை நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் திருவேட்டை உடைய அய்யனார் கோவிலின் பரம்பரை நிர்வாகியும் தற்போது நிர்வாகியாக இருந்து வரும் பாக்கியராஜ் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கோவில் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும், தேவையின்றி கோவிலை ஆக்கிரமிக்க கைப்பற்ற முயற்சி செய்வதாக கூறி போராட்டம் செய்வதாகவும் இந்த கோவில் பிரச்சனை தொடர்பாக வருகிற 11-ந்தேதி பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் கூட்டம் நடக்க இருக்கும் நிலையில் தற்போது இந்த பிரச்சனையை தேவை இன்றி எடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார். 

    • இன்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு தொடங்கியது.
    • பள்ளி முழுவதும் சி.சி.டி.வி. கேமரா கொண்டு கண்காணிக்க வேண்டும்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமி 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

    இதுதொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி 3 ஆசிரியர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தில் காரணமாக பள்ளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இன்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு தொடங்கியது.

    முன்னதாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் மாவட்ட கலெக்டரை நேற்று முன்தினம் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

    இதில் அந்தப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் உள்பட அனைத்து ஆசிரியர்களும் மாற்றம் செய்து புதிய ஆசிரியர்களை நியமிக்கப்பட வேண்டும்.

    அதேபோல பள்ளி முழுவதும் சி.சி.டி.வி. கேமரா கொண்டு தொடர் கண்காணிப்பில் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உறுதி அளித்ததன் பேரில் இன்று மீண்டும் பள்ளி தொடங்கியுள்ளது. இதில் பலத்த போலீஸ் பாது காப்புடன் இன்று பள்ளி தொடங்கியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
    • சுற்றறிக்கை தொடர்பாக தண்டாயுதபாணி கோவில் செயல் அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

    மதுரை நேதாஜி சாலையில் தண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் செயல் அலுவலர் அங்கயற்கண்ணி, அங்கு பணியாற்றுபவர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதாவது, அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை கோவில் உண்டியலில் செலுத்த உத்தரவிடப்பட்டது.

    அவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் வரப்பெறும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினை கோவில் பணியாளர்கள் கவனிக்க வேண்டும். காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

    இந்த உத்தரவானது, இந்து சமய அறநிலையத்துறை கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், கோவில் அர்ச்சகர் தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி உண்டியலில் செலுத்தும் உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

    தண்டாயுதபாணி கோவில் தக்காரிடம் கலந்தாலோசிக்காமல் செயல் அலுவலர் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று அறநிலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றறிக்கை தொடர்பாக தண்டாயுதபாணி கோவில் செயல் அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. 

    ×