என் மலர்
மகாராஷ்டிரா
- புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்தது.
- ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் இடையிலான முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவகாரத்தால் புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்தது.
பாஜக பேச்சுவார்த்தைக்குப் பிறகு மும்பையில் இன்று நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தற்போதைய துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அம்மாநில தலைமைச் செயலாளர் சுஜாதா சௌனிக் வெளியிட்டுள்ள பதவியேற்பு விழா அழைப்பிதழில், முதலமைச்சர் பெயரை "தேவேந்திர சரிதா கங்காதரராவ் ஃபட்னாவிஸ்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சரிதா என்பது அவரது தாயின் பெயர், கங்காதர் என்பது அவரது தந்தை. மகாராஷ்டிரா வாசிகள் தங்கள் தந்தையின் பெயரை இடைப் பெயராகப் பயன்படுத்துவது வழக்கம் என்றாலும், தேவேந்திர பட்னாவிஸ் தனது தாயின் பெயரை அதிகாரப்பூர்வ நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை ஆகும்.
இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் பாஜக தலைவர் 'தேவேந்திர கங்காதர் ஃபட்னாவிஸ்' என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார். 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு பதவியேற்பு விழாக்களுக்கான அழைப்புகளில், ஃபட்னாவிஸ் பதவியேற்றபோது, அவரது தாயின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- சாரா டெண்டுல்கர் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.
- இவர் தனது தந்தையின் அறக்கட்டளையின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அந்த அறக்கட்டளையின் துணை நிறுவனராக சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி இருந்து வருகிறார்.
இந்நிலையில், சச்சினின் மகளான சாரவும் தற்போது அறக்கட்டளையில் இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இதுதொடர்பாக, சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது மகள் சாரா டெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநராக சேர்ந்துள்ளார் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் மருத்துவம் மற்றும் பொது சுகாதார நியூட்ரிஷன் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். விளையாட்டு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் மூலம் இந்தியாவை மேம்படுத்தும் பயணத்தை அவர் தொடங்குகிறார் என பதிவிட்டுள்ளார்.
- இவர் கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மகா. முதல்வராக இருந்தவர் ஆவார்.
- பதவியேற்பு விழா நாளை [ டிசம்பர் 5] மாலை தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடக்கிறது
மாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. ஷிண்டே - பட்னாவிஸ் இடையிலான முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவகாரத்தால் புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்தது.
பாஜக பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஷிண்டே இறங்கி வந்த நிலையில் இன்று மும்பையில் நடந்த பாஜக இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டத்தில் தற்போதைய துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மகா. முதல்வராக இருந்தவர் ஆவார். இந்நிலையில் நாளை மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் மகாராஷ்டிர முதல்வர் ஆக பதவியேற்க உள்ளார். இன்று மதியம் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ஆட்சியமைக்கத் தேவேந்திர பட்னாவிஸ் உரிமை கோரியுள்ளார். இந்த சந்திப்பில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் உடன் இருந்தனர்.
அவர்கள் இருவரும் துணை முதல்வர் பதவியை ஏற்பார்கள் என்று தெரிகிறது. ஆளுநரை சந்தித்தபின் செய்தியர்களிடம் பேசிய பட்னாவிஸ் ஆட்சியமைக்க ஒத்துழைப்பு நல்கிய ஷிண்டேவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு விழா நாளை [ டிசம்பர் 5] மாலை தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, 10 மத்திய அமைச்சர்கள், 19 மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். சுமார் 2 ஆயிரம் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிற்பகல் 3.30 மணிக்கு தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.
- பிரதமர் மோடி, 10 மத்திய அமைச்சர்கள், 19 மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர்
மாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 235 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது. ஆனால் ஷிண்டே - பட்னாவிஸ் இடையிலான முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவகாரத்தால் புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில் மும்பையில் நடந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்த்தில் மகாராஷ்டிர முதலமைச்சராகத் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கூட்டணியில் அதிக இடங்களில் [ 132 தொகுதிகளில்] பாஜக வெற்றி பெற்றதால் 2014 முதல் 2019 வரை முதல்வராக இருந்த பட்னாவிஸ் முதல்வர் கனவில் இருந்தார். ஆனால் கூட்டணி கட்சியான சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை விட்டுச் செல்ல மனமில்லாமல் இருந்தார்.

இதையடுத்து ஏக்நாத் ஷிண்டேவிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியது. இதில் முதல்வர் பதவியை பாஜகவுக்கே கொடுக்க கூட்டணி தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டே(சிவசேனா), அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ்) சம்மதித்தனர். இருப்பினும் அமைச்சரவை பங்கீட்டில் இழுபறி நீடித்ததால் கடந்த 10 நாட்களாக காலாவதியான சட்டமன்றத்துடன் மகாராஷ்டிரா அரசியல் களம் குழப்பத்தில் இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோரை மேற்பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்
முன்னதாக நடந்த பாஜக மையக் குழுக் கூட்டத்தில் முதல்வர் பதவிக்கு தேவேந்திர பட்னாவிஸ் பெயர் முன்மொழியப்பட்டதன் படி இந்த எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் தற்போதைய துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

மாகாராஷ்டிர புதிய முதல்வர் பதவியேற்பு விழா நாளை [ டிசம்பர் 5] மாலை தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, 10 மத்திய அமைச்சர்கள், 19 மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். சுமார் 2 ஆயிரம் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு துணை முதல்-மந்திரி பதவி மற்றும் சில முக்கிய துறைகள் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
- அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி உள்ளது.
- மேத்யூவை கார் பேனட்டில் தூக்கி போட்டு சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் இழுத்து சென்றுள்ளனர்.
புனே:
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்தவர் கமலேஷ் பாட்டில் (வயது23). இவரும், இவரது நண்பர்களான ஹேமந்த் மலாஷ்கர் (26) மற்றும் பிரபமேஷ் தரடே (22) ஆகிய 3 பேரும் கடந்த 1-ந்தேதி மாலை ஆடி காரில் சென்றனர்.
பிம்ப்ரி சின்ச்வாட் டவுன்சிப் பகுதியை அடுத்த பிஜிலி நகர் பகுதியில் கார் சென்ற போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஜக்கரியா மேத்யூ என்பவர் காரை நிறுத்தி அதில் இருந்தவர்களுடன் ஏன் கவனக்குறைவாக கார் ஓட்டுகிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது கமலேஷ் பாட்டில் மற்றும் அவரது நண்பர்கள் என 3 பேரும் சேர்ந்து ஜக்கரியா மேத்யூவை அடித்து தாக்கினர்.
பின்னர் மேத்யூவை கார் பேனட்டில் தூக்கி போட்டு சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் இழுத்து சென்றுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து போலீசார் கமலேஷ் பாட்டில் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- நமது கொள்கைகளை சரியான பாதையில் வகுக்கவில்லை என்பதை குறிக்கிறது.
- பிரதமர் மோடிக்கு படம் பார்க்க நேரம் இருக்கிறது விவசாயிகளுடன் பேச நேரம் இல்லையா
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசை குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சித்துள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை நோக்கி ஜெகதீப் தன்கர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ள்ளார்.
மேடையில் பேசிய ஜெகதீப் தன்கர் சிவராஜ் சிங் சவுகானை நோக்கி, வேளாண் அமைச்சரே, உங்களுக்கு முன் இருந்த வேளாண் அமைச்சர் விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாக ஏதாவது வாக்குறுதி அளித்தாரா? வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த்த்தால், அது என்ன ஆனது?
இது ஒரு தீவிரமான பிரச்சினை, விவசாயிகளின் பொறுமையை சோதிக்க கூடாது, அவர்களின் குரலை எந்த சக்தியாலும் அடக்க முடியாது. விவசாயிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தாதது ஏன்? ஏன் எந்த முயற்சியும் இன்னும் எடுக்கப்படவில்லை என்பது எனக்கு புரியவில்லை, இதுவே எனது கவலை .

சர்தார் படேல் இந்தியாவை ஒருங்கிணைத்ததற்கு இணையாக, விவசாயிகளின் கவலைகளை நீங்கள் நிவர்த்தி செய்யவேண்டும். நீங்கள் (சிவ்ராஜ் சிங் சவுகான்) வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கிறீர்கள்.
சர்தார் படேலையும், தேசத்தை ஒருங்கிணைக்கும் அவரது பொறுப்பையும் நான் நினைவுகூர்கிறேன், அதை அவர் சிறப்பாகச் செய்தார். இந்த சவால் இன்று உங்கள் முன் உள்ளது, மேலும் இது [விவசாயிகள் பிரச்சனை] இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காட்டிலும் குறைவாகக் கருதப்படக் கூடாது.
இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது, ஏன் விவசாயி வேதனையில் உள்ளார், ஏன் அவர்கள் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இது மிகவும் தீவிரமான பிரச்சனை. இதை இலகுவாக எடுத்துக்கொள்வது நமது கொள்கைகளை சரியான பாதையில் வகுக்கவில்லை என்பதை குறிக்கிறது. ஒரு விவசாயியின் பொறுமையை சோதித்தால் தேசம் பெரும் விலையைக் கொடுக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.
விவசாயிகள் போராட்டம்
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) சட்டப்பூர்வமாக்கக் கோரி பிப்ரவரி முதல் ஹரியானா-பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தின் அடுத்த கட்டமாக டெல்லி சலோ அணிவகுப்பு நடத்தி தலைநகர் நோக்கி வந்துகொண்டிருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி-நொய்டா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

நில இழப்பீடு மற்றும் இதர வாக்குறுதிகள் மீதான கோரிக்கைகள் ஏழு நாட்களுக்குள் நிறைவேற்றப்படாததால் டிசம்பர் 6 முதல் மீண்டும் டெல்லி நோக்கி நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே பிரதமர் மோடிக்கு பாராளுமன்ற வளாகத்தில் [சபர்மதி ரிப்போர்ட்] படம் பார்க்க நேரம் இருக்கிறது விவசாயிகளுடன் பேச நேரம் இல்லையா என்று உத்தவ் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜெகதீப் தன்கர் தற்போது மத்திய அரசிடம் கேட்டுள்ள கேள்வியையே தாங்களும் தொடர்ந்து கேட்டு வருவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 34 புள்ளிகள் எடுத்து டிரா செய்தது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.
புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் இன்று முதல் தொடங்கியது.
இதில், இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
இதில் இரு அணி சிறப்பாக ஆடினர். இதனால் குஜராத், பெங்களூரு அணிகள் இடையிலான ஆட்டம் 34-34 என்ற புள்ளிக்கணக்கில் சமனிலையில் முடிந்தது.
- கடந்த வெள்ளிக்கிழமை அன்றே ஷிண்டே சத்தாரா மாவட்டத்தில் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.
- நாளை மகா. பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி இடம்பெற்ற பாஜகவின் மகாயுதி கூட்டணி 288க்கு 235 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது. தேர்தல் முடிவுகள் கடந்த நவம்பர் 23 ஆம் தேதியே வெளியான நிலையில் 10 நாட்கள் ஆகியும் புதிய அரசு அமைவதில் குழப்பம் நீடித்து வருகிறது.
முதல்வர் பதவிக்கு ஷிண்டே - பாஜகவின் பட்னாவிஸ் இடையே போட்டி நிலவியது. ஷிண்டே விட்டுக்கொடுப்பதாக அறிவித்த நிலையிலும் அமைச்சரவை பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. மகராஷ்டிர சட்டமன்றம் கடந்த நவம்பர் 27 ஆம் தேதியே காலாவதியான நிலையில் ஷிண்டே காபந்து முதல்வராக நீடிக்கிறார். ஷிண்டே - பட்னாவிஸ் - அஜித் பவார் மூவரும் கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து அனைத்தும் சுமூகமான அமைந்தது என கூறினர்.
ஆனால் அவர்கள் மும்பை திரும்பியதுமே முக்கிய முடிவுகளை எடுக்க இருந்த மீட்டிங்கை நட்டாற்றில் விட்டுவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்றே ஷிண்டே சத்தாரா மாவட்டத்தில் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். அவர் காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருவதாக குடும்ப மருத்துவர் தெரிவித்தார்.

வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த ஷிண்டே தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தானேவில் உள்ள ஜூபிட்டர் மருத்துவமனையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தான் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
நாளை மறுநாள் [டிசம்பர் 5] பதவியேற்பு என பாஜக மாநிலத் தலைவர் சந்திரசேகர் எக்ஸ் தளத்தில் அறிவித்திருந்தார் எனினும் அதிகாரப்பூர்வமான முடிவுகள் ரகசியமாகவே உள்ளன. நாளை மகா. பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பட்னாவிஸ் முதல்வர் வேட்பாளராக முன்மொழியப்படுவார் என்று தெரிகிறது.

இதற்கிடையே அஜித் பவார் டெல்லிக்கு விஜயம் செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். காலாவதியான சட்டமன்றத்துடன் 10 நாட்களாக மகாராஷ்டிரா இருந்து வருவது அவமானம் என்றும் இன்னும் ஏன் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவில்லை என்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மொத்ததில் மாகாராஷ்டிர அரசியலில் அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற குழப்பமான சூழலே நிலவி வருகிறது.
- இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை ஆளுநர் முன்மொழிய வேண்டும்
- அவர்கள் [ஷிண்டே - பாட்னாவிஸ் - அஜித் பவார் தலைவர்கள்] டெல்லி பயணங்களை ரசித்துக்கொண்டுள்ளனர்
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 288 இல் 235 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. பாஜக 132 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையை பெற்றது. ஆனாலும் அடுத்த முதல்வரை தேர்வு செய்து ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
கூட்டணியில் உள்ள சிவசேனா தலைவர் ஷிண்டே விட்டுக்கொடுத்த நிலையில் பாஜகவின் பட்னாவிஸ் முதல்வர் ஆவார் என்று கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 5 ஆம் தேதி பதவியேற்பு என்றும் நரேந்திர மோடி வருகிறார் என்றும் மகாராஷ்டிர பாஜக கட்சித் தலைவர் சந்திரசேகர் பவான்குலே எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். மகாராஷ்டிர சட்டமன்றம் கடந்த நவம்பர் 27 ஆம் தேதியே காலாவதியான நிலையில் முதல்வர் இப்பதவியை ராஜினாமா செய்த ஷிண்டே பொறுப்பளாராக நீடிக்கிறார்.

இந்த நிலையில்தான் முடிவு அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் வரை ஆகியும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமையாத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை என இந்தியா கூட்டணியில் உள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
முடிவு வெளியாகி 10 நாட்கள் ஆகிறது, பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளது, ஆனால் அவர்கள் இன்னும் ஆட்சி அமைக்கவில்லை... என்ன நடக்கிறது? டிசம்பர் 5-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று மாநில பாஜக தலைவர் அறிவிக்கிறார். அவர் என்ன ஆளுநரா?... இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை ஆளுநர் முன்மொழிய வேண்டும்" என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய ஆதித்ய தாக்கரே, "முடிவு வெளியாகி ஒரு வாரத்திற்கும் மேலாக ஒரு முதல்வரைத் தீர்மானிக்க முடியாததும், அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை என்பதும் மகாராஷ்டிராவை அவமதிப்பு மட்டுமல்ல, அவர்களின் அன்பான தேர்தல் ஆணையம் வழங்கிய உதவியையும் கூட அவமதிக்கிறது [கிண்டலாக]. விதிகள் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும், சில சிறப்புக் கட்சிகளுக்கு விதிகள் பொருந்தாது.
ஆட்சி அமைக்க உரிமை கோராமல், ஆளுநரிடம் எதையும் காட்டாமல், ஒருதலைப்பட்சமாக பதவிப் பிரமாண தேதியை அறிவிப்பது, அராஜகமாகும். இதற்கு மத்தியில் நமது காபந்து முதல்வர் [ஷிண்டே] ஒரு மினி விடுமுறையில் [சொந்த கிராமத்தில்] இருக்கிறார், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கக் கூடியவர்களுக்கு முன்னுரிமை இல்லை என்று தெரிகிறது. அவர்கள் [மகாயுதி தலைவர்கள்] டெல்லி பயணங்களை ரசித்துக்கொண்டுள்ளனர். இந்நேரம் இங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தாது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- தற்போது மக்கள் தொகை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம்.
- யாரும் அழிக்க வேண்டாம், அது தானாகவே அழிந்து விடும்
மக்கள் தொகை குறைந்த சமூகம் அழிந்துவிடும் என்பதால் இந்தியர்கள் குறைந்தது 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியைப் பேசிய அவர், ஒவ்வொரு குடும்பமும் சமூகத்தின் ஓர் அங்கம். சமூகத்தின் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்கு அவசியம். தற்போது மக்கள் தொகை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம். மக்கள் தொகை குறைந்து வருவதால் பல மொழி, கலாச்சாரமும் ஏற்கனவே அழிந்து விட்டன.
குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1 க்கும் கீழ் குறைவாக உள்ள சமூகங்கள் அழிந்துவிடும் என மக்கள் தொகை அறிவியல் காட்டுகிறது. 1998 அல்லது 2022ல் உருவாக்கப்பட்ட நம் நாட்டின் மக்கள்தொகை கொள்கையும் மொத்த பிறப்பு விகிதம் 2.1க்கு கீழே இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறது.

மக்கள் தொகை குறைந்த சமூகத்தை அதை வேறு யாரும் அழிக்க வேண்டாம். அது தானாகவே அழிந்து விடும். எனவே ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்று கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் மக்கள்தொகை 142 கோடியாக அதிகரித்துள்ள நிலையில் மோகன் பகவத்தின் கருத்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. மோகன் பகவத் கருத்துக்கு பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளமும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வாழும் கலையை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்
- அரசியலில் ஒவ்வொருவரும் சோகமாக இருக்கிறார்கள்
அரசியல் என்பது எதிலும் திருப்தியடையாத ஆத்மாக்களின் கடல் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரான நிதின் கட்கரி மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பதவியில் உள்ளவர். நேற்று [ஞாயிற்றுக்கிழமை] நாக்பூரில் நடந்த '50 கோல்டன் ரூல்ஸ் ஆஃப் லைஃப்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு பேசியுள்ளார். மேடையில் அவர் பேசியதாவது,
ஒரு நபர் குடும்பம், சமூகம், அரசியல் அல்லது கார்ப்பரேட் வாழ்க்கையில் இருந்தாலும், வாழ்க்கை சவால்கள் மற்றும் சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தாலும், அவற்றை எதிர்கொள்ளும் "வாழும் கலையை" அந்த நபர் புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

அதற்கு உதாரணம் கூறிய அவர், அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்களின் கடல், அங்கு ஒவ்வொருவரும் சோகமாக இருக்கிறார்கள்.. உறுப்பினராக வருபவர் தனக்கு எம்எல்ஏ ஆக வாய்ப்பு கிடைக்காததால் வருத்தப்படுகிறார்.
அமைச்சர் பதவி கிடைக்காததால், எம்.எல்.ஏ., வருத்தத்தில் உள்ளார். அமைச்சர் ஆனவர், அமைச்சரவையில் நல்ல துறை கிடைக்காமலும், முதல்வராக முடியாமலும் தவிக்கிறார்.
முதல்வரோ, எப்பொழுது மேலிடம் பதவியை விட்டு போக சொல்லுமோ என்று தெரியாமல் டென்ஷனில் இருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடியின் பதவிக்கு ஆர்எஸ்எஸ் செல்வாக்கு அதிகம் உள்ள நிதின் கட்கரி காய் நகர்த்தி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

- சிவசேனா தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டேதான் முதல்வராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தல்.
- அதிக இடங்களை பிடித்ததால் முதல்வர் பதவியை பெற வேண்டும் என பா.ஜ.க. தலைவர் பிடிவாதம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 288 தொகுதிகளில் சுமார் 230 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தேர்தலுக்கு முன்னதாக சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தார். பா.ஜ.க.-வின் தேவேந்திர பட்நாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக இருந்தனர்.
தற்போது பா.ஜ.க. தனித்து 130 இடங்களுக்கு மேல் வென்றுள்ளது. இதனால் தேவேந்திர பட்நாவிஸ்தான் முதல்வராக வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தினர். அதேவேளையில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இதுதான் வெற்றிக்கு காரணம். இதனால் அவர்தான் முதல்வரான நீடிக்க வேண்டும் என சிவசேனா காட்சி தலைவர்கள் தெரிவித்தனர். மேலும் பீகார் மாடலில் (பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையிலும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்) ஆட்சியமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனால் முதல்வர் யார் என்பதில் இழுபறி ஏற்பட்டது. இது தொடர்பாக பா.ஜ.க. மேலிடம் பட்நாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
அதன்பின் பா.ஜ.க. தேர்வு செய்யும் முதல்வருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அஜித் பவார் தெரிவித்தார். அதேபோல் பா.ஜ.க. யாரை முதல்வராக அறிவித்தாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம் என ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.
இருந்தபோதிலும் அதிகாரப்பூர்வமாக முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் தொடர் பேச்சுவார்த்தையின் முடிவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று அல்லது நாளை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
5-ந்தேதி பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிராவில் ஒருவர் முதல்வராகவும், இருவர் துணை முதல்வராகவும் பதவி ஏற்க இருக்கிறார்கள். தற்போது துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.






