என் மலர்tooltip icon

    சத்தீஸ்கர்

    • பாஜக எம்.எல்.ஏ. ரேமுனி பகத், 'இயேசு கிறிஸ்து' குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
    • இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

    இயேசு கிறிஸ்து குறித்து ஆட்சேபகரமான கருத்து தெரிவித்த பாஜக பெண் எம்எல்ஏ மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இது தொடர்பாக வரும் 10 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி, ஜாஷ்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள தெக்னி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக எம்.எல்.ஏ. ரேமுனி பகத், 'இயேசு கிறிஸ்து' மற்றும் 'மதமாற்றம்' குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அதைத் தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் ஜாஷ்பூரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி அவருக்கு எதிராக புகார் அளித்தனர். ஆனால் போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சாட்சியங்களின் வாக்குமூலம் மற்றும் பாஜக எம்.எல்.ஏ. பேசிய வீடியோவை ஆராய்ந்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட ராய்முனி பகத் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதாக என்று தனது உத்தரவில் கூறியது.

    மேலும், இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் பாஜக எம்.எல்.ஏ. ரேமுனி பகத் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு போதுமான ஆதாரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. 

    • ராணுவ வாகனத்தை குறிவைத்து, ஐஇடி வெடிகுண்டை வெடிக்க வைத்து தாக்குதல்.
    • 8 ராணுவ வீரர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் என 9 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் நக்சலைட்டுகள் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராணுவ வாகனத்தை குறிவைத்து, ஐஇடி வெடிகுண்டை வெடிக்க வைத்ததில் 9 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

    வேனில் சென்று கொண்டிருந்தபோது நக்சல்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில், வாகனத்தில் இருந்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்தனர்.

    நிலத்தில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் 8 ராணுவ வீரர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் என 9 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ. 120 கோடி மதிப்பிலான பஸ்தர் சாலை கட்டுமானத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் செய்தி வெளியிட்டார்
    • இருவரும் உடலை செப்டிக் டேங்கில் மறைத்து, சிமெண்டால் மூடினார்.

    சத்தீஸ்கரை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர், முகேஷ் சந்திரகர் [33 வயது]. இவர் கடந்த புத்தாண்டு தினத்தன்று காணாமல் போனார். கடந்த வெள்ளிக்கிழமை பிஜப்பூர் மாவட்டத்தில் அரசு சாலை ஒப்பந்ததாரருக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

    இதனையடுத்து காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். முகேஷ் சமீபத்தில் பிஜப்பூரில் நடந்த அரசு சாலை கட்டுமான ஊழல் குறித்து செய்தி வெளியிட்டார்.

     

    இந்த ரூ. 120 கோடி மதிப்பிலான பஸ்தர் சாலை கட்டுமானத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் என்பரிடம் சில நாட்களுக்கு முன் முகேஷ் எடுத்த பேட்டியில் பல கேள்விகளை கேட்டிருந்தார். இதனைதொடர்ந்தே சுரேஷுக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியில் முகேஷின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில் முகேஷ் கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக கருதப்படும் முக்கிய குற்றவாளி சுரேஷ் சந்திரகர் நேற்று [ஞாயிற்றுக்கிழமை] இரவு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

    அரசு சாலை ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் என நம்பப்படுகிறது. கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததில் இருந்து அவர் தலைமறைவானார். சுரேஷ் சந்திரகர் ஐதராபாத்தில் உள்ள தனது ஓட்டுநர் வீட்டில் பதுங்கி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். 200 சிசிடிவிகளில் இருந்து காட்சிகளை ஆய்வு செய்து கிட்டத்தட்ட 300 மொபைல் எண்களைக் டிரெஸ் அவுட் செய்து சுரேஷை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

    தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். முன்னதாக, சுரேஷ் சந்திரகாருடன் தொடர்புடைய நான்கு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதுடன், அவருக்குச் சொந்தமான சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிட முகப்பு பகுதி இடித்துத் தள்ளப்பட்டது. சத்தீஸ்கரின் கன்கேர் மாவட்டத்தில் சுரேஷ் சந்திரகரின் மனைவியும் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, முகேஷ் சந்திரகர் கனமான பொருளால் தாக்கப்பட்டுள்ளார்.அவரது தலை, மார்பு, முதுகு மற்றும் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. கையில் குத்தியிருந்த பச்சை மூலமே அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.

    கொலை செய்யப்பட்ட முகேஷ் சந்திரகர் மற்றும் சுரேஷ் சந்திரகர் தூரத்து உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் ரித்தேஷ், மகேந்திர ராம்தேகே மற்றும் தினேஷ் சந்திரகர் என்ற மூவரும் பிஜப்பூரில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    ரித்தேஷ் மற்றும் மகேந்திரா ஆகியோர் முகேஷை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இருவரும் உடலை செப்டிக் டேங்கில் மறைத்து, சிமெண்டால் மூடினார். முகேஷின் போன் மற்றும் அவரை கொன்ற இரும்பு கம்பியையும் அப்புறப்படுத்தினர். இவை அனைத்தும் சுரேஷின் திட்டப்படி நடந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

    என்டிடிவி உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவங்களின் பங்களிப்பு நிருபராகவும் சுயாதீன பத்திரிகையாளராகவும் செயல்பட்டு வந்த முகேஷ் கொலைக்கு பத்திரிகையாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

     

    • இந்த என்கவுண்டரில் நான்கு சிறார்கள் காயமடைந்தது உறுதி செய்யப்பட்டது.
    • சிறுவனின் தொண்டையில் இருந்து தோட்டா அகற்றப்பட்டது

    சத்தீஸ்கரில் 2024 ஆம் ஆண்டில் 287 நக்சலைட்டுகளைக் பாதுகாப்பு படையினர் கொன்றதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் அறிவித்தார்.

    இதில் உயர்மட்டத் தலைவர்கள்14 பேரும் அடங்குவர். மேலும் 1,000 பேரைக் கைது செய்யப்பட்டனர் என்றும் ஒரு வருடத்தில் 837 பேர் சரணடைந்தனர் என்றும் அவர் கூறினார். சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்து ஒரு வருட நிறைவை ஒட்டி பேசிய அமித் ஷா, மார்ச் 31, 2026 க்குள் நாகசலிசம் ஒழியும் என கவுண்டவுனையும் தந்துள்ளார்.

    ஆனால் இந்த வெற்றி உள்ளூர் பழங்குடியினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகை குறைதல், மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் நியாயத்தன்மை பற்றிய விவாதங்கள் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகின்றன.

    நக்சலிசத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அரசின் முயற்சிகள், அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்பு, பழங்குடிப் பகுதிகளின் இராணுவமயமாக்கல் மற்றும் பெருநிறுவன நலன்களுக்காக நடக்கும் அத்துமீறல் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன.

    தி ஃப்ரண்ட்லைன் இதழின் அறிக்கைப் படி, என்கவுன்டர்களில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கை - 2023 இல் 20 இலிருந்து 2024 இல் 287 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த நபர்களில் பலர் அப்பாவி பொதுமக்கள், அரங்கேற்றப்பட்ட என்கவுண்டர்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைப்பதில் அரசு வெற்றி பெற்றதாகக் கூறினாலும், உள்ளூர் கிராம மக்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்த புள்ளிவிவரங்களை மறுக்கின்றனர்.

    சத்தீஸ்கரின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் கொடுத்துள்ள விலை அதிகம். ஜனவரி 2024 இல், தெற்கு சத்தீஸ்கரின் பிஜப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு மாத பெண் குழந்தை கொல்லப்பட்டது.

    இந்த சம்பவம் ஆண்டு முழுவதும் நிகழ்ந்த இதேபோன்ற துயரங்களின் ஒரு பகுதியாகும். டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள அபுஜ்மத்தின் கும்மாம்-லேகாவாடா கிராமங்களில் மாவோஸ்யிடுகளை என்கவுன்டர் செய்ததாக பாதுகாப்புப் படையினர் கூறினர். இதில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

    ஆனால் கொல்லப்பட்ட ஏழு பேரில் ஐந்து பேர் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பில்லாத பொதுமக்கள் விவசாயிகள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்த என்கவுண்டரில் நான்கு சிறார்கள் காயமடைந்தது உறுதி செய்யப்பட்டது. 

    உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, ஒரு சிறுவனின் தொண்டையில் தோட்டா பாய்ந்துள்ளது, இதை மருத்துவர்களின் எக்ஸ் ரே உறுதி செய்தது. டிசம்பர் 20 அன்று, ராய்பூரில் உள்ள DKS சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சிறுவனின் தொண்டையில் இருந்து தோட்டா அகற்றப்பட்டது. இதற்கிடையில், தண்டேவாடாவில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு குழந்தைகள், போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    என்கவுன்ட்டர்களில் கொல்லப்பட்டவர்களில் பலர் மாவோயிஸ்டுகள் அல்ல, அப்பாவி பொதுமக்கள் என்று உள்ளூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

    ஏப்ரல் 2024 இல் என்கவுன்டரில் கொல்லப்பட்ட இளம் பெண் கம்லி குஞ்சம் அதற்கு உதாரணம். அவரது தந்தை சோம்லி குஞ்சம், அவரது மகள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் வன்முறை அராஜக என்கவுண்டருக்கு அவர் இறையனார் என்றும் கூறுகிறார்

    இதுபோல சத்தீஸ்கரின் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளில் வரம்பு மீறிய அதிகாரம் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இப்பகுதியில் வளர்ந்து வரும் இராணுவமயமாக்கல் பழங்குடி சமூகங்களின் உரிமைகளை மீறுகிறது என்றும் , நீதிக்கு புறம்பான கொலைகள் மற்றும் மக்கள் தங்கள் மூதாதையர் நிலங்களில் இருந்து கட்டாயமாக இடம்பெயர்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் நக்சல் கிளர்ச்சியை ஒடுக்குவதை விட சுரங்கத் துறை கார்ப்பரேட் நலன்களை பாதுகாப்பதற்காகவே அதிகம் முனைப்புடன் நடக்கிறது என்று பழங்குடி ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.

    குறிப்பாக நக்சல்கள் மிகவும் தீவிரமாக செயல்படும் பஸ்தரில், அரசு செய்யும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள், அதிக பாதுகாப்பு முகாம்களை நிறுவுதல் என்பதுடன் அங்கு அதிகரித்துள்ள சுரங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது

    இந்தப் பழங்குடிப் பகுதிகளில் சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் அமைப்பது பல ஆதிவாசிகளால் உள்ளூர் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நலன்களால் சுரண்டுவதை எளிதாக்கும் ஒரு கருவியாகக் கருதப்படுகிறது. இது உள்ளூர் மக்களிடையே பரவலான எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.

    தி ஃப்ரண்ட்லைன் அறிக்கையின்படி, சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுரங்கம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பழங்குடி சமூகங்களின் ஒப்புதல் இல்லாதது குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

    சத்தீஸ்கர் மாநில பழங்குடியினர் ஆணையத்தின் (CGSTC) அறிக்கையில், 'சர்குஜா மற்றும் சூரஜ்பூர் மாவட்டங்களில் சுரங்கம் தோண்டுவதற்கு போலி ஆவணங்கள் மூலம் ஒப்புதல் பெறப்பட்டது, பஞ்சாயத்துகள் சட்டத்தின் கீழ் பழங்குடியினரின் உரிமைகளை மீறியது.

    ஆதிவாசிகள் அவர்களது நிலங்களில் இருந்து கட்டாயமாக இடம்பெயர்வதும், அவர்களின் எதிர்ப்பைக் குற்றமாக கருதுவதும், பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்புகளை அரசு புறக்கணிப்பதை எடுத்துக்காட்டுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினரின் வரம்பு மீறிய அதிகாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களின், குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    நக்சலிசத்தை ஒழிப்பதற்காக பாஜக அரசாங்கம் நிர்ணயித்துள்ள காலக்கெடு அப்பாவிகளின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தும் நடவடிக்கை என பூபேஷ் பாகேல் எச்சரித்துள்ளார்.

    அக்டோபர் 2024 இல், பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பான மூலவாசி பச்சாவ் மஞ்ச் (MBM) ஐ சத்தீஸ்கர் அரசாங்கம் தடை செய்தது.

    அரசாங்கம் ஆதரவளிக்கும் வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பது மற்றும் பாதுகாப்பு முகாம்களுக்கு எதிராக எதிர்ப்பைத் திரட்டுவது உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. 2021 இல் சில்கர் கிராமத்தில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 4 பேரை கொன்றது உட்பட தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களை எதிர்த்து இதுபோன்ற அமைப்புகள் போராடி வந்தன.

    நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் கார்ப்பரேட் நலன்கள் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு முன்னுரிமை அளிக்கும் தற்போதைய உத்தி, சத்தீஸ்கரில் பழங்குடியின மக்களின் துன்பத்தை அதிகப்படுத்துகிறது என்று அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.

    இதற்கு பதிலாக கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை , உள்ளூர் சமூகங்களின் குறைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண மனித உரிமை ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.  

    • பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    • தேடுதல் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

    சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதனை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் தெற்கு அபுஜ்மாத் காட்டில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட மோதலில் தலைமைக் காவலர் சன்னு கரம் உயிரிழந்தார். பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சூடு துவங்கியது. நேற்றிரவு துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்பட்ட பின், நான்கு மாவோயிஸ்டுகளின் உடல்கள், ஏ.கே.-47 ரக துப்பாக்கி மற்றும் எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.

    என்கவுன்டரை தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

    • சாலை ஒப்பந்ததாரருக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
    • பிஜப்பூரில் நடந்த சாலை கட்டுமான ஊழல் குறித்து செய்தி வெளியிட்டார்.

    சத்தீஸ்கரை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர், முகேஷ் சந்திரகர் [33 வயது]. அம்மாநிலத்தில் மாவோயிட் மற்றும் அரசுக்கு இடையில் பழங்குடியினரின் பிரச்சனைகளை வெளிப்படுத்தி வந்த இவர் கடந்த புத்தாண்டு தினத்தன்று காணாமல் போனார்.

    இந்நிலையில் நேற்று [வெள்ளிக்கிழமை] பிஜப்பூர் மாவட்டத்தில் அரசு சாலை ஒப்பந்ததாரருக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீஜப்பூரில் பத்திரிகையாளர்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    என்டிடிவி உட்பட பல முன்னணி தொலைக்காட்சிகளுக்காக பணியாற்றிய முகேஷ், மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பஸ்தரில்  களத்தில் தீவிரமான செய்தி சேகரிப்பவராக அறியப்பட்டவர்.

    ஏப்ரல் 2021 மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்ட கோப்ரா கமாண்டோவை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விடுவிப்பதில் முகேஷ் முக்கிய பங்கு வகித்தார்.

    முகேஷ் சமீபத்தில் பிஜப்பூரில் நடந்த அரசு சாலை கட்டுமான ஊழல் குறித்து செய்தி வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மீது விசாரணை நடந்தது.  இந்த ரூ. 120 கோடி மதிப்பிலான பஸ்தர் சாலை கட்டுமானத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஒப்பந்ததாரர் சுரேஷ் என்பரிடம் சில நாட்களுக்கு முன் முகேஷ் எடுத்த பேட்டியில்   பல கேள்விகளை கேட்டிருந்தார்.   

    இந்நிலையில் புத்தாண்டில் காணாமல் போன முகேஷ் கடைசியாக சென்ற இடம் சுரேஷின் குடியிருப்புப் பகுதி என சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தெரிய வந்தது. 

    தொடர்ந்து, அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டதில் ஒரு  செப்டிக் டேங்கில் முகேஷ் சடலமாக கிடந்தார். இதனையடுத்து, அவரது உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த வழக்கில்  சுரேஷின் சகோதரர் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பத்திரிகைத்துறையில் 10 ஆண்டுகளாக இயங்கி வரும் முகேஷ், பஸ்தர் ஜங்ஷன் என்ற 159,000 பின்தொடர்பவர்கள் கொன்ற யூடிபூப் சேனலையும் நடத்தி வந்தார். 

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அவரது நேரலையை சுமார் 20க்கும் அதிகமானோர் பேர் வரை பார்த்துக்கொண்டிருந்தனர்.
    • சிலர் அவர் இருந்த இடத்துக்கு நேரில் விரைந்தனர்

    சத்தீஸ்கரில் இன்ஸ்டாகிராம் லைவ் நேரலையில் 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சத்தீஸ்கரில் உள்ள ஜான்ஜ்கிரில் 19 வயது பெண் அங்கூர் கடந்த டிசம்பர் 29 அன்று, இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து கொண்டிருந்தார்.

    அவரது நேரலையை சுமார் 20க்கும் அதிகமானோர் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கூர் நேரலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

     

    நேரலையை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவரது செல்போனுக்கு போன் அவரை செய்து தடுக்க முயன்றனர். சிலர் அவர் இருந்த இடத்துக்கு நேரில் விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அங்கூர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தார்.

    போலீஸ் விசாரணையில் அங்கூர் சத்தீஸ்கரில் உள்ள மிஸ்தா கிராமத்தில் வசிப்பவர் என்றும், அவரது பெற்றோர் ஐதராபாத்தில் தினசரி கூலித் தொழிலாளர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள் என்றும் தெரிய வந்தது.

    முதற்கட்ட விசாரணையில் அவர் காதலில் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அங்கூர் தனது மொபைல் போனில் நீண்ட நேரம் செலவிடுவார் என்று அவரது கிராம மக்கள் சுட்டிக்காட்டினர். அங்கூரின் செல்போனை சைபர் செல் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். 

    தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுமியின் பெற்றோர் இல்லாத சமயத்தில் வீட்டில் புகுந்து அவளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • குழி வெட்டி சிறுமியின் சடலத்தை கிடத்திய பின்னர் இறந்த உடலுடன் நண்பன் நீல்காந்த் பாலியல் உறவு வைத்துள்ளான்.

    இறந்தவரின் உடலுடன் பாலியல் உறவு கொள்வது சட்டப்படி குற்றமாகாது என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சடலத்துடன் உடலுறவு கொள்ளும் தன்மைக்கு நெக்ரோபிலியா என்பது அறிவியல் பெயர்.

    கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தின் கரியாபந்து மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் காணாமல் போனதாக காவல் நிலையத்துக்கு வந்த புகாரை அடுத்து நடந்த தேடுதலில் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

    பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்துடனும் உடலுறவு வைத்துக்கொள்ளப்பட்டது தெரியவந்தது.

    சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த நீல்சந்த். சிறுமியின் பெற்றோர் இல்லாத சமயத்தில் வீட்டில் புகுந்து அவளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    சிறுமி கத்த முயன்றதால் பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு தனது நண்பன் நீல்காந்த் உதவியுடன் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் உடலை புதைத்துள்ளான். குழி வெட்டி சிறுமியின் சடலத்தை கிடத்திய பின்னர் இறந்த உடலுடன் நண்பன் நீல்காந்த் பாலியல் உறவு வைத்துள்ளான். விசாரணையின்போது இந்த உண்மைகள் அனைத்தும் வெளிவந்துள்ளன.

    இந்நிலையில் இதுதொடர்பாக சத்தீஸ்கர் நீதிமன்றம் நீலச்சந்த்க்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டபோதிலும் சடலத்துடன் உடலுறவு வைத்த நண்பன் நீல்காந்த் -ஐ போக்ஸோ குற்றத்தில் இருந்து விடுவித்தது.

    இதை எதிர்த்து கொல்லப்பட்ட சிறுமியின் தாய் சார்பில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா மற்றும் நீதிபதி பிபு தத்தா குரு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நெக்ரோபிலியா என்பது அரசியலமைப்பின் 21வது பிரிவை மீறுவதாகவும், இது கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை உத்தரவாதம் செய்கிறது என்றும், மரணத்திற்குப் பிறகு ஒருவரின் உடல் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதற்கும் உரிமை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

     

    தொடர்ந்து பேசிய நீதிபதிகள், உயிருள்ள மனிதனுக்கு மட்டுமல்ல... இறந்த உடலுக்கும் கண்ணியமும் நியாயமாக அணுகுமுறை கொடுக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

    ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ சட்டம்) பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருக்கும்போது மட்டுமே பொருந்தும் என்று கூறி மனுவை நிராகரித்தனர். 

    • படிவத்துக்கு ஒப்புதல் அளித்த திட்டப் பயனாளிகள் சரிபார்ப்பு அதிகாரிகளும் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
    • சன்னி லியோனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருமணமான பெண்களுக்கான சத்தீஸ்கர் பாஜக அரசு மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல முன்னாள் ஆபாசப் பட நடிகை சன்னி லியோன் பெயரில் ஒருவர் கணக்கு தொடங்கி அதில் இந்த திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000 பெற்று வந்துள்ளார்.

    சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் உள்ள தலூர் கிராமத்தில் இந்த மோசடி நடந்துள்ளது. வீரேந்திர ஜோஷி என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    இந்த மோசடி குறித்த செய்திகள் மூலமே அதிகாரிகள் கவனத்துக்கு இது வந்துள்ளது. வீரேந்திர ஜோஷி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது படிவத்துக்கு ஒப்புதல் அளித்த திட்டப் பயனாளிகள் சரிபார்ப்பு அதிகாரிகளும் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

     

     

    இது குறித்து விரிவான விசாரணை நடத்தி வங்கிக் கணக்கை முடக்க மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு மாவட்ட ஆட்சியர் ஹரீஸ் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த மோசடி குறித்து ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் சாடியுள்ளது. மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் பணம் பெரும் 50 சதவீத பயனாளிகள் போலியானவர்கள் என்று மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆனால் முந்தைய ஆட்சிக் காலத்தில் காங்கிரஸால் வழங்க முடியாத மாதாந்திர உதவிகளை இப்போது அம்மாநிலப் பெண்கள் பெறுவதால் காங்கிரஸ் வேதனையில் இருப்பதாக துணை முதல்வர் அருண் சாவோ தெரித்துள்ளார். சன்னி லியோனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • இந்த விபத்தில் சிக்கி பலர் காயமுற்றனர்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்டத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கி பலர் காயமுற்றனர்.

    விபத்து குறித்து அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வர் நாக் கூறும் போது, "ஜக்தல்பூரின் தர்பா காவல் நிலை எல்லைக்கு உட்பட்ட சந்தமேட்டா கிராமத்திற்கு அருகே 45 பேரை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் விபத்தில் சிக்கியது," என்றார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    "சரக்கு வாகனம் விபத்தில் சிக்கியதாக மாலை 4.30 மணி அளவில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதுவரை காயமுற்ற 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் உயிரிழந்தார்," என்று மருத்து அதிகாரியான திலீப் காஷ்யப் தெரிவித்தார்.

    இந்த விபத்து நேற்று பிற்பகலில் நடைபெற்ற நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக திலீப் காஷ்யப் தெரிவித்தார்.

    • கோழிக்குஞ்சை விழுங்கிய பின்னர், திடீரென மயங்கி விழுந்தார்.
    • குழந்தைப்பேறுக்காக விபரீத முயற்சியில் ஈடுபட்டு வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராய்ப்பூர்:

    சத்தீஷ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் குழந்தைகள் இல்லை. மருத்துவ பரிசோதனை செய்தபோதும், குழந்தைப்பேறு இல்லை. மந்திர, தந்திரங்களில் ஆனந்த் யாதவ்க்கு அதிக நம்பிக்கை உண்டு. தந்தையாக வேண்டும் என்பதற்காக அடிக்கடி பரிகாரங்கள் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    இந்தநிலையில் உள்ளூர் ஜோதிடர் ஒருவரை அணுகியபோது, 'குழந்தைப்பேறு வேண்டும் என்றால் உயிரோடு ஒரு கோழிக்குஞ்சை விழுங்க வேண்டும்' என்று கூறி உள்ளார். எப்படியாவது தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற ஆவலில் இருந்த ஆனந்த் யாதவ், சம்பவத்தன்று உயிருடன் கோழிக்குஞ்சை விழுங்கினார். ஆனால் இது அவரது குடும்பத்தினருக்கு தெரியாது.

    கோழிக்குஞ்சை விழுங்கிய பின்னர், திடீரென மயங்கி விழுந்தார். உடனே குடும்பத்தினர் அவரை அம்பிகாபூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மூச்சுத்திணறலால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது தொண்டையில் ஒரு கோழிக்குஞ்சு சிக்கி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்து அதை மீட்டனர். அந்த கோழிக்குஞ்சு உயிருடன் இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தைப்பேறுக்காக விபரீத முயற்சியில் ஈடுபட்டு வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வாரந்தோறும் சனிக்கிழமை தவறாமல் நாட்டு கோழி கொண்டுவரச் சொல்லி சமைத்து சாப்பிட்டுள்ளார் மேனேஜர்.
    • அவருக்கு கடன் தருவதாக உறுதியளித்த வங்கி மேனேஜர் முன்கூட்டியே 10% கமிஷன் கேட்டுள்ளார்.

    வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று வரும் அழைப்பை நம்பி தினமும் பலர் ஏமாறுகின்றனர். ஆனால் சத்தீஸ்கரில் விவசாயிக்கு கடன் தருகிறேன் என கூறி வங்கி மேனேஜரே ஏமாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள மஸ்தூரி நகரில் வங்கி மேனேஜர், விவசாயியிடம் ரூ.12 லட்சம் கடன் தருவதாக கூறி விவசாயியிடம் உள்ள மொத்தம் 900 கோழிகளையும் வாங்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுள்ளார் வங்கி மேனேஜர்.

     

    பாதிக்கப்பட்ட விவசாயி ரூப்சந்த் மன்ஹர், மஸ்தூரியில் நாட்டுக் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். தனது தொழிலை விரிவுபடுத்த வேண்டி கடனுக்காக [ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா] வங்கியை அணுகினார். அவருக்கு கடன் தருவதாக உறுதியளித்த வங்கி மேனேஜர் முன்கூட்டியே 10% கமிஷன் கேட்டுள்ளார். இதை நம்பிய மன்ஹர் பணத்தை ஏற்பாடு செய்து மேனேஜருக்கு கொடுத்தார்.

    ஆனாலும் ஆசை அடங்காத மேனேஜர், கோழிக் கறி மீது தனக்குள்ள விருப்பத்தை வெளிப்படுத்தி, வாரந்தோறும் சனிக்கிழமை மன்ஹரை தவறாமல் நாட்டு கோழி கொண்டுவரச் சொல்லி சமைத்து சாப்பிட்டுள்ளார் மேனேஜர். கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மன்ஹர் இதுவரை மொத்தம் ரூ.39,000 மதிப்புள்ள 900 கோழிகளை மேனேஜருக்கு கொடுத்துள்ளார்.

     

    இருந்தும் வங்கி மேலாளர் கடன் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். எனவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மன்ஹர் சம்பவத்தின் விவரங்களையும், தான் சப்ளை செய்த கோழிகளுக்கான பில்களையும் போலீசிடம் சமர்ப்பித்து புகார் அளித்தார்.

    தனக்கு நீதி கிடைக்காவிட்டால் வங்கியின் முன் தீக்குளிக்கப் போவதாகக் கூறி, மன்ஹர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து வங்கி மேனேஜர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×