நக்சல்களுக்கு எதிரான போரில் நசுங்கும் மக்கள் உயிர்கள், பழங்குடியின உரிமைகள் - வெல்கிறதா கார்ப்பரேட்?

இந்த என்கவுண்டரில் நான்கு சிறார்கள் காயமடைந்தது உறுதி செய்யப்பட்டது.சிறுவனின் தொண்டையில் இருந்து தோட்டா அகற்றப்பட்டது
நக்சல்களுக்கு எதிரான போரில் நசுங்கும் மக்கள் உயிர்கள், பழங்குடியின உரிமைகள் - வெல்கிறதா கார்ப்பரேட்?
Published on

சத்தீஸ்கரில் 2024 ஆம் ஆண்டில் 287 நக்சலைட்டுகளைக் பாதுகாப்பு படையினர் கொன்றதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் அறிவித்தார்.

இதில் உயர்மட்டத் தலைவர்கள்14 பேரும் அடங்குவர். மேலும் 1,000 பேரைக் கைது செய்யப்பட்டனர் என்றும் ஒரு வருடத்தில் 837 பேர் சரணடைந்தனர் என்றும் அவர் கூறினார். சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்து ஒரு வருட நிறைவை ஒட்டி பேசிய அமித் ஷா, மார்ச் 31, 2026 க்குள் நாகசலிசம் ஒழியும் என கவுண்டவுனையும் தந்துள்ளார்.

ஆனால் இந்த வெற்றி உள்ளூர் பழங்குடியினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகை குறைதல், மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் நியாயத்தன்மை பற்றிய விவாதங்கள் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகின்றன.

நக்சலிசத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அரசின் முயற்சிகள், அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்பு, பழங்குடிப் பகுதிகளின் இராணுவமயமாக்கல் மற்றும் பெருநிறுவன நலன்களுக்காக நடக்கும் அத்துமீறல் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன.

தி ஃப்ரண்ட்லைன் இதழின் அறிக்கைப் படி, என்கவுன்டர்களில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கை - 2023 இல் 20 இலிருந்து 2024 இல் 287 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நபர்களில் பலர் அப்பாவி பொதுமக்கள், அரங்கேற்றப்பட்ட என்கவுண்டர்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைப்பதில் அரசு வெற்றி பெற்றதாகக் கூறினாலும், உள்ளூர் கிராம மக்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்த புள்ளிவிவரங்களை மறுக்கின்றனர்.

சத்தீஸ்கரின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் கொடுத்துள்ள விலை அதிகம். ஜனவரி 2024 இல், தெற்கு சத்தீஸ்கரின் பிஜப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு மாத பெண் குழந்தை கொல்லப்பட்டது.

இந்த சம்பவம் ஆண்டு முழுவதும் நிகழ்ந்த இதேபோன்ற துயரங்களின் ஒரு பகுதியாகும். டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள அபுஜ்மத்தின் கும்மாம்-லேகாவாடா கிராமங்களில் மாவோஸ்யிடுகளை என்கவுன்டர் செய்ததாக பாதுகாப்புப் படையினர் கூறினர். இதில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் கொல்லப்பட்ட ஏழு பேரில் ஐந்து பேர் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பில்லாத பொதுமக்கள் விவசாயிகள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்த என்கவுண்டரில் நான்கு சிறார்கள் காயமடைந்தது உறுதி செய்யப்பட்டது. 

உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, ஒரு சிறுவனின் தொண்டையில் தோட்டா பாய்ந்துள்ளது, இதை மருத்துவர்களின் எக்ஸ் ரே உறுதி செய்தது. டிசம்பர் 20 அன்று, ராய்பூரில் உள்ள DKS சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சிறுவனின் தொண்டையில் இருந்து தோட்டா அகற்றப்பட்டது. இதற்கிடையில், தண்டேவாடாவில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு குழந்தைகள், போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

என்கவுன்ட்டர்களில் கொல்லப்பட்டவர்களில் பலர் மாவோயிஸ்டுகள் அல்ல, அப்பாவி பொதுமக்கள் என்று உள்ளூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 2024 இல் என்கவுன்டரில் கொல்லப்பட்ட இளம் பெண் கம்லி குஞ்சம் அதற்கு உதாரணம். அவரது தந்தை சோம்லி குஞ்சம், அவரது மகள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் வன்முறை அராஜக என்கவுண்டருக்கு அவர் இறையனார் என்றும் கூறுகிறார்

இதுபோல சத்தீஸ்கரின் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளில் வரம்பு மீறிய அதிகாரம் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இப்பகுதியில் வளர்ந்து வரும் இராணுவமயமாக்கல் பழங்குடி சமூகங்களின் உரிமைகளை மீறுகிறது என்றும் , நீதிக்கு புறம்பான கொலைகள் மற்றும் மக்கள் தங்கள் மூதாதையர் நிலங்களில் இருந்து கட்டாயமாக இடம்பெயர்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் நக்சல் கிளர்ச்சியை ஒடுக்குவதை விட சுரங்கத் துறை கார்ப்பரேட் நலன்களை பாதுகாப்பதற்காகவே அதிகம் முனைப்புடன் நடக்கிறது என்று பழங்குடி ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.

குறிப்பாக நக்சல்கள் மிகவும் தீவிரமாக செயல்படும் பஸ்தரில், அரசு செய்யும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள், அதிக பாதுகாப்பு முகாம்களை நிறுவுதல் என்பதுடன் அங்கு அதிகரித்துள்ள சுரங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது

இந்தப் பழங்குடிப் பகுதிகளில் சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் அமைப்பது பல ஆதிவாசிகளால் உள்ளூர் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நலன்களால் சுரண்டுவதை எளிதாக்கும் ஒரு கருவியாகக் கருதப்படுகிறது. இது உள்ளூர் மக்களிடையே பரவலான எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.

தி ஃப்ரண்ட்லைன் அறிக்கையின்படி, சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுரங்கம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பழங்குடி சமூகங்களின் ஒப்புதல் இல்லாதது குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

சத்தீஸ்கர் மாநில பழங்குடியினர் ஆணையத்தின் (CGSTC) அறிக்கையில், 'சர்குஜா மற்றும் சூரஜ்பூர் மாவட்டங்களில் சுரங்கம் தோண்டுவதற்கு போலி ஆவணங்கள் மூலம் ஒப்புதல் பெறப்பட்டது, பஞ்சாயத்துகள் சட்டத்தின் கீழ் பழங்குடியினரின் உரிமைகளை மீறியது.

ஆதிவாசிகள் அவர்களது நிலங்களில் இருந்து கட்டாயமாக இடம்பெயர்வதும், அவர்களின் எதிர்ப்பைக் குற்றமாக கருதுவதும், பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்புகளை அரசு புறக்கணிப்பதை எடுத்துக்காட்டுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினரின் வரம்பு மீறிய அதிகாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களின், குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

நக்சலிசத்தை ஒழிப்பதற்காக பாஜக அரசாங்கம் நிர்ணயித்துள்ள காலக்கெடு அப்பாவிகளின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தும் நடவடிக்கை என பூபேஷ் பாகேல் எச்சரித்துள்ளார்.

அக்டோபர் 2024 இல், பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பான மூலவாசி பச்சாவ் மஞ்ச் (MBM) ஐ சத்தீஸ்கர் அரசாங்கம் தடை செய்தது.

அரசாங்கம் ஆதரவளிக்கும் வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பது மற்றும் பாதுகாப்பு முகாம்களுக்கு எதிராக எதிர்ப்பைத் திரட்டுவது உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. 2021 இல் சில்கர் கிராமத்தில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 4 பேரை கொன்றது உட்பட தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களை எதிர்த்து இதுபோன்ற அமைப்புகள் போராடி வந்தன.

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் கார்ப்பரேட் நலன்கள் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு முன்னுரிமை அளிக்கும் தற்போதைய உத்தி, சத்தீஸ்கரில் பழங்குடியின மக்களின் துன்பத்தை அதிகப்படுத்துகிறது என்று அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.

இதற்கு பதிலாக கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை , உள்ளூர் சமூகங்களின் குறைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண மனித உரிமை ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com