என் மலர்tooltip icon

    இந்தியா

    • மருத்துவ முகாம்களில் சோதனை முடிவுகள் அன்று மாலையே அளிக்கப்படும்.
    • சுகாதாரத்துறை திட்டமாக இருந்தாலும் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட உள்ளன.

    சென்னை:

    சென்னையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் இந்த முகாம்களில் பங்கேற்கின்றனர்.

    இந்த நிலையில், முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    * சென்னையில் 15 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஒரு வட்டாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம் 1164 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

    * ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

    * மருத்துவ முகாம்களில் சோதனை முடிவுகள் அன்று மாலையே அளிக்கப்படும்

    * சுகாதாரத்துறை திட்டமாக இருந்தாலும் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட உள்ளன.

    * நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்பர் .

    * உப்பு, சர்க்கரை, எண்ணெயை சற்று குறை என்ற விழிப்புணர்வு நிகழ்வுகளும் முகாம்களில் நடத்தப்படும் என்றார்.

    • எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
    • மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    வையம்பட்டி:

    கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள வாழ்வார்மங்களம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலவெளியூரை சேர்ந்தவர் முத்து (67). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

    இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வையம்பட்டி அருகே உள்ள தேக்கமலை கோவிலில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டு கடவூர் செல்வதற்காக திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்தனர். தேக்கமலை கோவில்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் தாளகுளத்துப் பட்டியை சேர்ந்த வடிவேல் (39) என்பவர் வந்தார்.

    எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்து, வடிவேல் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதையடுத்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவரிடம் சிறிதும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
    • இரு மாதங்களில் இரு மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது இயல்பானதாகத் தோன்றவில்லை.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துவாக்குடியில் செயல்பட்டு வரும் திருச்சி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் எம்.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற மாணவர், அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். யுவராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாணவர் யுவராஜ் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக ஆயிரமாயிரம் மர்மங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, மாணவனின் உயிரிழப்பை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன. மாணவர் யுவராஜ் அவரது விடுதி அறையின் கதவைப் பூட்டிக் கொண்டு, கேபிள் ஒயரைக் கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான பொய் என்றும், அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.

    துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த திருவள்ளூரைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி கிருத்திகா கடந்த ஜூன் 11-ஆம் நாள் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாயின. அதைத் தொடர்ந்து அனைத்து அறைகளிலும் உள்புறமாக தாழிடும் வசதி அகற்றப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது மாணவர் யுவராஜ் எவ்வாறு விடுதி அறையின் கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும்? என்று சக மானவர்களும், யுவராஜின் பெற்றோரும் எழுப்பும் வினாக்களுக்கும் பள்ளி நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை.

    அதுமட்டுமின்றி, மாணவர் யுவராஜ் மர்மமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் தினத்திற்கு முந்தைய நாள் இரவு, அவர் தமது தாய், தந்தையருடன் தொலைபேசியில் மகிழ்ச்சியாக உரையாடியிருக்கிறார். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவரிடம் சிறிதும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இத்தகைய சூழலில் மாணவர் யுவராஜ் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியவில்லை.

    தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் மாதிரி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் நன்கு படிக்கும் மாணவர்கள் மட்டும் தான் பல்வேறு தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதிரி பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். அதிலும் குறிப்பாக இந்த மாதிரிப் பள்ளி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்தத் தொகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியை கடந்த மே மாதம் 8-ஆம் தேதி தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பள்ளியில் அனைத்து சர்ச்சைகளுக்கும் அப்பாற்பட்டு, மாணவர்கள் மன மகிழ்ச்சியுடன் கல்வி கற்பதற்கான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால், அத்தகைய சூழல் அங்கு இல்லை.

    திருவெறும்பூர் துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இரு மாதங்களில் இரு மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது இயல்பானதாகத் தோன்றவில்லை. இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். அதற்காக மாணவர் யுவராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் மாணவர் யுவராஜின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை.
    • சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சி லிங்காபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான காந்தவயல், மொக்கை மேடு, பழைய கூத்தாமண்டி பிரிவு, திம்மராயம்பாளையம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் வாழை பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது பவானி ஆறு, மாயாறு ஆறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கவே, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியிலும் நீர்மட்டமும் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் உள்ள லிங்காபுரம், காந்தவயல், மொக்கை மேடு, பழைய கூத்தாமண்டி பிரிவு, திம்மராயம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வாழை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    50 ஆயிரம் வாழைகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை. சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 

    • அப்துல்லாவின் வருகை குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
    • இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல ஊக்குவிக்கும்.

    ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று குஜராத்தில் உள்ள வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலையை பார்வையிட்டார்.

    இந்நிலையில் அப்துல்லாவின் வருகை குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    சபர்மதி ஆற்றங்கரையில் காலை ஓட்டப் பயிற்சி செய்து ஒற்றுமை சிலையை பார்வியிட்ட படங்களை முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் தலத்தில் பகிர்ந்தார்.

    இதை பிரதமர் மோடி மறுபதிவு செய்து, 'காஷ்மீரிலிருந்து கெவாடியா வரை. சபர்மதி ஆற்றங்கரையில் ஒற்றுமை சிலையைப் பார்வையிட்ட உமர் அப்துல்லாவைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

    அவரது வருகை ஒற்றுமையின் ஒரு முக்கிய செய்தியை அளிக்கிறது. மேலும் நமது சக இந்தியர்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல ஊக்குவிக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

    குஜராத் பாஜக அரசால் ரூ. 2,989 கோடி செலவில் கட்டப்பட்ட ஒற்றுமை சிலை கடந்த 2018 இல் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது. 

    • நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.73,360-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை விலை மாற்றமின்றியும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்தும், புதன்கிழமை சவரனுக்கு ரூ.480 உயர்ந்தும், நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.73,360-க்கும் விற்பனையானது

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,150-க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,200-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 123 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    31-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360

    30-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680

    29-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200

    28-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    27-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    31-07-2025- ஒரு கிராம் ரூ.125

    30-07-2025- ஒரு கிராம் ரூ.127

    29-07-2025- ஒரு கிராம் ரூ.126

    28-07-2025- ஒரு கிராம் ரூ.126

    27-07-2025- ஒரு கிராம் ரூ.126

    • நடைபயிற்சியின்போது சந்தித்து வணக்கம் தெரிவித்து கொண்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி இருந்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை மீண்டும் சந்தித்தார்.

    சென்னை அடையாறு அருகே உள்ள தியோசபிக்கல் சொசைட்டியில் நேற்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது அங்கே வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்தார்.

    இந்த சந்திப்பு குறித்து, ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், நான் நடைபயிற்சி மேற்கொண்டபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது சந்தித்து வணக்கம் தெரிவித்து கொண்டோம் என்று கூறி இருந்தார்.

    இது பல்வேறு யூகங்களை கிளப்பிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை மீண்டும் சந்தித்தார். இந்த சந்திப்பு, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நடந்தது.

    ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சரின் உடல் நலன் குறித்து விசாரித்தார். மேலும், முதலமைச்சரின் சகோதரர் மு.க.முத்துவின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திர நாத் ஆகியோர் இருந்தனர்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் இன்று காலையில் மீண்டும் சந்தித்து பேசினார். இன்று காலையில் அடையாறு தியோசோபிகல் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டபோது 3-வது முறையாக அவர்கள் சந்தித்து பேசினார்கள். சுமார் 15 நிமிடங்கள் அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் சிறிது தூரம் அவர்கள் நடந்து சென்றபடியே பேசினார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் இன்று 3-வது முறையாக சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    • இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை போலீசார் சிறையில் இருந்து அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • கொலை வழக்கிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கினர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீஸ்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இந்த வழக்கின் அப்ரூவராக மாறுகிறேன் என்று கூறி மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஏன் அப்ரூவராக மாற முடிவு செய்தார் என்று பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

    இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி முத்துக்குமரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை போலீசார் சிறையில் இருந்து அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் அவர் சார்பில் 17 பக்கங்களை கொண்ட பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகியோர்தான் அவர்களின் கடையில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து உள்ளனர்.

    பின்னர் தந்தை, மகன் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கினர். போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தின்போது அங்கு நான் இல்லை. இதனை உறுதி செய்யும் வகையில் இந்த வழக்கில் சாட்சி அளித்தவர்கள், சம்பவத்தின்போது நான் அங்கு இல்லை என்று தெரிவித்து உள்ளனர். எனவே இந்த கொலை வழக்கிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதன் காரணமாக நான் அப்ரூவராக மாறுவதற்கு அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு பிரமாண வாக்குமூலத்தில் கூறப்பட்டு இருந்தது.

    ஸ்ரீதரின் இந்த பிரமாண வாக்குமூலத்தை ஏற்கக்கூடாது என சி.பி.ஐ. மற்றும் ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பு வழங்குவதற்காக விசாரணையை வருகிற 4-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • ‘போட்டோ ஷூட்’ நடத்தியபோது, கடல் அலை காரணமாக நிலை தடுமாறி விழுந்ததில் டாக்டர் தம்பதி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
    • எனது மகள், மருமகன் உயிரிழந்த கடல் பகுதியில் ஏற்கனவே பல விபத்துகள் நடந்துள்ளன.

    சென்னை:

    சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீா்குப்பத்தை சோ்ந்தவா் திருஞானசெல்வம். இவரது மகள் விபூஷ்னியா. இவருக்கும், லோகேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

    டாக்டர் தம்பதியான இவர்கள், தேனிலவுக்காக இந்தோனேசியா சென்றனா். இந்தோனேசியா கடலில் படகில் சென்ற அவர்கள் 'போட்டோ ஷூட்' நடத்தியபோது, கடல் அலை காரணமாக நிலை தடுமாறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    டாக்டர் தம்பதியை தேனிலவு அழைத்து சென்ற சுற்றுலா நிறுவனத்தின் தவறான வழிகாட்டுதலால் தான் இந்த விபத்து நடந்ததாக கூறி டாக்டர் விபூஷ்னியாவின் தந்தை திருஞானசெல்வம் வக்கீல்கள் காசிராஜன், அஜித்குமார் ஆகியோர் மூலம் சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் சுற்றுலா நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தாக்கல் செய்த மனுவில், 'எனது மகள், மருமகன் உயிரிழந்த கடல் பகுதியில் ஏற்கனவே பல விபத்துகள் நடந்துள்ளன. சுற்றுலா நிறுவனம் இதை கருத்தில் கொள்ளாமல் அங்கு அழைத்து சென்றுள்ளது. சுற்றுலா நிறுவனத்தின் அஜாக்கிரதை மற்றும் தவறான வழிகாட்டுதலால் தான் இருவரும் உயிரிழக்க நேரிட்டுள்ளது. எனவே, சுற்றுலா நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணையின்போது சுற்றுலா நிறுவனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சுற்றுலா நிறுவனத்தின் எச்சரிக்கையை பின்பற்ற தவறியதுதான் இந்த விபத்துக்கு காரணம் ஆகும். இந்த விபத்துக்கு சுற்றுலா நிறுவனம் பொறுப்பேற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மனுவை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு, 'சேவை குறைபாட்டுக்காக ரூ.1½ கோடியும், மன உளைச்சலுக்காக ரூ.10 லட்சமும் என மொத்தம் ரூ.1 கோடியே 60 லட்சத்தை மனுதாரருக்கு சுற்றுலா நிறுவனம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் பட்டியலில் சேர்ப்பு.
    • பனையூர் கிழக்கு கடற்கரை சாலை முகவரியில் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் சேர்த்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை பின்பற்றி, மாநில தேர்தல் ஆணையமும் தமிழக வெற்றிக்கழகத்தை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் சேர்த்து தற்போது அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. பனையூர் கிழக்கு கடற்கரை சாலை முகவரியில் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் பட்டியலில் சேர்த்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை ஏற்றுக்கொண்டு மாநில தேர்தல் ஆணையமும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    • ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிக்க ஜூலை 30-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • தற்போது கூடுதலாக ஒரு வார காலஅவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    2026-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிக்க ஜூலை 30-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கூடுதலாக ஒரு வார காலஅவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 7-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை இந்திய ஹஜ் அசோசியேசன் உறுதி செய்துள்ளது.

    எனவே ஹஜ் பயணம் செல்வோர் வருகிற 7-ந்தேதி வரை விண்ணப்பத்திற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகவலை இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • சப்தகிரி நகர், பாண்டியன் நகர், லட்சுமிபுரம், மாருதி அவென்யூ.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (02.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    ஆவடி: சப்தகிரி நகர், பாண்டியன் நகர், லட்சுமிபுரம், மாருதி அவென்யூ, அசோக் நிரஞ்சன் நகர், ஸ்ரீ ராம் நகர், மூர்த்தி நகர், டிஎன்எச்பி, ஆதிபராசக்தி நகர், தீயணைப்பு நிலைய சாலை, பருத்திப்பட்டு, காமராஜர் நகர், வசந்தம் நகர், ஜேபி எஸ்டேட், ஜீவா நகர், சங்கர் நகர், புட் வனகிரி, என்.எம். ஆனந்தன் நகர்.

    வேளச்சேரி: வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், தபதி அம்மான் தெரு, ஜெகந்நாதபுரம், த.ப. செல்வா நகர், சீதாராமன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி மற்றும் பேபி நகர்.

    கொட்டிவாக்கம்: ஜர்னலிஸ்ட் காலனி, லட்சுமண பெருமாள் நகர் 1 முதல் 6வது தெரு, ராஜா கார்டன், ராஜா கல்யாணி தெரு, குப்பம் ரோடு, நியூ காலனி 1 முதல் 3வது தெரு, கற்பகம்பாள் நகர் 1 முதல் 3வது தெரு, ஸ்ரீனிவாசபுரம் 1வது, 2வது தெரு, நஜீமா அவென்யூ, திருவள்ளுவர் 3-வது தெரு, திருவள்ளுவர் நகர் 2 முதல் 7வது மெயின் ரோடு, காவேரி நகர் 1 முதல் 6வது தெரு, பேவாட்ச் பவுல்வர்டு, வள்ளலார் நகர், கொட்டிவாக்கம் குப்பம் 1வது தெரு, ஹவுசிங் போர்டு அபார்ட்மெண்ட்ஸ் தென்றல் எச்43 முதல் எச்50, மற்றும் முல்லை எச்70 முதல் எச்78 பிளாட் வரை.

    பூந்தமல்லி: கோல்டன் ஹோம்ஸ் FDR 1,2, மற்றும் காடுவெட்டி ஆவடி ரோடு.

    ×