search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sathankulam Custodial Death"

    • ஒன்பது பேரும் ஜாமின் கேட்ட மனுக்கள் தள்ளுபடி ஆகி இருந்தன.
    • மகளுக்கு பூப்புனித நீராட்டு விழாவிற்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கூறி போலீஸ்காரர் வெயிலுமுத்து மனு தாக்கல் செய்தார்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020 ஆம் ஆண்டில் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர் வெயிலு முத்து உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஒன்பது பேரும் ஜாமின் கேட்ட மனுக்கள் தள்ளுபடி ஆகி இருந்தன. இந்த நிலையில் தனது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நாளை (7-ந்தேதி) நடக்க இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என்று கூறி மதுரை ஐகோர்ட்டில் போலீஸ்காரர் வெயிலுமுத்து மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மனுதாரருக்கு இன்று மாலை 6 மணி முதல் சனிக்கிழமை மாலை 6 மணி வரை 3 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    • சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.
    • இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமின் மனு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.

    இந்த வழக்கில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசாரை சி.பி.ஐ. கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமின் மனு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், தந்தை, மகன் கொலை வழக்கில் ஒரு சாட்சியிடம் 28 நாட்களுக்கு மேலாக குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதால், வழக்கு விசாரணை தாமதம் என்று கூறினார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் குறுக்கு விசாரணை என்ற பெயரில் 28 நாள் விசாரணை நடைபெற்றால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா இல்லை தினந்தோறும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளிப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதைத்தொடர்ந்து ஜாமின் கோரிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • ரகு கணேசுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
    • சாத்தான்குளம் வழக்கில் ஜாமீன்கோரி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.

    இந்த வழக்கில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசாரை சி.பி.ஐ. கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்தநிலையில், சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், "சாத்தான்குளம் வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். உடல் நலக்குறைவு காரணமாக சிரமப்பட்டு வருகிறேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும், என கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நேற்று மீண்டும் நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரகு கணேசுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து ரகு கணேசின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே 4 முறை அவரது ஜாமீன் மனுக்கள் ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சாத்தான்குளம் வழக்கில் ஜாமீன்கோரி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நேற்று நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. சாத்தான்குளம் சம்பவத்தில் இறந்த ஜெயராஜின் மனைவி, செல்வராணி தரப்பில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்ககூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

    மேலும் சி.பி.ஐ தரப்பு மற்றும் ஸ்ரீதர் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. அதனை தொடர்ந்து இறுதி விசாரணைக்காக இந்த வழக்கை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • இரட்டைக்கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது.
    • ஜெயராஜூம், பென்னிக்சும் இறந்ததற்கு காரணம், போலீசாரின் தொடர் தாக்குதல்கள்தான்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரும் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களை போலீசார் கடுமையாக தாக்கினார்கள்.

    இதில் படுகாயம் அடைந்த அவர்களை, கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு காயங்களால் அவதிப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். இதுகுறித்து சி.பி.ஐ., இரட்டைக்கொலை வழக்குபதிவு செய்தது. இந்த வழக்கில் சாத்தான்குளத்தின் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த இரட்டைக்கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. பல்வேறு முக்கிய சாட்சிகள் கோர்ட்டில் ஆஜராகி, சாட்சியம் அளித்துள்ளனர்.

    இந்தநிலையில் இந்த வழக்கானது பொறுப்பு நீதிபதி தமிழரசி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கைதான 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பரிசோதனை செய்து, அதுசம்பந்தமாக அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்வதற்காக எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழுவைச் சேர்ந்த டாக்டர் அரவிந்த்குமார், நீதிபதி முன்பு நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் கைதான 2 பேர் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

    இதையடுத்து இந்த வழக்கை வருகிற 24-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    எய்ம்ஸ் டாக்டர் அரவிந்த்குமார் அளித்த சாட்சியம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்த அறிக்கையில் அவர்கள் இருவரையும் போலீசார் லத்தி, உருளை போன்றவற்றால் தாக்கினர். மீண்டும் மீண்டும் அவர்களை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து உள்ளனர். இதனால் உடல் உறுப்புகள் கொஞ்சம், கொஞ்சமாக செயல் இழந்துதான் அடுத்தடுத்து தந்தை-மகன் பரிதாபமாக இறந்தனர் என கூறியிருந்தனர்.

    அந்த அறிக்கையை எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவைச்சேர்ந்த நாங்கள் ஆய்வு செய்தோம். பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின்பு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம். ஜெயராஜூம், பென்னிக்சும் இறந்ததற்கு காரணம், போலீசாரின் தொடர் தாக்குதல்கள்தான்.

    இவ்வாறு டாக்டர் அரவிந்த்குமார் சாட்சியம் அளித்ததாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • குற்றம் சாட்டப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
    • மதுரை மத்திய சிறையில் உள்ள போலீஸ்காரர் வெயிலுமுத்துவுக்கு கடந்த 3 நாட்களாக மூச்சு திணறல் பாதிப்பு இருந்து வருகிறது.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை மகன் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேரும் போலீசார் தாக்கியதில் இறந்தனர். இது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த அப்போதைய சாத்தான் குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 9 பேர் மீது சி.பி.ஐ. போலீசார் முதல்கட்டமாக 2027 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    அடுத்தபடியாக 400 பக்க குற்றப்பத்திரிகை கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் 104 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 46 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள போலீஸ்காரர் வெயிலுமுத்துவுக்கு கடந்த 3 நாட்களாக மூச்சு திணறல் பாதிப்பு இருந்து வருகிறது. இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து வருகிறது.

    சிறையில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • முகம் முழுவதும் ரத்த வழிய நடக்க முடியாத நிலையில் அவர்கள் இருந்தனர்.
    • காவல்நிலையத்தில் வைத்து விடிய விடிய அடித்ததாக தெரிவித்தனர்.

    துாத்துகுடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 19ந் தேதி விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் காவல்நிலையத்தில் கடுமையாக தாக்கினர். கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கின் விசாரணை, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று விசாரணை நடைபெற்ற போது முக்கிய சாட்சியான ராஜாசிங் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: 


    இந்த சம்பவம் நடைபெற்ற போது நான் சிறையில் இருந்தேன். சாப்பிட செல்லும் போதுதான் அவர்களை நான் பார்த்தேன், இருவரும் நடக்க முடியாமல் இருந்தனர். முகம் முழுவதும் ரத்த வழிய அவர்கள் சோர்வாக இருந்தனர். அவர்களிடம் நான் கேட்ட போது சாத்தான்குளத்தில் வைத்து அடித்து விட்டதாக கூறினர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தூண்டுதலின் பேரில் காவல்நிலையத்தில் வைத்து விடிய விடிய காவல்துறையினர் அடித்ததாக அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தேன்.

    வேறு வழக்கு ஒன்றிற்காக என்னையும் சாத்தான் குளம் காவல்நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தூண்டுதலின் பேரில் மூன்று நாட்கள் வைத்து அடித்து சித்தரவதை செய்து கொடுமைப்படுத்தினர். மற்றொரு காவல்நிலையத்திற்கும் அழைத்துச் சென்று அடித்தனர். இதனால் எனது உடலில் படுகாயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். செய்யாத குற்றத்திற்காக என்னை சித்தரவதை செய்து கையெழுத்து வாங்கி சிறையில் அடைத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை அழைத்து வந்து, மாடியில் உள்ள அறையில் அடைத்தனர்.
    • மறுநாள் போலீஸ் நிலையத்திற்கு உள்ளே வந்தபோது ரத்த வாடை வீசியது.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்தனர். இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பலர் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். இந்த வழக்கில் சாட்சியாக சில போலீஸ்காரர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி நாகலட்சுமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    முக்கிய சாட்சிகளில் ஒன்றாக கருதப்படும் பெண் போலீஸ் பியூலா செல்வகுமாரி சாட்சியம் அளித்தார்.

    பகல் 12 மணி அளவில் தொடங்கிய இவரது சாட்சியம் மாலை 5.30 மணி வரை நீடித்தது. இதை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கை வருகிற 23-ந் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினமும் பியூலா செல்வகுமாரி மீண்டும் ஆஜராகி சாட்சியம் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    பியூலா செல்வகுமாரி நேற்று சாட்சியம் அளித்தபோது நீதிபதியிடம் கூறியதாக கூறப்படும் தகவல்கள் பின்வருமாறு:-

    சம்பவம் நடந்த அன்று சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை அழைத்து வந்து, மாடியில் உள்ள அறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கினர்.

    அப்போது ஜெயராஜ், "நான் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளேன். என்னால் வலி தாங்க முடியவில்லை" என்று கதறினார். இதனால் போலீஸ்காரர்கள் அடிப்பதை நிறுத்தினர்.

    ஆனால் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் போலீஸ் நிலையத்தின் தரைத்தளத்தில் இருந்து கொண்டு, அவர்கள் இருவரையும் போலீஸ்காரர்கள் தொடர்ந்து அடிக்கிறார்களா? எந்த சத்தத்தையும் கேட்க முடியவில்லை? என்று கேட்டுக் கொண்டே இருந்தார். மேலும் அவர்களை அடிக்கும்படி தூண்டி விட்டுக்கொண்டே இருந்தார். இதனால் மற்ற போலீஸ்காரர்கள் தந்தை, மகனை தொடர்ந்து தாக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் பணி முடிந்து வீட்டுக்கு சென்றுவிட்டேன்.

    மறுநாள் போலீஸ் நிலையத்திற்கு உள்ளே வந்தபோது ரத்த வாடை வீசியது. ரத்தக்கறைகளை பென்னிக்ஸ் உள்ளாடைகளை வைத்து, அவரையே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் துடைக்க வைத்தார் என்றும் கேள்விப்பட்டேன்.

    இவ்வாறு பியூலா செல்வகுமாரி சாட்சியம் அளித்ததாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் போலீஸ் நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து தாக்கப்பட்டனர்.
    • இரட்டை கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை:

    சாத்தான்குளம் வழக்கில் இன்னும் எத்தனை சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டி உள்ளது? என்று அறிக்கை தாக்கல் செய்யும்படி, மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து தாக்கப்பட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இதில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இரட்டை கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்று ஜெயராஜின் மனைவி செல்வராணி, கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. எனவே கூடுதலாக அவகாசம் அளிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டில் கோரிக்கை வைத்தது.

    அதன்படி 6 மாதம் கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது சாட்சியங்கள் விசாரணை நடந்து வருவதால், வழக்கு விசாரணையை முடிக்க மேலும் அவகாசம் வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் சம்பந்தப்பட்ட கோர்ட்டு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் சாட்சியங்கள் விசாரணை நடக்கிறது. சமீபத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு விசாரணையை முடிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

    இதனை தொடர்ந்து நீதிபதி, இதுவரை எத்தனை சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. எத்தனை சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டி உள்ளது, எவ்வளவு கால அவகாசம் இன்னும் தேவைப்படும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • ஜெயராஜ்-பென்னிங்ஸ் ஆகியோரின் உடல்களில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்து போலீஸ் நிலையத்தின் சுவர்கள், தரை, அங்கிருந்த பொருட்களில் தெறித்துள்ளது.
    • போலீஸ் நிலைய சுவர்களில் இருந்த ரத்தம், இருவரையும் தாக்கிய லத்திகளில் இருந்த ரத்தக்கறை தடயவியல் ஆய்வு முடிவில் உறுதியாகி உள்ளது.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், கடுமையாக தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். இந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சி.பி.ஐ. போலீசார் கொலை வழக்குபதிவு செய்தனர். இதில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் 2,027 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்பேரில் சாட்சிகள் ஆஜராகி தங்களின் சாட்சியங்களை பதிவு செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் 400 பக்கங்கள் அடங்கிய கூடுதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. போலீசார், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில் வழக்கு தொடர்பான பல புதிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    மேலும் இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் புதிதாக 2 சாட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வெண்ணிலா மற்றும் கோவில்பட்டி சிறையில் இருந்த கைதி ராஜாசிங் ஆகியோர் புதிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சி.பி.ஐ. புதிதாக தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்களின் விவரம் வருமாறு:-

    சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் 19-6-2020 அன்று மாலை காமராஜர் பஜாரில் இருந்து ஜெயராஜையும், பென்னிக்சையும் சட்டவிரோதமாக அழைத்துச்சென்று, அவர்கள் இருவரையும் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.

    கடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். அதன் பின் தந்தை-மகன் இருவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜெயராஜ்-பென்னிங்ஸ் ஆகியோரின் உடல்களில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்து போலீஸ் நிலையத்தின் சுவர்கள், தரை, அங்கிருந்த பொருட்களில் தெறித்துள்ளது.

    படுகாயங்களால் அவதிப்பட்ட போதும் பென்னிக்ஸ் சுவர் தரைகளில் இருந்த ரத்தத்தை சுத்தப்படுத்துமாறு போலீசார் கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு எதிராக ஒரு பொதுவான நோக்கத்துடன் குற்றவியல் சதித்திட்டம் தீட்டி உள்ளனர்.

    மேலும் போலீஸ் நிலையத்திலிருந்து தந்தை-மகனை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தும்போது ரத்தக்கறைகள் இருக்கக்கூடாது என்று கருதி ரத்தக்கறையுடன் இருந்த அவர்களின் உடைகளை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாற்றி உள்ளனர்.

    பின்னர் அவர்கள் இருவரின் ரத்தக்கறை படிந்த உடைகளை குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் குப்பைத்தொட்டியில் வீசி உள்ளனர். சாத்தான்குளம் போலீஸ் நிலைய சுவர்களில் இருந்த ரத்தம், இருவரையும் தாக்கிய லத்திகளில் இருந்த ரத்தக்கறை தடயவியல் ஆய்வு முடிவில் உறுதியாகி உள்ளது.

    எனவே இந்த வழக்கில் கைதானவர்கள் மீதான குற்றசாட்டு உறுதியாகிறது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீஸ்காரர்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை ஆகியோர் போலீஸ் நிலையத்தில் தந்தை-மகன் இருவரையும் துன்புறுத்தி உள்ளனர் என்பது விசாரணையில் உறுதியாக தெரியவந்துள்ளது.

    போலீஸ்காரர்கள் தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகியோரும் இறந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரை அநியாயமாக அடைத்து வைக்கும் நோக்கில் குற்றவியல் சதியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

    • சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வெண்ணிலா மற்றும் கோவில்பட்டி சிறையில் இருந்த கைதி ராஜாசிங் ஆகியோர் புதிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
    • முதலாவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சாட்சிகளிடம் தானாகவே குறுக்கு விசாரணை நடத்தினார்.

    மதுரை:

    சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் 400 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. நேற்று மதுரை கோர்ட்டில் தாக்கல் செய்தது. இந்த சம்பவத்தில் கைதான 9 போலீசாருக்கு எதிரான வீடியோ ஆதாரங்கள் பற்றிய பரபரப்பு தகவல்கள் இதில் இடம் பெற்று உள்ளன.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். இந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. கொலை வழக்குபதிவு செய்தது. இதில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அந்த சமயத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதானார்கள்.

    இந்த இரட்டை கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதன்பேரில் சாட்சிகள் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணைக்கு உதவியாக சுமார் 400 பக்கங்களுடன் கூடிய கூடுதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மதுரை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றது தொடர்பாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்த தகவல்கள் வருமாறு:-

    ஜெயராஜ்-பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் அழைத்துச் சென்றபோது பதிவான வீடியோ, அங்கிருந்து சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது அவர்களின் உடம்பில் இருந்த ரத்தக்கறை, ரத்தக்கறையுடன் இருந்த ஆடைகளை மாற்றியதற்கான வீடியோ பதிவுகள், தடயவியல் துறையினர் ஆய்வு குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் புதிதாக 2 சாட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அதாவது சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வெண்ணிலா மற்றும் கோவில்பட்டி சிறையில் இருந்த கைதி ராஜாசிங் ஆகியோர் புதிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இந்த சம்பவம் நடந்தபோது சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசான ரேவதி, பியூலா ஆகியோர் இந்த வழக்கில் தொடர்புடைய பல்வேறு வீடியோக்களையும் பார்த்து, எந்த சம்பவம் எப்போது நடந்தது என்று ஒவ்வொரு நகர்வையும் ஆதாரத்துடன் தெரிவித்து உள்ளனர்.

    தடய அறிவியல் நிபுணர்களின் அறிக்கைகளும், இந்த வழக்கில் கைதானவர்கள்தான் குற்றவாளிகள் என்பதற்கான ஆதாரங்களாக உள்ளன என்பதாக கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் தகவல்கள் இடம்பெற்று இருந்தன என கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதுவரை இந்த வழக்கின் முதலாவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சாட்சிகளிடம் தானாகவே குறுக்கு விசாரணை நடத்தினார். ஆனால் நேற்று தனக்காக ஒரு வக்கீலை நியமித்து, ஜாமீன் கேட்டு இதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இதனை தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்த 9 போலீசாருக்கும் கூடுதல் குற்றப்பத்திரிகையின் நகல் மற்றும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் பிரேத பரிசோதனை சம்பந்தமான அறிக்கை அடங்கிய சி.டி. ஆகியவை வழங்கப்பட்டன. பின்னர் இந்த வழக்கு வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    • சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு 5 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென்று வந்தனர்.
    • ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை கொடூரமாக தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட மர மேஜையையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றி வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். கடந்த 2019-ம் ஆண்டு ஊரடக்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி சாத்தான்குளம் போலீசார், 2 பேரையும் போலீஸ் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கினர்.

    இதில் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி, அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு 5 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று திடீரென்று வந்தனர். அங்கு சீல் வைக்கப்பட்டு இருந்த அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் அறையின் சீலை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு இருந்த வழக்கு சம்பந்தமான சில முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

    மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை கொடூரமாக தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட மர மேஜையையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றி வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.

    சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை மீண்டும் கைப்பற்றி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
    • போலீஸ்காரர் சாமதுரை தனது மகள் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்ள இடைகால ஜாமீன் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு போலீஸ்நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த இரட்டைக்கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் சாத்தான்குளத்தில் அப்போதைய இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரரர் சாமதுரை உள்ளிட்ட போலீசார் 9 பேர் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலீஸ்காரர் சாமதுரை தனது மகள் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்ள தனக்கு இன்று (6-ந் தேதி) முதல் வருகிற 7-ந் தேதி வரை இடைகால ஜாமீன் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போலீஸ்காரர் சாமதுரை அவரது மகள் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொள்ள இன்று (6-ந் தேதி) மதியம் 1 மணிமுதல் நாளை (7-ந் தேதி) மாலை 4 மணி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    ×