என் மலர்tooltip icon

    இந்தியா

    • நாடே இதுவரை கண்டிராத அளவுக்கு விமான போக்குவரத்தில் மிகப்பெரிய பிரச்சனை எழுந்துள்ளது.
    • சென்னையில் இன்று 23 புறப்பாடு, 18 வருகை என 41 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இந்தியாவின் விமான போக்குவரத்தில் இண்டிகோ நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. அந்த நிறுவனத்திடம் 434 விமானங்கள் உள்ளன. இதன் மூலம் உள்நாட்டு சேவைகள் 1,840-ம், சர்வதேச சேவைகள் 460-ம் என அந்த நிறுவனம் இயக்கி வருகிறது. அதன்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு விமான சேவையில் இண்டிகோ நிறுவனத்தின் பங்கு மட்டும் 55 சதவீதம் முதல் 68 சதவீதம் வரை உள்ளது.

    இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவின் உள்நாட்டு விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடே இதுவரை கண்டிராத அளவுக்கு விமான போக்குவரத்தில் மிகப்பெரிய பிரச்சனை எழுந்துள்ளது.

    இதனால், நாடு முழுவதும் இன்று 8-வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 7-வது நாளாக இன்றும் இண்டிகோ விமானங்கள் ரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னையில் இன்று 23 புறப்பாடு, 18 வருகை என 41 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.

    சென்னை:

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 14-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதனைத் தொடக்கி வைக்க இந்த விவாதம் 10 மணி நேரம் நடைபெறும்
    • அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில் SIR குறித்த விவாதம் இன்று மக்களவையில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதனைத் தொடக்கி வைக்க இந்த விவாதம் 10 மணி நேரம் நடைபெறும்

    இந்த விவாதத்தில் ராகுல் தலைமையின்கீழ் காங்கிரஸ் தலைவர்கள் வேணுகோபால், மணீஷ் திவாரி, வர்ஷா கெய்க்வாட், முஹம்மது ஜாவேத், உஜ்வல் ராமன் சிங், இஷா கான் சவுத்ரி, மல்லு ரவி, இம்ரான் மசூத், கோவல் பதி, ஜோதிமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை அவை தொடங்கும் முன் நடைபெற உள்ளது.

    காலை 9. 30 மணிக்கு நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்போது விவாதத்தில் என்ன பதிலளிப்பது என்பது குறித்து முன்கூட்டியே முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.  

    • ஆளும் தரப்பில் உள்ளவர்கள், தங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத தலைவர்களைத் தமதாக்கிக் கொள்ள மீண்டும் மீண்டும் முயல்கிறார்கள்
    • சவர்க்கர் சிறையில் இருந்தபோது கருணை மனுக்களை எழுதி, தனக்கான விடுதலையைப் பெற்றார். ஆனால், அந்த நேரத்தில் அந்தமான் சிறையில் இருந்த 585 கைதிகளில் 398 வங்காளிகள், தங்களின் தனிப்பட்ட விடுதலையை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்தனர்.

    பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' குறித்து நாடாளுமன்றத்தில் இன்று 10 மணி நேரம் நடைபெற்ற விவாதம், ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளிடையே பெரும் வார்த்தைப் போருக்கு வழிவகுத்தது.

    சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் இப்போது வந்தே மாதரத்தை நாட்டில் பிளவை ஏற்படுத்த ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    இதன்போது வந்தே மாதரம் தேசிய கீதம் ஆகாததற்கு நேருவே காரணம் என மக்களவையில் மோடி வசை பாடினார்.

    இதற்கிடையில் சமாஜ்வாடி கட்சித் தலைவரும் எம்.பியுமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், பிளவுபடுத்தும் சக்திகள் வந்தே மாதரத்தை பிரிவினையை உருவாக்கப் பயன்படுத்துகின்றனர் என்றும், இந்த நபர்கள் இன்றும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய அதே பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் என்றும் பாஜகவை விமர்சித்தார்.

    மேலும் "சுதந்திர போராட்டத்தால் பங்கேற்காதவர்கள் இன்று வந்தே மாதரம் பற்றி பேசுகிறார்கள். ஆளும் தரப்பில் உள்ளவர்கள், தங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத தலைவர்களைத் தமதாக்கிக் கொள்ள மீண்டும் மீண்டும் முயல்கிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையே மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. காகோலி கோஷ் தஸ்திதார் பேசுகையில், வந்தே மாதரம் இந்தியாவின் தேசியப் பாடல் மட்டுமல்ல, சுதந்திரப் போராட்டத்திற்கு உந்துசக்தி அளித்த மில்லியன் கணக்கான மக்களால் பாடப்பட்ட ஒரு பாரம்பரியச் சொத்து.

    உதாரணமாக, சவர்க்கர் சிறையில் இருந்தபோது கருணை மனுக்களை எழுதி, தனக்கான விடுதலையைப் பெற்றார். ஆனால், அந்த நேரத்தில் அந்தமான் சிறையில் இருந்த 585 கைதிகளில் 398 வங்காளிகள், தங்களின் தனிப்பட்ட விடுதலையை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்தனர்.

    இளம் வயதில் குதிராம் போஸ் தன் உயிரைத் தியாகம் செய்தபோது, இன்று உள்ள ஆளும் கட்சியின் மூதாதையர்கள் கருணை மனுக்களை எழுதுவதில் மும்முரமாக இருந்தனர்" என்று விமர்சித்தார்.

    இந்த விவாதத்தை அரசு நடத்துவதற்கு மேற்கு வங்கத்தில் நடக்க உள்ள தேர்தலே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்தார். 

    • மக்களுக்கு பாதுகாப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    • பூங்காக்களை திராவிட மாடல் அரசு போல் தமிழ்நாட்டில் அதிமுக அரசும் செய்யவில்லை.

    சட்டமன்ற தேர்தலுக்காக புதிய அவதாரம் எடுத்துள்ள அதிமுக- பாஜகவிற்கு திமுகவின் சாதனைகள் தூக்கத்தை கலைத்துவிட்டது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகளின் வரிசையில் அமலாக்கத்துறையையும் சேர்ந்து கொண்டு- அதை ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏவல் துறையாக்கி- நாளொரு புகாரும், பொழுதொரு பிரச்சாரமுமாக என்னைக் குறி வைத்து தொடர்ந்து அவதூறில் ஈடுபட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

    கடந்த ஐந்து வருடங்களில் எனது துறையின் கீழ் 24 ஆயிரத்து 752 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன. கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 1 கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    இன்னும் 77 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என இதுவரை 1762 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது- அதில் ஒன்று சமீபத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கோவை செம்மொழிப் பூங்கா! சென்னை என்றால் தொல்காப்பிய பூங்கா, கோவை என்றால் செம்மொழிப் பூங்கா என்பதோடு மக்கள் கண்டுகளிக்க- தங்களது பொழுது போக்கிற்கா ஏற்ற பூங்காக்களை திராவிட மாடல் அரசு போல் தமிழ்நாட்டில் அதிமுக அரசும் செய்யவில்லை.

    மற்ற மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. ஆளும் அரசுகளும் செய்யவில்லை. அதனால்தான் எனது துறையின் திராவிட மாடல் வளர்ச்சி எதிர்கட்சிகளின் கண்ணை உறுத்துவதை விட அமலாக்கத்துறையின் கண்களையும் உறுத்துகிறது.

    பேருந்து நிலையங்கள் என்று எடுத்துக் கொண்டால் இதுவரை 158 பேருந்து நிலையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாடப் பயணத்திற்கு மட்டுமல்ல- அத்தியாவசியப் போக்குவரத்து தேவைக்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவதில் எனது துறை வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளைச் செய்திருக்கிறது.

    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஐந்தாண்டுகளில் மாற்றும் அளவிற்கு வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். சென்னையில் அதிமுக ஆட்சியில் சாலைகளும்- சப்வேக்களும் ஒரு மழைக்கே வெள்ளக்காடாக காட்சியளித்ததை அனைவரும் அறிவர். ஆனால் இன்று சென்னையில் உள்ள சப்வேக்களில் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்கியிருக்கிறோம்.

    செம்பரம்பாக்கம் என்றாலே அதிமுக ஆட்சிதான் நினைவுக்கு வரும்! அந்த நிலையை மாற்றி எத்தகையை மழை வெள்ளத்திலும்- எத்தனை முறை செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறந்தாலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து- இன்னலின்றி மழை வெள்ளத் துயரங்களில் இருந்து சென்னை மக்களை காப்பாற்றியிருக்கிறோம்.

    அந்த வகையில் சென்னை மாநகாராட்சியில் மட்டும் 1519 கிலோ மீட்டர் தொலைவிற்கு மழைநீர் கால்வாய் பணிகளை செய்துள்ள அரசு இந்த திராவிட மாடல் அரசு மட்டும்தான். இந்த சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத –சட்டமன்றத் தேர்தலுக்கு புதிய அவதாரம் எடுத்துள்ள அதிமுக- பா.ஜ.க. கூட்டணி கட்சியினரின் தூக்கத்தை இந்த அரசின் சாதனைகள் கலைத்து விட்டன.

    குறிப்பாக பா.ஜ.க.வினரை இந்த சாதனைகள் ரொம்பவே மிரட்டுகிறது. ஒன்றிய நிதியை முடக்குகிறோம். ஆளுநரை வைத்து முட்டுக்கட்டை போடுகிறோம். ஏஜென்ஸிகளை விட்டு பிரச்சாரம் செய்கிறோம். ஆனாலும் சாதனைகள் செய்கிறார்களே என்ற எரிச்சல்! எனவே எத தின்னால் பித்தம் தெளியும் என திண்டாடுகிறார்கள். ஆகவே அமலாக்கத்துறை போன்ற ஏஜென்ஸிகளை ஏவி விடுகிறார்கள்.

    ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்ய வேண்டிய அரசியல் பிரச்சாரத்தை அமலாக்கத்துறையையே வைத்து செய்கிறார்கள். தன்னாட்சி மிக்க அமைப்பு என உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறை இன்று பா.ஜ.க.வின் துணை அமைப்பாக்கப்பட்டிருக்கிறது. என் சகோதரர் மீது 2013ல் வாங்கிய கடனை வைத்து போடப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் "எந்த குற்றமும் நடக்கவில்லை" என ரத்து செய்துவிட்டது.

    அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சும் ரத்து செய்து விட்டது. ஆனாலும் அமலாக்கத்துறையை மீண்டும் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி ஒன்றிய பா.ஜ.க. அரசு நிர்பந்திக்கிறது என்றால்- அவர்களுக்குப் பயம் நானல்ல! இந்த துறை செய்துள்ள சாதனைகள்!

    எனது துறைக்குள் எங்கு நுழைந்து பார்த்தாலும்- எங்கும் "சாதனை- சாதனை- சாதனை" என்றுதான் எதிரொலிக்கும். ஆனால் அதுவே ஒன்றிய பா.ஜ.க. அரசு தூண்டிவிடும் அமலாக்கத்துறையின் கண்களுக்கு ஆதாரமற்ற புகார்களாகத் தெரிகிறது! அப்பட்டமான அரசியல் செய்யத் தூண்டிவிடப்படுகிறது.

    மக்கள் போற்றும் எனது துறையின் சாதனைகளைப் பார்த்து வெதும்புவர்களுக்கு பதில் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நான் தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனது நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்குதல் நிர்வாகத்துறையைப் பொறுத்தமட்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்குதல், மழை நீர் வடிகால் பணிகளை நிறைவேற்றுதல், தலை சிறந்த பூங்காக்களை அமைத்தல் ஆகியவையே முதன்மையான பணிகள்! முழுமையான சாதனைகள்! மற்றபடி என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மக்கள் பணியாற்ற வந்துள்ள நாங்கள் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தூண்டுதலில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அமலாக்கத்துறைக்கோ- அல்லது "அதிமுக- பா.ஜ.க." கூட்டணியினர் "பொய்யையும், புரட்டையும்" மட்டுமே மூலதனமாக வைத்து ஈடுபடும் அவதூறுப் பிரச்சாரத்திற்கோ அஞ்சமாட்டோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நேரு 12 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். அதே ஆண்டுகள்தான் மோடி பிரதமர் பதவியில் உள்ளார்.
    • நாட்டின் முக்கிய பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே வந்தே மாதர விவாதம்

    இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்டு நடப்பாண்டுடன் 150 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அதனை கொண்டாடும் வகையில் இன்று மக்களவையில் 10 மணிநேரம் சிறப்பு விவாதம் நடத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதுபோல இன்று மக்களவையில் வந்தே மாதரம் குறித்த சிறப்பு விவாதத்தையும் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்களும் இதுகுறித்து உரையாற்றினர். ஆனால் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அந்த சிறப்பு விவாதத்தை தவிர்த்தனர். தொடர்ந்து வந்தே மாதரம் சிறப்பு விவாதம் தொடர்பாக மக்களவையில் பேசிய பிரியங்கா காந்தி பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். 

    மக்களவையில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, 

    "மேற்குவங்கத்தில் தேர்தல் வருவதனால்தான் வந்தே மாதரத்தை கையில் எடுத்துள்ளது பாஜக. நாட்டின் முக்கிய பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே வந்தே மாதர விவாதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

    கடந்த காலம் பற்றி பேசியே பாஜக அரசியல் செய்கிறது. நேரு குறித்து குறை கூறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் மோடி. நேரு 12 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். அதே ஆண்டுகள்தான் மோடி பிரதமர் பதவியில் உள்ளார். ஆனால் இன்னும் நேருவை குறைகூறுகிறார் மோடி. அவர் இஸ்ரோவை உருவாக்கவில்லை என்றால், மங்கள்யான் வந்திருக்காது. அவர் AIIM-களைத் தொடங்கவில்லை என்றால், கொரோனா வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்தியிருக்க முடியும்?


    நீங்கள் நேருவைப் பற்றி தொடர்ந்து பேசி வருவதால், ஒரு காரியத்தைச் செய்வோம். அந்த விவாதத்திற்கென ஒரு நேரத்தை ஒதுக்குவோம். அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் பட்டியலிடுவோம், அதைப் பற்றி விவாதிப்போம், இதை அதோடு முடித்துக்கொள்வோம். நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பற்றி விவாதிப்பது போல, உண்மையான பிரச்சினைகளுக்குப் பதிலாக, நேருவைப் பற்றி விவாதிப்போம்.

    நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் பல பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ளனர், அரசு அதை கவனிக்கவில்லை. இப்போது இதைப்பற்றி விவாதிப்பது ஏன்?. இந்த அரசு நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் புறக்கணித்துவிட்டு கடந்த காலத்தையே திரும்பிப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறது." என்று பேசினார். 

    • 3 நாட்களாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னின்று ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
    • தொண்டர்கள் அத்துமீறுவதை தடுக்க இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நாளை த.வெ.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு 2 மாதமாக த.வெ.க. தலைவர் விஜய் நேரடியாக பொதுமக்களை சந்திக்ககவில்லை. இதனால் புதுச்சேரி பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க. தலைவர் விஜய் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு பனையூரில் உள்ள வீட்டில் இருந்து காரில் புறப்படுகிறார். அங்கிருந்து சாலை வழியாக காலை 10.30 மணிக்கு உப்பளம் துறைமுக வளாகத்துக்கு வருகிறார். அவரை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்கிறார்.

    முன்னதாக விஜய் பிரச்சார வாகனம் இன்று இரவே புதுச்சேரிக்கு வந்து சேர்கிறது. அந்த வாகனத்தில் நின்றபடி த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார். கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு இருக்கை கிடையாது. அவர்களும் நின்றபடியே விஜய் உரையை கேட்கின்றனர்.

    பொதுக்கூட்ட மைதானம் டிட்வா புயல் மழை காரணமாக மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக இருந்தது. பொதுக்கூட்டத்துக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு, மண் கொட்டப்பட்டு, சமன் செய்யப்பட்டுள்ளது.

    உப்பளம் சாலையிலிருந்து கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றிலும் தகர ஷீட் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு வரும் தொண்டர்கள் அத்துமீறுவதை தடுக்க இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கான பணிகளை கடந்த 3 நாட்களாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னின்று செய்து வருகிறார்.

    போலீசாரின் அறிவுறுத்தலின்படி தொண்டர்கள் வந்து செல்ல வசதியாக துறைமுக வளாக சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, கூடுதலாக 2 நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பவர்கள் குடிநீர் வசதிக்காக பிளாஸ்டிக் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்துக்கு புதுச்சேரி போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அவர்கள் புதுச்சேரியை சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    இதனால் கூட்டத்தில் பங்கேற்போருக்கு கியூ.ஆர். கோடுடன் கூடிய பாஸ் இன்று மாலை முதல் த.வெ.க. நிர்வாகிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு நிர்வாகிக்கு 5 பாஸ்கள் வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்த பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    அதோடு கூட்டத்துக்கு கர்ப்பிணி பெண்கள், சிறுவர், சிறுமிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என புதுச்சேரி போலீசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கூட்டத்தை 12.30 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரியில் நேற்று முதல் போலீசார் கூட்டம் நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருவோர், வாகனங்களை சாலையோரம் நிறுத்தக்கூடாது. பழைய துறைமுக வளாகம், உப்பளம் மைதானம், பாண்டி மெரீனா கடற்கரை பின் பகுதியில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    உப்பளம் சாலையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல் பொதுகூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் வாகனங்களை குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தி விட்டு மைதானத்திற்கு நடந்தே வர வேண்டும்.

    பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது. கூட்டம் காலையில் நடப்பதால் இந்த பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்து செல்ல சிரமம் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு, பொதுக்கூட்டத்துக்கு வரும் பாதையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படும் என தெரிகிறது. அதோடு அந்த பகுதியை சுற்றியுள்ள மதுக்கடைகளை மூட கலால்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    • இறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு பெயர் நீக்கம்
    • முன்னதாக 2002-2005 காலகட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

    சிவகங்கை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்துஜா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக, இருவரும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    உயிருடன் இருக்கையில் இறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு தங்கள் பெயர் நீக்கப்பட்டதாக இந்துஜா, மாவட்ட ஆட்சியர் பொற்கொடியிடம் முறையிட்டார். அதற்கு பதிலளித்த அவர், "ஏதேனும் தவறுகள் இருந்தால் அதைச் சரி செய்வதற்காகத்தான் இந்த பட்டியலை உங்களுக்கு கொடுத்திருக்கிறோம். தவறு நடந்தால் ஊழியர்கள் மீதுத் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்," என்று விளக்கம் அளித்தார். இருப்பினும் இந்துஜா, அவரது கணவர் ஆட்சியரிடம் வாக்குவாதத்தை தொடர்ந்ததால், மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) கடந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ளிட்ட 9 மாநிலங்களிலும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களிலும் இந்த எஸ்.ஐ.ஆர். பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக, 2002-2005 காலகட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

    • சென்னை உரிமையியல் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்து ஒரு உத்தரவை பிறப்பித்தது.
    • உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. கட்சியின் முதன்மை உறுப்பினர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, 2022-ம் ஆண்டு பொதுக்குழுவால் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த எஸ். சூரியமூர்த்தி சென்னை 4-வது உரிமையியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அதேவேளையில் சூரிய மூர்த்தி தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால் சென்னை உரிமையியல் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்து ஒரு உத்தரவை பிறப்பித்தது.

    உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பாலாஜி, சூரிய மூர்த்தி அ.தி.மு.க.வின் உறுப்பினரே இல்லை என்றும் உறுப்பினர் அல்லாத ஒருவர் கட்சி விவகாரங்களில் கேள்வி எழுப்ப முடியாது என்ற எடப்பாடி தரப்பு வாதத்தையும் ஏற்று சென்னை சிவில் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, உரிமையியல் நீதிமன்றத்தில் சூரிய மூர்த்தி தாக்கல் செய்த மனுவையும் நிராகரித்து உத்தரவிட்டார்.

    இதனையடுத்து, சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சூரிய மூர்த்தி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் கடிதம்.
    • 20%- 25% வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுகவின் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும் கம்பி எண்ணப்போவது உறுதி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ரூ. 1,020,00,00,000 !!!

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

    ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர் கே.என்.நேரு, தனது உறவினர்கள் வாயிலாக டெண்டருக்கு 7.5% முதல் 10% வரை கமிஷன் கொள்ளை அடித்துள்ளது, இக்கடிதம் வாயிலாக வெளிவந்துள்ளது.

    கழிப்பறை கட்டுவது முதல், நபார்ட் வங்கி திட்டங்கள் வரை பட்டியல் போட்டு, 20%- 25% வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    மேலும், இதெல்லாம் "Tip of the Iceberg" தான் என தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, இதனை முழுமையாக விசாரிக்குமாறு தெரிவித்துள்ளது.

    வரலாறு நெடுக விஞ்ஞான ஊழல்களுக்கே பெயர்போன கட்சியான திமுக நடத்தும் ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதே, வெறும் "கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மாடல்" தான் என்பதை நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.

    ஏற்கனவே ED அனுப்பிய ரூ. 888 கோடி #CashForJobs முறைகேட்டை இன்று வரை விசாரிக்காமல், ஊழல் அமைச்சரைக் காப்பாற்றி வருகிறது ஸ்டாலின் அரசு! தற்போது, அடுத்த ஊழலும் வெளிவந்துள்ளது.

    திரு. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே,

    -மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம்.

    -ஆண்டுதோறும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம்.

    -பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ. 5000/- தாரளாமாக வழங்கலாம்.

    அவ்வளவு ஏன், தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம்.

    இவ்வளவு மக்கள் பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் தானும், தன் சகாக்களும் தப்பித்துக் கொள்வோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்?

    காலம் மாறுகிறது. காட்சிகள் மாறத் தொடங்கிவிட்டன. அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி.

    உண்மையிலேயே திரு. ஸ்டாலினுக்கு மடியில் கனமில்லை என்றால், வழியில் பயமின்றி இந்த ஊழல்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். செய்வாரா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மக்கள் சக்தியாக உருவெடுத்து வரும் விஜய் 2026-ல் தமிழக முதல்வராக அமர்வது உறுதி.
    • யார் வேண்டுமானாலும் வாக்கு சேகரிக்க வருவார்கள். அவர்களுக்கு வணக்கத்தை போடுங்கள். வாக்குகளை விஜய்க்கு போடுங்கள்.

    நம்பியூர்:

    முன்னாள் அமைச்சரும், த.வெ.க நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைந்த பிறகு கொங்கு மண்டலத்தில் கட்சியின் செல்வாக்கை உயர்த்தும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.

    தினமும் அவர் முன்னிலையில் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். விரைவில் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய பகுதி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசிக்கும் கலைக் கூத்தாடி மக்களை சந்தித்தார்.

    அப்பகுதி மக்கள் மத்தாளம் அடித்து, பட்டாசுகள் வெடித்தும், பூக்கள் தூவி, ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர்.

    அவர்கள் மத்தியில் செங்கோட்டையன் பேசும்போது, இங்கு இருக்கும் குழந்தைகளைக் கேட்டால் கூட விஜய்க்கு தான் ஓட்டு போடுவோம் என்கிறார்கள். ஆண்டவர்களே ஆள வேண்டுமா. மற்றவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கக் கூடாதா. நல்லா ஆட்சியை நடத்த புதிய முகத்தை தேடிக் கொண்டிருந்தீர்கள் கிடைத்துவிட்டார். எல்லோரும் நினைக்கிறார்கள் கடலில் என்னை தள்ளி விட்டதாக, ஆனால் விஜய் என்ற கப்பலில் ஏறி சென்று கொண்டிருக்கிறேன். நான் என்று ஒருவன் நினைத்தால் ஆண்டவன் தான் என்று காட்டி விடுவான்.

    "மக்கள் சக்தியாக உருவெடுத்து வரும் விஜய் 2026-ல் தமிழக முதல்வராக அமர்வது உறுதி. தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியை உருவாக்க விஜய் புறப்பட்டிருக்கிறார். மக்களுக்கு புனித ஆட்சியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அரசியலுக்கு வந்துள்ளார். அந்த வழியில் நானும் இணைந்து பயணிக்கிறேன்.

    நீங்கள் அஞ்சத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் வாக்கு சேகரிக்க வருவார்கள். அவர்களுக்கு வணக்கத்தை போடுங்கள். வாக்குகளை விஜய்க்கு போடுங்கள். விரைவில் சின்னம் கிடைக்கப் போகிறது. அந்த சின்னத்தை பார்த்து நாடே வியக்கப் போகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விமான நிலைய ரன்வேயில் இருந்து வானில் விமானம் பறந்தது.
    • திடீரென கீழே இறங்கி அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி தீப்பிடித்தது.

    அகமதாபாத்:

    அழகான மாலை நேரம். பார்க்கில் வாக்கிங் செல்பவர்கள் தங்களது நண்பர்களுடன் பேசிக் கொண்டும், காதில் இயர்போன் மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டும் சென்று கொண்டிருந்தனர்.

    அங்குள்ள பெஞ்சில் 65 வயது பெரியவர் சபேசன் உட்கார்ந்து இருந்தார். அங்குள்ளவர்களை சுற்றிலும் நோக்கினார்.

    அப்போது ஒருவர் வந்து அவரிடம், ஐயா என்னை நினைவிருக்கிறதா என கேட்டார்.

    சரியாக ஞாபகம் இல்லையேப்பா என சபேசன் கூறினார்.

    ஐயா, நான் தங்களிடம் படித்த மாணவன். என பெயர் முருகேஷ் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். படித்து வெளியூர் சென்று விட்டேன். தற்போது தான் இந்த ஊருக்கு வந்துள்ளேன் என்றார்.

    ரொம்ப சந்தோஷம்பா, என்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டாய்? என கேட்டார்.

    எங்களுக்கு எளிதில் புரியும் விதமாக ஒரு உதாரணம் சொல்லி தானே சார் நீங்க பாடம் நடத்துவீங்க. அதை எப்படி என்னால மறக்க முடியும் என உற்சாகமாக சொன்னார்.

    நல விசாரிப்புகள் முடிந்தபின் ஊர் உலக நடப்புகள் பற்றிய பேச்சு வந்தது.

    அப்போது அந்த ஆசிரியர், சரி உனக்கு எமன் கிட்ட இருந்து தன் புருஷனை மீட்ட சாவித்ரி பத்தி சொல்லி இருக்கேனே, அதுமாதிரி கடந்த ஆண்டு ஒரு ஆள் எமன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்திருக்கான் தெரியுமா உனக்கு என புதிர் போட்டார்.

    யாருன்னு எனக்கு சரியா தெரியலையே சார், சொல்லுங்க சார் ஞாபகம் வச்சிக்கிறேன் என்றார்.

    ஆசிரியர் கூறிய விஷயம் இதுதான்:

    குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ஜூன் மாதம் 12-ம் தேதி புறப்பட்டுச் சென்றது.


    ரன்வேயில் இருந்து வானில் பறந்த விமானம் திடீரென கீழே இறங்கி, விமான நிலையத்தின் அருகில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதி தீப்பிடித்தது.

    இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உள்பட மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர்.

    விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பிரிட்டனைச் சேர்ந்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்பவரே அந்த அதிசய மனிதர். விமான விபத்தில் இவரது உறவினர் பலியானதால் சோகத்தில் ஆழ்ந்தார்.

    நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. இறைவனுக்கு நன்றி எனக்கூறிய அவர், பிரதமர் மோடி நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறியது ஊக்கம் அளித்தது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.


    இப்படித்தான் அந்த ஆள் எமன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்தான் என கூறி முடித்த சபேசன், சரி, நான் கிளம்பறேன். வீட்டில் தேடுவாங்க. அடிக்கடி வந்துட்டு போப்பா. வேற யாராவது பார்த்தாலும் இங்க வரச்சொல்லு பேசலாம் என வீட்டுக்கு புறப்பட்டார்.

    தனது பள்ளி பருவ ஆசிரியரை சந்தித்த நிறைவுடன் முருகேசும் வீடு திரும்பினார்.

    ×