என் மலர்tooltip icon

    இந்தியா

    • கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தமிழக-கர்நாடகா எல்லையில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் பெலகாவியில், கர்நாடக மாநில அரசு போக்குவரத்து பஸ் கண்டக்டரை தாக்கிய வர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    பஸ் டிரைவர் மீதான மராட்டிய தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும், பெலகாவி காப்பாற்றப்பட வேண்டும்.

    எம்.இ.எஸ். கட்சியை தடை செய்ய வேண்டும். ,மேகதாது , கலச பண்டூரி, மகதாயி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தின் எல்லைப் பகுதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னட சலுவளி வாட்டள் கட்சி தலைவர் வாட்டள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் சார்பில், கர்நாடக மாநிலத்தில் `அகண்ட் கர்நாடக பந்த்' என்ற பெயரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.


    இதன் ஒரு பகுதியாக, ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி ஆர்ச் அருகில், இன்று காலை, கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில், கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மஞ்சுநாத் தேவா உள்ளிட்ட 30 பேரை கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் இன்று தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து எல்லை பகுதியில் கர்நாடகா மற்றும் தமிழக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • பெலகாவிக்கு வரும் மராட்டிய அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்து மராட்டியத்துக்கு கடந்த மாதம் கர்நாடக அரசு பஸ் இயக்கப்பட்டது. அப்போது மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசு பஸ் கண்டக்டர் தாக்கப்பட்டார்.

    இந்த பிரச்சினை இருமாநிலத்திலும் மொழி பிரச்சினையாக மாறி பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    இந்த சம்பவத்தில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு நடத்தப்போவதாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.


    இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    கன்னட அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் வழக்கம் போல் பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் ஓடியது.

    பெங்களூர் மற்றும் முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தது. பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கின. வங்கிகளுக்கு இன்று விடுமுறை என்பதால் வங்கிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கியது. ரெயில், மெட்ரோ ரெயில்கள் வழக்கம் போல் ஓடியது.

    இந்த நிலையில் சிக்கமகளூர் பஸ் நிலையத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன. அப்போது போராட்டக்காரர்கள் பஸ்நிலைய வளாகத்தில் திறந்து இருந்த கடைகளை அடைக்க சொன்னார்கள்.


    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. மேலும் வலுகட்டாயமாக கடைகளை அடைக்கச் சொல்ல கூடாது என்று போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

    இதேபோல் கர்நாடக முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக மைசூர் கிராமப்புற பஸ்நிலையத்தில் இயக்கப்பட்ட பஸ்களை போராட்டக்காரர்கள் மறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் நகரின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    விஜயநகர மாவட்டத்திலும் வழக்கம் போல் பஸ்கள், ஆட்டோக்கள், கார் ஓடியது. பெரும்பாலான ஓட்டல்கள், கடைகள் திறந்து இருந்தன.

    பெலகாவி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பெலகாவியில் இருந்து மராட்டியத்துக்கு செல்லும் கர்நாடக அரசு பஸ்கள் மற்றும் மராட்டியத்தில் இருந்து பெலகாவிக்கு வரும் மராட்டிய அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் பெலகாவி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் பல்வேறு இடங்களில் பெலகாவி மாவட்டத்தில் சாலைகளில் டயர்களை தீவைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில எல்லையில் அமைந்துள்ள பெலகாவி மாவட்டத்தில் மட்டும் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

    • மூதாட்டி கொலையில் புகார் கொடுத்த எழிலரசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
    • போலீசார் எழிலரசனை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மூலக்குளம்-வில்லியனூர் மெயின்ரோட் டைச் சேர்ந்தவர் சாந்தா (வயது 64). இவரது கணவர் சுப்ரமணியன் இறந்து விட்டதால், உறவுக்கார பெண் ஒருவரின் துணையுடன் வசித்து வந்தார்.

    கடந்த 2016 டிசம்பர் 26-ந் தேதி சாந்தாவுடன் தங்கியிருந்த உறவுக்கார பெண் வெளியே சென்ற நிலையில் மறுநாள் காலை சாந்தா அவரது வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகை மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து அதேபகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி எழில் என்ற எழிலரசன் (30) போலீசுக்கு புகார் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே மூதாட்டி கொலையில் புகார் கொடுத்த எழிலரசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சாந்தா அணிந்திருந்த 7 பவுன் நகையை வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் எழிலரசன் நகைக்காக மூதாட்டி சாந்தாவை கொலை செய்து விட்டு போலீசாரிடம் புகார் அளித்து நாடகமாடியது தெரியவந்தது.

    போலீசார் எழிலரசனை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி பாலமுருகன் குற்றம் சாட்டப்பட்ட எழிலரசனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரங்கநாதன் ஆஜரானார்.

    • தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒரு போதும் ஏற்கக்கூடாது.
    • மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்தால் தமது நீதிக்கான குரலும் குறையும்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பல மொழி, இனம் என பன்முகத்தன்மை கொண்ட பல மாநிலங்களில் இருந்து இங்கு ஒன்றுகூடியுள்ளோம்.

    * கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க தலைவர்கள் ஒன்றிணையும் இந்நாள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள்.

    * இந்திய கூட்டாட்சியை காக்கும் மிக மிக முக்கியமான நாளாக வரலாற்றில் இந்த நாள் அமைய போகிறது.

    * இந்திய வரலாற்றில் ஒரு கட்சியின் அழைப்பை ஏற்று இத்தனை கட்சிகள் வந்திருப்பது தனிச்சிறப்பு.

    * ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளதை உங்கள் வருகை இந்தியாவிற்கு உணர்த்துகிறது.

    * மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால் தான் கூட்டாட்சி தன்மை நிலைத்திருக்கும்.

    * தொகுதி மறுசீரமைப்பு நமது மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகிறது என்பதால் கடுமையாக எதிர்க்கிறோம்.

    * தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒரு போதும் ஏற்கக்கூடாது.

    * மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்தால் தமது நீதிக்கான குரலும் குறையும்.

    * மணிப்பூர் மக்களின் குரலை கேட்க மத்திய அரசு தயாராக இல்லை என்றார். 

    • தமிழகத்திற்கு கேரளாவுடன் முல்லை பெரியாறு, பேபி அணை உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளது.
    • தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை.

    சென்னை:

    தமிழக அரசை கண்டித்து தமிழக பா.ஜ.க.வினர் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை பனையூரில் உள்ள தனது இல்லத்தின் முன்பு நின்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கிவைத்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-

    * யாருக்கும் பிரச்சனை ஏற்படுத்தாமல் வீட்டுக்கு வெளியே நின்று பா.ஜ.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    * தமிழகத்தின் உரிமைகளை அண்டை மாநிலங்களுக்கு மு.க.ஸ்டாலின் விட்டுக்கொடுத்துவிட்டார்.

    * தமிழகத்திற்கு கேரளாவுடன் முல்லை பெரியாறு, பேபி அணை உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளது.

    * 4 முறை கேரளாவுக்கு சென்றபோதிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருமுறை கூட மாநில பிரச்சனை குறித்து பேசவில்லை.

    * அணை கட்டியே தீருவேன் என டி.கே.சிவக்குமார் பேசியதற்கு தமிழக முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    * சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமையில்லை என கூறும் மு.க.ஸ்டாலின் தெலுங்கானா முதல்-மந்திரியிடம் கேட்கட்டும்.

    * தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் தலைமையில் நடக்கும் கூட்டம் ஒரு நாடகம்.

    * தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை. ஒரு சீட் கூட மத்திய அரசு குறைக்கப்போவதில்லை என்றார். 

    • இந்த குழு கடந்த 7-ந் தேதி ஆய்வு நடத்துவதாக இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டது.
    • தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக்குழு அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் ஆய்வு இதுவாகும்.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இரு போக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    மேலும் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டத்தை 142 ஆக உயர்த்திக்கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    ஆனால் பேபி அணையை பலப்படுத்த தமிழக அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

    ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான இந்தக்குழுவின் தமிழக நீர் வளத்துறை செயலர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ், நீர் வளத்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் என 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த குழு கடந்த 7-ந் தேதி ஆய்வு நடத்துவதாக இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டது.

    இதனிடையே புதிய கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள கேரள பிரதிநிதிகளை நீக்க வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று லோயர்கேம்பில் இருந்து பேரணியாக சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தங்கள் எதிர்ப்பையும் மீறி புதிய கண்காணிப்பு குழு அணைப்பகுதியில் ஆய்வு நடத்தினால் தமிழக விவசாயிகள் தடையை மீறி முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்குள் சென்று போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

    ஆனால் திட்டமிட்டபடி புதிய கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் இன்று முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்கு வந்தனர். தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக்குழு அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் ஆய்வு இதுவாகும். அணை தொடர்பான பிரச்சனைகளுக்கு 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தபிறகு தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வார்களா? என்பது விவசாயிகள் எதிர்பார்ப்பாக உள்ளது. விவசாயிகள் போராட்டத்தையும் மீறி புதிய கண்காணிப்பு குழு முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வுக்கு வந்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அனைவரும் பேச உள்ளனர்.
    • அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், மத்திய அரசுக்கு வலியுறுத்தல்களை விடுக்கும் வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கியது.

    இக்கூட்டத்தில் கேரளா மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், தெலுங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் சிங் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் சலாம், கேரள காங்கிரஸ் தலைவர் பிரான்சிஸ் ஜார்ஜ், கேரள காங்கிரஸ் (மணி) கட்சி தலைவர் ஜோஸ் கே.மணி, ஆர்.எஸ்.பி. கட்சி தலைவர் பிரேமச்சந்திரன் ஆகிய தலைவர்கள் கேரளாவில் இருந்தும், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் முன்னாள் எம்.பி. உதய் சீனிவாஸ், தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் மகேஷ் கவுத், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சி முன்னாள் எம்.பி. இம்தியாஸ் ஜலீல், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சிரோன்மணி அகாலிதளம் கட்சி தலைவர் தல்ஜித் சிங் சீமா, பொதுச்செயலாளர் பல்விந்தர் சிங் பூந்தர், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங்கும், ஓடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜூ ஜனதாதளம் கட்சி சார்பில் அமர் பட்நாயக், முன்னாள் மந்திரி சஞ்சய் குமார் தாஸ் பர்மா, ஓடிசா மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் ஆகிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.



    கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அனைவரும் பேச உள்ளனர். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், மத்திய அரசுக்கு வலியுறுத்தல்களை விடுக்கும் வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    முன்னதாக, ஆலோசனை கூட்டத்திற்கு வந்துள்ள தலைவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 



    • அங்கிதா மற்றும் அஜய் ஆகியோர் கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
    • கோவில் பூசாரி நாகேந்திர செல்வால் கோவில் கதவுகளை பூட்டியுள்ளார்.

    உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வாலில், கோவில் வளாகத்தில் தலித் தம்பதியினரின் திருமணத்திற்கு அனுமதி மறுத்த பூசாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்..

    மார்ச் 5 ஆம் தேதி அங்கிதா மற்றும் அஜய் ஆகியோர் கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். அப்போது கோவில் பூசாரி நாகேந்திர செல்வால் கோவில் கதவுகளை பூட்டிவிட்டு அவர்களை சாதி ரீதியாக திட்டியுள்ளார். இதனால் அந்த தம்பதியால் அன்று திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.

    கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி மணமகளின் தந்தை மார்ச் 12 அன்று புகார் அளித்ததைத் தொடர்ந்து, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    • கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • மாணவனை கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி(வயது 60). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவர் டவுனில் உள்ள ஒரு பள்ளி வாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார்.

    இவர் கடந்த 18-ந்தேதி அதிகாலை ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அருகே உள்ள ஜாமியா தைக்கா பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.

    இதுகுறித்து டவுன் போலீசார் நடத்திய விசாரணையில் அவருக்கும், தொட்டிப்பாலம் தெருவில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் இடையே இருந்து வந்த இடப்பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்த நிலையில், 2 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று கோர்ட்டில் மீண்டும் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை தனிப்படையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த நிலையில் அவருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கார்த்திக், அக்பர் ஷாவிடம் நடத்திய விசாரணையில், அவர்களது உறவினரான 16 வயது சிறுவன் ஒருவன் இந்த கொலை சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று மாலையில் சிறுவனை பிடித்து விசாரித்தனர். பிளஸ்-1 படிக்கும் அந்த சிறுவன், சம்பவத்தன்று ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு புறப்பட்டதை கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தது தெரியவந்தது.

    இதையடுத்து மாணவனையும் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள நூர்நிஷாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கடந்த 5-ந்தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது.
    • பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

    இந்த பேராலயத்தில் கடந்த 5-ந்தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது. தவகாலத்தை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி 3-வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது.

    பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை பக்தர்கள் சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக்கொண்டு சென்றனர். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கலந்து கொண்டனர்.

    • நாள்தோறும் நடைபெறும் குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.
    • குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்து கொலைகள் நடைபெறுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    நாள்தோறும் நடைபெறும் குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

    குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு சட்டம் ஒழுங்கை கடுமையாக்கி, காவல் துறையினரின் பணியை முறைப்படுத்தி, போதைப்பொருட்களை ஒழித்து, மாணவர்கள், இளம் சமுதாயத்தினர், மகளிர், முதியோர் என அனைவருக்குமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
    • பார் வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 14-ந்தேதி வரை கிடுகிடுவென உயர்ந்து, பின்னர் குறைந்து இருந்தது. அதன் பின்னர், மீண்டும் 18-ந் தேதியில் இருந்து விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் விலை உயர்வால், இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தங்கம் விலை எட்டியது. இந்த நிலையில் நேற்று குறைந்திருந்தது.

    நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 270-க்கும், ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்து 160-க்கும், விற்பனை ஆனது.

    இந்நிலையில் வார இறுதிநாளான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,230-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.65,840-க்கும் விற்பனையானது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    21-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,160

    20-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,480

    19-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,320

    18-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,000

    17-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,680

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    21-03-2025- ஒரு கிராம் ரூ.112

    20-03-2025- ஒரு கிராம் ரூ.114

    19-03-2025- ஒரு கிராம் ரூ.114

    18-03-2025- ஒரு கிராம் ரூ.113

    17-03-2025- ஒரு கிராம் ரூ.113

    ×