என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • இந்திய அணி வெற்றி பெற இன்னும் 522 ரன்கள் அடிக்க வேண்டும்.
    • மறுபுறம் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார்.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனையடுத்து இந்தியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தது. தென் ஆப்பிரிக்கா அணி மொத்தம் 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

    இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 94 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 549 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 27 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. சுதர்சன் 2 ரன்களுடனும், குல்தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்திய அணி வெற்றி பெற இன்னும் 522 ரன்கள் அடிக்க வேண்டும். மறுபுறம் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய சூழலில் இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் தாமதமாக டிக்ளேர் செய்தது எதனால் என தென் ஆபிரிக்க அணி பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் காரணத்தை கூறியுள்ளார்.

    அவர் கூறியதாவது, இந்திய வீரர்கள் மைதானத்தில் அதிக நேரம் ஃபீல்டிங் செய்து விரக்தியில் தவிக்க வேண்டும் என்று நினைத்தோம்.

    அவர்களை வெற்றி வாய்ப்பிலிருந்து முற்றிலும் வெளியேற்றும் வரை நாங்கள் பேட்டிங் செய்து, 'மீதமிருக்கும் நேரத்தில் முடிந்தால் பேட்டிங் செய்து தப்பித்துக்கொள்ளுங்கள்' என்ற நிலைக்கு அவர்களைத் தள்ளுவதே எங்கள் திட்டம்.

    அதனால்தான் தாமதமாக டிக்ளேர் செய்தோம். இருந்தாலும், போராட்டமே இல்லாமல் அவர்கள் எளிதாகச் சரிந்துவிடுவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. நாளை காலையும் நாங்கள் மிகச் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.  

    • டி20 உலக கோப்பையில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
    • இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களில் போட்டி நடைபெறுகிறது.

    10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.

    இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும். அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    40 லீக் ஆட்டம், 'சூப்பர் 8' சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது. இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும் இலங்கையில் கொழும்பு கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பைக்கான போட்டி அட்டவணை மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டது. தரவரிசை அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பில் மோதுகின்றன.

    இரு அணிகளும் சமீபத்தில் ஆசிய கோப்பை போட்டியில் மோதின. துபாயில் 3 முறை மோதிய ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றது. இந்த தொடரின் போது பகல்காம் சம்பவம் எதிரொலித்தது. இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்தது. பாகிஸ்தான் மந்திரியிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க மறுத்தது போன்றவற்றால் சர்ச்சை வெடித்தது.

    அமெரிக்காவில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையிலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 7-ந்தேதி மும்பையில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியிலும், கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி அகமதாபாத்திலும் மோதுகிறது.

    இலங்கை, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் மற்றொரு பிரிவிலும், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்க தேசம், நேபாளம், இத்தாலி இன்னொரு பிரிவிலும் இடம் பெறுகின்றன. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா ஆகிய அணிகள் இன்னொரு பிரிவிலும் இடம்பெறுகின்றன.

    இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றால் அகமதாபாத், சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறும். அரை இறுதிக்கு முன்னேறினால் மும்பையில் நடைபெறும். மற்றொரு அரை இறுதி கொழும்பு அல்லது கொல்கத்தாவில் நடைபெறும்.

    இலங்கை, பாகிஸ்தான் அணிகளின் தகுதியை பொறுத்து இடங்கள் முடிவாகும். இறுதி போட்டி அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது. ஒரு வேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்பில் போட்டி நடைபெறும்.

    • கோவையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
    • இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

    கோவை:

    கோவையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த 4 ஆண்டுகளில் கடுமையான உழைப்பை செலுத்தி ஏராளமான தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம்.

    புதிதாக முதலீடு செய்பவர்களை வரவேற்கிறேன். மீண்டும் முதலீடு செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

    தமிழ்நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இங்கு வந்துள்ள தொழிலதிபர்கள் துணை நிற்க வேண்டும்.

    தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவு எப்போதும் இருக்கும்.

    தொழில் வளர்ச்சியில் உலக நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பது திமுக அரசின் லட்சியம்.

    மற்ற மாநிலங்களை விட 25 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து திட்டமிட்டு தொழில்துறை வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறோம் என

    தெரிவித்தார்.

    • சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் பராசக்தி படம் உருவாகி உள்ளது.
    • படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் 'பராசக்தி'. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.

    இதனிடையே, சமீபத்தில் வெளியான 'பராசக்தி' படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான 'அடி அலையே' ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து 'பராசக்தி' படத்தின் 2-வது பாடலான 'ரத்னமாலா' தற்போது வெளியாகியுள்ளது.

    • எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது.
    • எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை தேர்தல் ஆணையம் திணித்துள்ளது என மம்தா பானர்ஜி சாடினார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகளை நிறுத்த வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அடிப்படை தயார் நிலை, போதுமான திட்டமிடல், தெளிவான தகவல் தொடர்பு இல்லாமல், அதிகாரிகள் மீதும் பொதுமக்கள் மீதும் எஸ்ஐஆர் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் திணித்துள்ளது எனவு அவர் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்நிலையில், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தாவில் இன்று பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

    அப்போது மம்தா பானர்ஜி பேசுகையில், அவர்கள் என்னை காயப்படுத்தினால், என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காண்பிப்பேன்.

    நீ உண்மையான வாக்காளர் என்றால் பயப்படாதே. இப்போது நீ வங்காளதேசத்தைச் சேர்ந்தவன் என்றும், நீ இந்தியனாக இருக்க விரும்புகிறாய் என்றும் எழுத வைப்பார்கள்.

    பிறகு என்ன நடக்கும்? பயப்படாதே. நான் இங்கே இருக்கும்போது, உன்னை ஒதுக்கி வைக்க அனுமதிக்க மாட்டேன்.

    இந்த நிலம் இந்த பா.ஜ.க.வுக்கு பயப்படவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் இங்கே இருக்கும் வரை, அவர்கள் உன்னைத் தொட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    தேர்தல் ஆணையத்தின் வேலை பாரபட்சமற்றதாக இருப்பதுதான், பாஜகவின் ஆணையமாக இருப்பது அல்ல.

    டெல்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கு வங்கத்துக்கு துணிச்சல் உண்டு. 2029ல் மத்தியில் இருந்து பா.ஜ.க. தூக்கி எறியப்படும்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து நாடு தழுவிய யாத்திரை நடத்தப்படும் என தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி வாயிலாக 82 மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர்.
    • தங்களது பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் பற்றி மாவட்ட செயலாளர்கள் விளக்கி கூறினார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தயாராகி வருகிறார்.

    தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளில் அ.தி.மு.க.வினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார்.

    இந்த நிலையில் அந்த பணிகளில் எப்படி கவனமாக செயல்பட வேண்டும் என்பது பற்றிய அறிவுரைகளை வழங்குவதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட செயலாளர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி வாயிலாக 82 மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர்.

    இந்தக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வினர் அனைவரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் முறைகேடாக பதிவாகி உள்ள ஓட்டுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் மாவட்டச் செயலாளர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்தக் கூட்டத்தில் தங்களது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்த படியே மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தங்களது பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் பற்றியும் அவர்கள் விளக்கி கூறினார்கள்.

    • ஸ்டப்ஸ் 94 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 260 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    கவுகாத்தி:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.

    தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்கா பாலோ ஆன் கொடுக்கவில்லை.

    ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 58 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினார்கள். மார்கோ யான்சென் 6 விக்கெட்டும், ஹார்மர் 3 விக்கெட்டும், கேசவ் மகராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    288 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளையாடியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன் எடுத்து இருந்தது. ரிக்கெல்டன் 13 ரன்னுடனும், மர்க்கிராம் 12 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. 314 ரன்கள் முன்னிலை, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து ஆடியது.

    ரிக்கெல்டன் 35 ரன்னிலும், மர்க்கிராம் 29 ரன்னிலும் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பவுமா 3 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் வெளியேறினார். 77 ரன்னில் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டை இழந்தது.

    4-வது விக்கெட்டான ஸ்டப்ஸ்-சோர்சி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் சோர்சி 49 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஸ்டப்ஸ் உடன் முல்டர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ஸ்டப்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார்.

    தொடர்ந்து விளையாடிய ஸ்டப்ஸ் 94 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். உடனே கேப்டன் பவுமா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சில் 260 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 548 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் இந்திய அணி 549 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த இலக்கை எட்டி வரலாறு படைக்குமா அல்லது தொடரை இழக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
    • ‘அரசன்’ படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.

    நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது.

    இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகுகிறது.

    சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், 'அரசன்' படம் தொடர்பாக வெளியான புரோமோ வீடியோ வரவேற்பை பெற்றது. மேலும் 'அரசன்' படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.

    இந்த நிலையில், 'அரசன்' படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

    • அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடருவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    • இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோபி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைவது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிப்பதாக கூறி செங்கோட்டையன் தெரிவித்தார். இதனால் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    இதனிடையே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடி.வி. தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இது குறித்து செங்கோட்டையன் தெரிவிக்கையில், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுதொடர்பாக செங்கோட்டையன் கோர்ட்டில் வழக்கு தொடருவதாக தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் கட்சியில் இணைய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் நேற்று தகவல் பரவியது. அதாவது வருகிற 27-ந்தேதி நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இது உண்மையா? அல்லது வதந்தியா? என தெரியவில்லை. எனினும் இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வழக்குகளை அவசரமாக பட்டியலிட குறிப்பிடுவதை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
    • அசாதாரண சூழ்நிலைகளில் வாய்மொழி கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும்- தலைமை நீதிபதி.

    இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நேற்று பதவியேற்றார். சூர்யா காந்த் அடுத்த 15 மாதங்கள் தலைமை நீதிபதி பதவியில் இருப்பார். அவர் பிப்ரவரி 9, 2027 அன்று 65 வயதை எட்டும்போது பணியில் இருந்து ஓய்வு பெறுவார்.

    பதவி ஏற்ற முதல் நாளிலேயே 17 வழக்குகளை விசாரித்துள்ளார். அத்துடன், வழக்குகளை வாய் மொழியாக தெரிவிக்கக்கூடாது. வழக்குகளை அவசரமாக பட்டியலிட குறிப்பிடுவதை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். மரண தண்டனை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் வாய்மொழி கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

    நேற்று ஜனாதிபதி மாளிகையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டு, முறையாக தலைமை நீதிபதியாக பொறுப்பெற்றுக் கொண்டார். அதன்பின் மதியம் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். இரண்டு மணி நேரத்தில் 17 வழக்குகளை விசாரித்தார்.

    மதியம் உச்சநீதிமன்றம் வருகை தந்த தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் அம்பேத்கர் சிலைகளுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் பாரம்பரிய நீதிமன்ற அறை எண் ஒன்றில் நீதிபதிகள் ஜோய்மல்யா பாக்சி மற்றும் அதுல் எஸ் சந்துர்கர் ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கு தலைமை தாங்கினார்.

    • உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக தகவல்.
    • சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் வலுவானது.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் டெலிபோனில் பேசியதாக தெரிவித்துள்ளார். அப்போது ஜி ஜின்பிங் சீனாவுக்கு வர அழைப்பு விடுத்ததை ஏற்றுக் கொண்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு செல்ல இருப்பதாகவும், தனது அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வருடம் இறுதியில் அமெரிக்க வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் வலுவானது என சமூக வலைத்தளத்தில் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இருவரும் உக்ரைன், அமெரிக்க சோயாபீன்ஸ் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

    வரி விதிப்பு காரணமாக அமெரிக்கா- சீனா இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில், தென்கொரியாவில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். அப்போது இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடிவு செய்தனர்.

    தைவான் குறித்து ஜப்பான் கருத்து தெரிவித்ததால் சீனா- ஜப்பான் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தைவான் குறித்து டொனால்டு டிரம்ப் குறிப்பிடவில்லை.

    சுயாட்சி பெற்ற தைவான் சீன ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தைவான் குறித்து யாரும் கருத்து தெரிவித்தால் அதற்கு கடும் கண்டனமும் தெரிவித்து வருகிறது.

    தைவானுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுத்தால், அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான ஜப்பானின் ராணுவம் இதில் ஈடுபடக்கூடும் என ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி குறிப்பிட்டிருந்தார்.

    • இந்த கௌரவத்தைப் பெற்ற ஒரே இந்திய வம்சாவளி பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
    • ரகசிய தகவல் தொடர்பு வலையமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் நாஜிகளால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

    திப்பு சுல்தானின் வழித்தோன்றலும், இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்களுக்கு எதிரான ரகசிய உளவாளியாக இருந்த நூர் இனாயத் கான்-ஐ பிரான்ஸ் அரசு கௌரவித்துள்ளது.

    பிரான்ஸ் அரசு தபால் சேவையான லா போஸ்ட், நூர் உருவம் கொண்ட சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த கௌரவத்தைப் பெற்ற ஒரே இந்திய வம்சாவளி பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், நாஜி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்காற்றிய 12 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை நினைவுகூரும் வகையில் தொடர்ச்சியான தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தற்போது நூர் இடம்பெற்றுள்ளார்.

    நூர், பிரான்சில் பிரிட்டிஷ் ராணுவ சிறப்பு நடவடிக்கை பிரிவின் ரகசிய உளவாளியாக பணியாற்றினார். ரகசிய தகவல் தொடர்பு வலையமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் அவர் நாஜிகளால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

    நூரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய 'ஸ்பை பிரின்சஸ்: தி லைஃப் ஆஃப் நூர் இனாயத் கானின்' ஆசிரியர் ஷ்ரபானி பாசு பேசுகையில், பிரான்ஸ் அரசாங்கம் நூர் இனாயத் கானின் தபால் தலையை வெளியிட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

    ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடி தனது உயிரைத் தியாகம் செய்த ஒரு பெண்ணின் முகம் பிரான்சில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் தபால் தலையில் தோன்றுவது அற்புதம்" என்று கூறினார்.   

    ×