search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாமிரபரணி புஷ்கரம்: தாராளமாக தானம் செய்யுங்கள்
    X

    தாமிரபரணி புஷ்கரம்: தாராளமாக தானம் செய்யுங்கள்

    தாமிரபரணி புஷ்கரம் நடக்கும் 12 நாட்களும் புனித நீராடல் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தானங்கள் செய்வதும் முக்கியமானதாகும்.
    தாமிரபரணி புஷ்கரம் நடக்கும் 12 நாட்களும் புனித நீராடல் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தானங்கள் செய்வதும் முக்கியமானதாகும். இந்த 12 நாட்களும் இயன்ற அளவு தானம் செய்வது மிகவும் நல்லது. இயலாதவர்கள் இந்த 12 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் தங்களால் முடிந்த தானத்தை செய்யலாம்.

    யாருக்கு தானம் வேண்டும்? எங்கு தானம் செய்ய வேண்டும்? என்ன தானம் செய்ய வேண்டும்? எப்போது தானம் செய்ய வேண்டும்? எத்தனைப் பேருக்கு தானம் செய்ய வேண்டும்? என்பன போன்ற கேள்விகள் பெரும்பாலானவர்களுக்கு மனதில் எழக் கூடும்.

    கவலையே வேண்டாம்... ... உங்கள் சக்திக்கேற்ப, நீங்கள் என்ன பொருட்களை தானம் கொடுக்க முடியுமோ, அதை கொடுங்கள் போதும். உங்களால் 100 பேருக்கு அன்னதானம் செய்ய முடியுமா? செய்யுங்கள். நீங்கள் ஒரு முறை செய்யும் தானம், பல மடங்கு பெருகுவதாக ஐதீகம்.

    தாமிரபரணி புஷ்கரம் விழாவில் கலந்து கொள்ள தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் பயன்பெறும் வகையில் உங்கள் தானம் இருக்கலாம்.

    செருப்பு, குடை போன்றவை கொடுக்கலாம். ஆடைகள் வாங்கிக் கொடுக்கலாம். பழம், பிஸ்கட், தண்ணீர் வாங்கிக் கொடுக்கலாம். புஷ்கரம் நாட்களில் பெரும்பாலானவர்கள் தாமிரபரணி கரையோரங்களில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உள்ளனர். தானம் கொடுப்பவர்கள், அதற்குரிய பொருட்களை வாங்கி தானமாக கொடுக்கலாம். பித்ருக்களின் ஆசி உங்களுக்கு நிரம்பக் கிடைக்கும்.

    12-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் என்னென்ன தானம் செய்யலாம் என்று பொதுவாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

    அதன் விபரம் வருமாறு:-12.10.18 (முதல் நாள்) தங்கம், வெள்ளி, தானியங்கள், பூமி ஆகியவற்றை தானமாக வழங்கலாம். 13.10.18 (2-ம் நாள்) வஸ்திரம் (துணி), உப்பு, மாடு, ரத்தினம். 14.10.18 (3-ம் நாள்) வெல்லம், காய்கறிகள், குதிரை, பழங்கள், வண்டி. 15.10.18 (4-ம் நாள்) நெய், எண்ணெய், தேன், பால். 16.10.18 (5-ம் நாள்) எருமை, காளை. 17.10.18 (6-ம் நாள்) கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், வாசனை திரவியங்கள். 18.10.18 (7-ம் நாள்) வீடு, மனை, நாற்காலி, கிழங்கு, இஞ்சி. 19.10.18 (8-ம் நாள்) சந்தனக்கட்டை, பூக்கள். 20.10.18 (9-ம் நாள்) மஞ்சள். 21.10.18 (10-ம் நாள்) புத்தக தானம். 22.10.18 (11-ம் நாள்) யானை, குதிரை. 23.10.18 (12-ம் நாள்) எள், ஷோடசதானங்கள் ஆகியவற்றை வழங்கலாம்.

    புண்ணிய தீர்த்தத்தில் நீராடி திதி கொடுத்து முடித்த பிறகு ஏழைகளுக்கு உணவு படைத்து உபசாரம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
    பரம ஏழைகளுக்கு அளிக்கும் தானம் அசுவமேத யாகத்திற்குச் சமமான பலனைத் தரும். நாம் செய்யும் தானமே நமக்கு பரம நண்பனாம். இந்த உலகத்தில் அன்னத்தை விட அதிகமான மகிமை பொருந்திய பொருள் வேறு எதுவுமே கிடையாது.

    சகல லோகமும் அன்னத்தின் மேல் தான் நிலை நிற்கின்றன. அதனால் தான் உயிர் வாழ்கின்றன. அதன் மகிமைக்கு அளவே கிடையாது. அன்னத்தை விட சிறந்ததொரு தானமும் உலகத்தில் கிடையவே கிடையாது. அன்னதானம் செய்பவன் ஞானியாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும், பக்தியுடையவனாக இருந்தாலும், பகவானைப் பற்றி நினைக்காதவனாகவே இருந்தாலும் அவன் சகல பாவங்களிலிருந்தும் விமோசனம் பெறுகின்றான். ஏழைகளுக்கு சேலை, வேஷ்டி, துண்டு, ஆயத்த ஆடைகள் என ஆடைகளைத்தானம் செய்வது உயர்ந்த பலனைத்தரும்.

    விளக்குதானம் செய்யலாம். இது பிரம் மஹத்தி தோஷம் முதலான தோஷங்களைப்போக்கும். குற்றங்குறைகள் இல்லாத நல்ல பசுவைத் தானம் செய்வது பரம புண்ணியத்தைத்தரும். வெண்ணிறம், பொன்னிறம், வெளுப்பும், மஞ்சளும் கலந்த நிறம் உள்ள பசுக்களைத் தானம் செய்ய வேண் டும். கறுப்பு நிற பசுக்களை தானம் செய்யக் கூடாது. கொம்பு வளைந்த பசுக்களையும் தானம் செய்யக் கூடாது.
    Next Story
    ×