தொழில்நுட்பம்
கோப்பு படம்

சாம்சங் உடனான போட்டியை நீதிமன்றத்தில் முடித்துக் கொண்ட ஆப்பிள்

Published On 2018-06-28 09:21 GMT   |   Update On 2018-06-28 09:21 GMT
சாம்சங் நிறுவனத்துடனான ஏழு வருட போட்டியை ஆப்பிள் நிறுவனம் நீதிமன்றத்தில் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இரு நிறுவனங்களும் வெளியிட்டிருக்கின்றன.




ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களிடையே நிலவி வந்த காப்புரிமை விவகாரத்தை இரு நிறுவனங்களும் தாங்களாகவே முடித்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.

2011-ம் ஆண்டு துவங்கிய காப்புரிமை விவகாரத்தின் இறுதி தீர்ப்பு கடந்த மாதம் வெளியானது. அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகானத்தின் சான் ஜோஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.3600 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இறுதி தீர்ப்பை எதிர்த்து சாம்சங் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், "ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் காப்புரிமை விவகாரத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளன. மேலும் இவ்வழக்கு தொடர்பான மற்ற விவகாரங்களை அவர்களாகவே தீர்த்து கொள்வதாக தெரிவித்துள்ளன".


கோப்பு படம்

இதுகுறித்து சினெட் வெளியிட்டிருக்கும் தகவல்களில் வழக்கை தள்ளுபடி செய்து, மீண்டும் இந்த விவகாரம் குறித்த மேல்முறையீடுகளை செய்ய முடியாத வகையில் ஆவணங்களில் நீதபதி லுசி கோ கையெழுத்திட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

"ஐபோன் மூலம் ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன் புரட்சியை துவங்கியது, சாம்சங் எங்களது வடிவமைப்பை அப்பட்டமாக காப்பியடித்தது. மக்களுக்கான புதிய சாதனங்களை கண்டறிய தொடர்ந்து கடினமாக உழைத்து, அவற்றை பாதுகாப்போம்," என ஆப்பிள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நீதிபதிகள் வழங்கிய சேவைக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம், மேலும் சாம்சங் எங்களது வடிவமைப்பை காப்பியடித்ததை ஒப்பு கொண்டமைக்கு பெருமை கொள்கிறோம்," என ஆப்பிள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாம்சங் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
Tags:    

Similar News