தொழில்நுட்பம்
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் எஸ்இ 2 இந்தியாவில் பிரத்யேகமாக உருவாக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக இந்தியாவில் உருவாக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போன் முற்றிலும் இந்தியாவில் உருவாக்கப்படும் என்றும் இதன் வெளியீடு அரசு உரிமம் மற்றும் இதர காரணங்களுக்காக தாமதமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை ஐபோன் எஸ்இ2 மாடலில் 4.0 இன்ச் ஸ்கிரீன், மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் A10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இத்துடன் கிளாஸ் பேனல், வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவையும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில் புதிய ஐபோன் எஸ்இ மாடலின் அளவுகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என்றும், ஃபேஸ் ஐடி வழங்கப்படாமல், டச் ஐடி மற்றும் ஒற்றை பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக சீன சமூக வலைத்தளமான வெய்போவில் ஐபோன் எஸ்இ 2 வீடியோ வடிவில் வெளியாகி இருந்தது. இதில் ஐபோன் X போன்றே புதிய ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போனும் நாட்ச் வகை டிஸ்ப்ளே கொண்டிருந்தது. ஐஓஎஸ் போன்ற யூசர் இன்டர்ஃபேஸ், டூயல் பிரைமரி கேமரா செட்டப், எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான தகவல்களின் படி ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 இந்தியாவில் உருவாக்கப்படும் என்றும், இதனை விஸ்ட்ரன் எனும் நிறுவனம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. இதே நிறுவனம் ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன்களையும் உருவாக்கி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.