உலகம்

இந்திய முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்புக்கு இஸ்ரேலே காரணம்- மோடிக்கு பாலஸ்தீன பிரதமர் கடிதம்

Published On 2024-05-24 07:47 GMT   |   Update On 2024-05-24 07:47 GMT
  • நீதி மற்றும் அமைதிக்கான எங்கள் தற்போதைய போராட்டத்தில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடிக்கு பாலஸ்தீனத்தின் பிரதமர் முகமது முஸ்தபா, கடிதம் எழுதியுள்ளார்.

காசா:

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே கடந்த 13-ந்தேதி காசாவின் ரபா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.நா.வில் பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வைபவ் அனில் காலே உயிரிழந்தார். ஐநாவின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்த அவர் சென்ற கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாலஸ்தீனத்தின் பிரதமர் முகமது முஸ்தபா, கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்திய முன்னாள் ராணுவ அதிகாரி உயிரிழந்ததற்கு இஸ்ரேலே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஐநா பணியாளராக பணியாற்றி வந்த இந்திய ராணுவ அதிகாரி வைபவ் அனில் காலே இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இது துரதிஷ்டவசமானது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இந்த அதிகாரியின் இறப்புக்கு இஸ்ரேலின் தாக்குதல் தான் காரணம்.


முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி மீதான தாக்குதல், காசாவில் உள்ள மக்களுக்கு எதிராக இஸ்ரேலியப் படைகளால் நிகழ்த்தப்பட்ட பரந்த இனப்படு கொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களின் ஒரு பகுதியாகும்.

பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை நிலைநிறுத்துவதற்கான உங்கள் அர்ப்பணிப்பு, பிராந்தியத்தில் நீதி மற்றும் அமைதிக்கான எங்கள் தற்போதைய போராட்டத்தில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News