செய்திகள்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனாவால் இளம் வயதினர் அதிகம் பாதிப்பு

Published On 2021-10-09 08:47 GMT   |   Update On 2021-10-09 11:59 GMT
சர்வதேச நிலவரப்படி கொரோனா பாதிப்பு 23.40 கோடியாகவும், இறப்பு 48 லட்சமாகவும் உள்ளது. மதிப்பீட்டு வாரத்தில் பாதிப்பு 9 சதவீதம் குறைந்துள்ளது.
ஜெனீவா:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 முதல் -19 வயதினர் மற்றும் பெண்களிடம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 27 முதல்- அக்டோபர் 3 வரையிலான வாரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விபரத்தை, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கிய, 9,500 பேரிடம் நடத்திய சோதனையில், 1-19 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக ’டெல்டா’ வைரசால், இளம் வயதினரும், பெண்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.



அதேபோல இறப்பு விகிதம், தடுப்பூசி செலுத்திய பின்னும் பாதிப்பிற்கு ஆளாவது போன்றவற்றிலும், சாதாரண வைரசை விட, டெல்டா வைரசில் தாக்கம் அதிகமாக உள்ளது. மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21 சதவீதம் குறைந்து, 1 லட்சத்து 61 ஆயிரத்து 158 ஆக சரிவடைந்துள்ளது. உயிரிழப்பு 9 சதவீதம் குறைந்துள்ளது. ஆகஸ்டு முதல் உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. மதிப்பீட்டு வாரத்தில் புதிதாக 31 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

சர்வதேச நிலவரப்படி கொரோனா பாதிப்பு 23.40 கோடியாகவும், இறப்பு 48 லட்சமாகவும் உள்ளது. மதிப்பீட்டு வாரத்தில் பாதிப்பு 9 சதவீதம் குறைந்துள்ளது. ஐரோப்பிய பிராந்தியம் தவிர இதர பகுதிகளில் பாதிப்பு சரிவடைந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News