செய்திகள்
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபருக்கு கொரோனா தொற்று

Published On 2020-11-09 16:57 GMT   |   Update On 2020-11-09 16:59 GMT
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிவ்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 216 நாடுகள்/பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு பொதுமக்கள் முதல் உலகநாடுகளின் தலைவர்கள் வரை அனைவரும் இலக்காகி வருகின்றனர். 

குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் ஜான்சன், பிரேசில் அதிபர் போல்சனேரோ, போலாந்து அதிபர் அண்ட்ரிஜ் டூடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட போதும் உரிய சிகிச்சைக்கு பின்னர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், வைரஸ் பரவிய உலக நாடுகளின் தலைவர்கள் பட்டியலில் தற்போது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும் இணைந்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அறிகுறிகள் எதுவும் இல்லாததால் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும், மருத்துவர்களின் அறிவுரைகளை
பின்பற்றி வைரஸ் பாதிப்பில் இருந்து கூடிய விரைவில் குணமடைந்து விடுவேன் என்று அதிபர் ஜெலன்ஸ்கி தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனாலும், தனது அதிபர் பணிகளை
தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் அதிபராக வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்காவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து அவர் உரிய சிகிச்சை மேற்கொண்டு தற்போது பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News