செய்திகள்
சீனாவை கட்டுப்படுத்தவே ஏவுகணை சோதனை - அமெரிக்கா
சீனாவின் மோசமான நடத்தையை கட்டுப்படுத்துவதற்காகத்தான் ஏவுகணை சோதனைகளை அமெரிக்கா செய்து வருவதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயளாலர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக 1987-ம் ஆண்டு ரஷியாவுடன் போடப்பட்டிருந்த நடுத்தர தொலைவு அணு ஆயுதங்கள் உடன்படிக்கை (ஐ.என்.எப்.) என்று அழைக்கப்படும் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது.
இதையடுத்து கடந்த 18-ம் தேதி கலிபோர்னியா மாகாணத்தின் சான் நிக்கோலஸ் தீவில் உள்ள கடற்படை தளத்தில் இருந்து நடுத்தர தொலைவு ரக ஏவுகணை சோதனையை அமெரிக்கா நடத்தியது.
அமெரிக்காவின் இந்த ஏவுகணை சோதனை மிகவும் வருத்தத்திற்கு உரியது என ரஷியா தெரிவித்தது. இச்செயல் பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவித்து ராணுவ பதற்றத்தை அதிகரிக்கும். நாடுகளிடையே ஆயுத குவிப்பு போட்டியை உருவாக்கும் எனவும் தெரிவித்தது.
இந்நிலையில், ஏவுகணை சோதனை தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க் எஸ்பர், சீனா தொடர்ச்சியாக மோசமான நடத்தையை மேற்கொண்டு வருகிறது. அந்நாடு அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
ஆகையால் அவர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையிலும், சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தேவையான அனைத்து திறமைகளும் அமெரிக்காவிடம் உள்ளது என்பதை உணர்த்தவே இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது என தெரிவித்தார்.