செய்திகள்
கோப்புப் படம்

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் பலி

Published On 2019-07-18 14:40 GMT   |   Update On 2019-07-18 14:40 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவ வீரர்கள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தற்கொலைபடை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் அந்நாட்டு அரசுப்படை மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வெளி, தரைவழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இன்று பாதுகாப்பு படையினர் ஆப்கானிஸ்தானின் ஹோர் மாகாணத்திலிருந்து அப் ஹமாரி பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த தலிபான் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 35 பாதுகாப்பு படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேரை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளால் பிணைக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News