இந்தியா

கேரளாவில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு

Published On 2024-05-05 04:24 GMT   |   Update On 2024-05-05 04:24 GMT
  • வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.
  • எம்.எல்.ஏ.க்கள், மேல்சபை எம்.பி.க்கள் பலர் களம் இறங்கி உள்ளனர்.

திருவனந்தபுரம்:

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பல தொகுதிகளில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்கள், மேல்சபை எம்.பி.க்கள் உள்பட பலர் களம் இறங்கி உள்ளனர். இவர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் எந்த பதவியை ராஜினாமா செய்கிறார்களோ அதற்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.

கேரள மாநிலத்தில் கடந்த 26-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் அங்கு 5 இடைத்தேர்தல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் மட்டுமின்றி உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

கடந்த முறை வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற அவர், இந்த முறையும் அங்கு வெற்றியை பெறுவார் என தெரிகிறது. ஆனால் காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலியில் அவர் வெற்றி பெற்றால், வயநாடு தொகுதியில் பெற்ற வெற்றியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. இதனால் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.

இதேபோல், கேரள மாநிலத்தில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் ராதாகிருஷ்ணன், முகேஷ், ஷபி பரம்பில், கே.கே.சைலஜா மற்றும் வி.ஜாய் ஆகியோரும் பாராளுமன்ற தேர்தல் களத்தில் உள்ளனர். வடகரை தொகுதியில் பாலக்காடு எம்.எல்.ஏ. ஷபி, மட்டனூர் எம்.எல்.ஏ. சைலஜா போட்டியிடுகின்றனர்.

கொல்லம் தொகுதியில் கொல்லம் எம்.எல்.ஏ. முகேஷ், அட்டிங்கல் தொகுதியில் வர்கலா எம்.எல்.ஏ. ஜாய், ஆலத்தூர் தொகுதியில் ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் வெற்றி பெற்றால் அவர்களது எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்யும் போது அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.

Tags:    

Similar News