இந்தியா

109 ஆண்டுகள் முன் இந்திய தொழிலதிபரிடம் கடன் வாங்கிய பிரிட்டிஷ் அரசு - திரும்பக் கேட்கும் வாரிசுகள்

Published On 2026-02-26 12:53 IST   |   Update On 2026-02-26 12:53:00 IST
  • இந்தக் கடனின் இன்றைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய்களை தொடும்.
  • சீஹோர் மற்றும் போபால் சமஸ்தானங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பமாக ருதியா குடும்பம் விளங்கியது.

1917இல் முதலாம் உலகப் போர் சமயத்தில், மத்தியப் பிரதேசத்தின் சீஹோர் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சேத் ஜம்மாலால் ருதியா என்பவரிடம் பிரிட்டிஷ் அரசு 35,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளது.

பிரிட்டிஷ் அரசுக்கு கடன் கொடுத்த விஷயம் ருதியா குடும்பத்தினருக்குத் தெரிந்திருந்தாலும், அதற்கான ஆவணங்கள் யாரிடமும் இல்லை. இதனால் 109 ஆண்டுகளாக இந்த விஷயம் கிடைப்பில் இருந்துள்ளது.

ஜம்மாலால் ருதியாவின் பேரன் விவேக் ருதியா, தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு பழைய ஆவணங்களையும் உயிலையும் ஆய்வு செய்தபோது, இந்தக் கடனுக்கான அசல் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் கிடைத்துள்ளன.

முதலாம் உலகப் போரினால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, போபால் சமஸ்தானத்தின் நிர்வாகத் தேவைகளுக்காக இந்த 'போர்க் கடன்' வாங்கப்பட்டதாக அந்தப் பத்திரங்கள் தெரிவிக்கின்றன.

1917-ல் 35,000 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகையாகும். அன்றைய தங்கத்தின் விலையோடு ஒப்பிடும்போது, இந்தக் கடனின் இன்றைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய்களை தொடும்.

ஒரு இறையாண்மை கொண்ட நாடு, தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியது சர்வதேச சட்டப்படி கட்டாயம் என்ற அடிப்படையில், கடனை திருப்பி கேட்டு பிரிட்டன் அரசுக்கு சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்ப ருதியா குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர்.

ஒரு காலத்தில் சீஹோர் மற்றும் போபால் சமஸ்தானங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பமாக ருதியா குடும்பம் விளங்கியது.

இன்றும் சீஹோர் நகரின் 20 முதல் 30 சதவீத குடியிருப்புகள் இந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான நிலங்களில்தான் அமைந்துள்ளன.

தற்போது இவர்கள் விவசாயம், ரியல் எஸ்டேட் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News