செய்திகள்
இலங்கை சுப்ரீம் கோர்ட்

மரண தண்டனை தொடர்பான இலங்கை அதிபரின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Published On 2019-07-05 11:45 GMT   |   Update On 2019-07-05 11:45 GMT
இலங்கையில் போதைப்பொருள் வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 குற்றவாளிகளை தூக்கிலிட்டு கொல்வதற்கு ஒப்புதல் அளித்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று தடை விதித்தது.
கொழும்பு:

இலங்கையில் கொடும்குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் கடந்த 43 ஆண்டுகளாக இதுவரை யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை.

கருணை மனுக்களின் அடிப்படையில் பலரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து முன்னாள் அதிபர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இலங்கையில் ஜூன் 23 முதல் ஜூலை முதல்தேதி வரை ஒருவார காலத்துக்கு போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டது.

அப்போது, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னர் தண்டிக்கப்பட்ட 4 குற்றவாளிகளை தூக்கிட்டுக் கொல்லும் உத்தரவில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கடந்த 26-6-2019 அன்று கையொப்பமிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிராக தண்டிக்கப்பட்டவர்கள் சார்பில் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.



இதுதவிர, சுமந்திரன் என்ற வழக்கறிஞர் உள்பட 11 பேர் அதிபரின் உத்தரவுக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். குற்றவாளிகளின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இந்த மரண தண்டனை உத்தரவு அமைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மலின்டா சேனவிரத்னே என்பவர் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், அதிபரின் உத்தரவுக்கு அக்டோபர் 29-ம் தேதி வரை தடை விதித்துள்ளனர். இவ்வழக்கின் மறுவிசாரணை ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News