செய்திகள்
11 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு விமான சேவையை தொடங்கியது பிரிட்டிஷ் ஏர்வேஸ்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், 11 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு விமான சேவையை தொடங்கி உள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் 11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் காரணமாக பாகிஸ்தானுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது விமான சேவையை நிறுத்தியது. தற்போது மீண்டும் சேவையை தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ரம்ஜான் விடுமுறை வர உள்ள நிலையில், லண்டனிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு இன்று விமான சேவை தொடங்கியுள்ளது. வாரத்திற்கு மூன்று விமானங்கள் இயக்கப்படுகின்றன.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பாகிஸ்தான் வந்த பயணிகளுக்கு விமான போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வார் மற்றும் மற்ற அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின் போது, பிரிட்டன் தூதரக உயர் அதிகாரி தாமஸ் க்ரூவும் உடனிருந்தார்.
இஸ்லாமாபாத்தின் மரியாட் ஓட்டலில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்புச் சம்பவம் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது விமான சேவையை நிறுத்தியது. இச்சம்பவத்தில் 54 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 270 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.