செய்திகள்

ஜெர்மனியில் நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் ஏஞ்சலா மெர்க்கல் - டிரம்ப் வாழ்த்து

Published On 2017-09-29 07:55 GMT   |   Update On 2017-09-29 07:55 GMT
ஜெர்மனி நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் ஏஞ்சலா மெர்க்கலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

ஜெர்மனி நாடாளுமன்றத்தில் மொத்தம் 598 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 311 இடங்களில் வெற்றி பெற்று சமூக ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து மூன்றாவது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த அரசின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான 19-வது நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல் 33.2 சதவீதம் வாக்குகள் பெற்று சாதனை வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து, சமூக ஜனநாயக கட்சி 20.8 சதவீதம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் ஏஞ்சலா மெர்க்கலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து ஏஞ்சலா மெர்க்கலுடன் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு பேசிய டிரம்ப், அமெரிக்கா - ஜெர்மனி இடையிலான நீண்டகால நல்லுறவுகளை சுட்டிக் காட்டியதுடன் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானை அடக்கி வைப்பது எப்படி? என்பது தொடர்பாகவும் அவருடன் ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News