அமெரிக்கா-ஜப்பானுக்கு வடகொரியா மீண்டும் மிரட்டல்
சியோல்:
வடகொரியா நேற்று கனான் பகுதியில் இருந்து நீண்ட தூர ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது. அந்த ஏவுகணை அங்கு வானில் 550 கி.மீ. உயரத்தில் 2,500 கி.மீ. தூரம் பயணம் செய்து பசிபிக் கடலில் விழுந்தது. அப்போது அது ஜப்பானின் ஹொக்கைடோ தீவை கடந்து சென்றது.
இது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்தது. வடகொரியாவின் இச்செயல் ஜப்பானை கடும் அதிர்ச்சி அடைய செய்தது. இது வடகொரியாவின் அத்துமீறிய செயல். மிகவும் அபாயகரமான அச்சுறுத்தல் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்புடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு 40 நிமிட நேரம் பேசினார். பின்னர் டிரம்ப் அளித்த பேட்டியில் வடகொரியாவின் அத்து மீறல் குறித்து ஐ.நா. சபையில் நாம் உடனடியாக ஆலோசித்து அந்நாட்டின் மீதான நெருக்கடியை அதிகரிக்க வேண்டும் என்றார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு வடகொரியா இன்று மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது. அதில், ஜப்பான் மீது ஏவுகணையை பறக்க விட்டது முதல் கடட நடவடிக்கைதான். இது போன்று பசிபிக் கடல் பிராந்தியத்தில் பல ஏவுகணை சோதனைகள் நடைபெற உள்ளன. அதுவரை காத்திருங்கள் என கூறியுள்ளது.