செய்திகள்

உக்ரைன் கலவரங்களுக்கு ரஷ்யாவின் அணுகுமுறையே காரணம்: அமெரிக்கா குற்றச்சாட்டு

Published On 2017-07-23 15:30 GMT   |   Update On 2017-07-23 15:31 GMT
உக்ரைன் நாட்டில் ரஷ்யாவிற்கு ஆதரவாக நடைபெற்றுவரும் கலவரங்களுக்கு ரஷ்யாவின் தவறான அணுகுமுறையே காரணமென அமெரிக்க தூதர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கெய்வ்:

ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனில் ரஷ்ய ஆதரவாளர்களுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. உக்ரைன் நாட்டிற்கான அமெரிக்க தூதராக கர்ட் வோல்கர் கடந்த 7-ம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன்னதாக நாட்டோவிற்கான அமெரிக்க தூதராகவும் பதவிவகித்துள்ளார்.

உக்ரைனில் நடைபெற்றுவரும் கலவரங்களை தீர்த்துவைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக இன்று உக்ரைனின் கிரமடோர்ஸ்க் நகரத்திற்கு வந்துள்ளார்.அப்போது உக்ரைன் கலவரங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

உக்ரைனில் நடைபெற்றுவரும் கலவரங்களுக்கு ரஷ்யாவின் தவறுதலான அணுகுமுறைதான் காரணம். இங்கு நடைபெற்று வருவது ராணுவத்திடையேயான போராக மாறியுள்ளது. எனவே விரைந்து செயல்பட்டு இதற்கு ஒரு நல்ல முடிவை கொண்டுவர வேண்டும். இப்பிரச்சனையில் அமெரிக்கா தலையிட்டு விரைவில் நல்ல முடிவுக்கு கொண்டுவரும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா கலவரங்களை தூண்டிவிடுவதோடு தன் படைபலத்தையும் ஆயுதங்களையும் கலவரக்காரர்களுக்கு வழங்கி வன்முறையை ஊக்குவித்து வருகிறது என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா அரசு மறுத்துள்ளது.
Tags:    

Similar News