செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வங்கியில் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: பலர் பலியானதாக தகவல்

Published On 2017-05-20 13:46 GMT   |   Update On 2017-05-20 13:46 GMT
ஆப்கானிஸ்தானில் மர்ம நபர்கள் திடீரென வங்கியில் புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் பலர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
காபூல்:

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள பாக்தியா மாகாணம், கார்டெஸ் நகரில் உள்ள ஒரு வங்கியில் இன்று வழக்கமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. வாடிக்கையாளர்கள் பலர் உள்ளே இருந்தனர். அப்போது, வாடிக்கையாளர்கள் போன்று வந்த சில மர்ம நபர்கள், திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தத் தொடங்கினர். 

இதனை சற்றும் எதிர்பாராத வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அங்குமிங்கும் சிதறி ஓடியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் வங்கியை சுற்றி வளைத்து, மர்ம ஆசாமிகளுக்கு பதிலடி கொடுத்தனர். தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.

மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல் மற்றும் துப்பாக்கி சண்டையில் பலர் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஏராளமானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய 3 நபர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாகவும் கவர்னர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.



இதுவரை 2 போலீஸ்காரர்கள் உள்ளிட்ட 3 பேரின் உடல்கள் வந்திருப்பதாகவும், 30 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் நகர மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேசமயம், தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கமும் வெளியாகவில்லை. 

ஆப்கானிஸ்தானில் தலிபான், ஐ.எஸ். போன்ற தீவிரவாத குழுவினர் சமீப காலமாக வங்கிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News