செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய ஊழியர் பலி

Published On 2017-04-28 20:46 GMT   |   Update On 2017-04-28 20:46 GMT
அமெரிக்காவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய ஊழியர் பலியானார். இச்சம்பவம் அங்கு வசிக்கும் இந்தியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தில், ஒயிட்ஹெவன் என்ற இடத்தில் உள்ள சாலையோர உணவு விடுதி ஒன்றில் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் தங்கி இருந்து பணியாளராக வேலை பார்த்து வந்தவர், காண்டு பட்டேல் (வயது 56). இந்தியர்.

கடந்த 24-ந் தேதியன்று காண்டு பட்டேல், பணியை முடித்து விட்டு அந்த உணவு விடுதியின் பின்னால் சென்று சுற்றிப் பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து என்ன, ஏது என்று அறிவதில் அவர் தீவிரம் காட்டியபோது, கண் இமைக்கும் நேரத்தில் ஒரு குண்டு வந்து, அவர் நெஞ்சில் பாய்ந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு, பிராந்திய மருத்துவ மையத்தில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பலியான காண்டு பட்டேல், அந்த சாலையோர உணவு விடுதியில் கடந்த 8 மாதங்களாக வேலை செய்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவம் நடந்தது எப்படி என்று எந்தவொரு தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

காண்டு பட்டேல், அந்த உணவு விடுதி வேலையை விட்டு விட்டு, வேறு இடத்துக்கு வேலை தேடிச் செல்ல நினைத்திருந்த வேளையில் இந்த சம்பவம் நடந்து விட்டதாக அவரது நெருங்கிய உறவினரான ஜெய் பட்டேல் கூறினார்.

அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து பலியான 5-வது இந்தியர் காண்டு பட்டேல் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News