செய்திகள்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக் - இம்முறை 70 லட்சம் பேரின் புகைப்படங்கள் பறிபோனதாக அறிவித்தது

Published On 2018-12-15 06:02 GMT   |   Update On 2018-12-15 06:02 GMT
ஃபேஸ்புக் வலைத்தளம் பயன்படுத்துவோரில் 70 லட்சம் பேரின் புகைப்படங்கள் புதிய பிழை மூலம் கசிந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #Facebook #databreach



ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்ட புது பிழை சுமார் 70 லட்சம் பயனரின் புகைப்படங்களை ஆப் டெவலப்பர்களுக்கு அம்பலப்படுத்தியதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

இம்முறை கண்டறியப்பட்ட பிழை பயனரின் புகைப்படங்களை மற்றவர்கள் பார்க்கவில்லை என்றாலும், ஃபேஸ்புக் தளத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் அரங்கேறுவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு புகைப்படங்களை இயக்க அனுமதியளித்த சுமார் 68 லட்சம் பயனர்களின் புகைப்படங்கள் பிழையில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கு இந்த புகைப்படங்கள் அம்பலமாகி இருந்தது என்றும், இந்த பிழை சரி செய்யப்பட்டு விட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.



ஃபேஸ்புக்கில் சரி செய்யப்பட்ட புதிய பிழை ஆப் டெவலப்பர்களுக்கு பயனரின் மற்ற புகைப்படங்கள்: அதாவது மார்கெட்பிளேஸ் அல்லது ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் பதிவிடப்பட்டவைக்கான அனுமதியை வழங்கியிருந்தது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 

இத்துடன் இந்த பிழை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய முயன்று, பின் தொழில்நுட்ப கோளாறு மற்றும் இதர காரணங்களால் பதிவேற்றப்படாத புகைப்படங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறது. சமீப காலங்களில் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பல்வேறு கோளாறுகள் மற்றும் பிரச்சனைகள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது.
Tags:    

Similar News