தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16 ஆயிரத்து 204 கன அடியாக சரிவு

Published On 2022-07-27 03:50 GMT   |   Update On 2022-07-27 03:50 GMT
  • மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 15 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
  • 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

தற்போது 2 அணைகளில் இருந்தும் 16 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஒனேக்கலுக்கும் நீர்வரத்து சரிந்துள்ளது. ஒகேனக்கலில் இன்று காலை 16 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது.

ஆனாலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரிகரைக்கு செல்லவும் 18 -வது நாளாக தடை நீடிக்கிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 16 ஆயித்து 204 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 15 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 120 அடியாக இருந்தது. இன்றும் நீர்மட்டம் அதே அளவில் நீடித்தது . அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளதால் மேட்டூர் அணை கடல் போல காட்சி அளிக்கிறது. இதனை ஏராளமானோர் திரண்டு பார்த்து வருகிறார்கள். இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் குறையும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடிக்கும் கீழ் சரிய வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News