தமிழ்நாடு

ஜனாதிபதி தேர்தல்- தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டு போட்டார்

Published On 2022-07-18 05:00 GMT   |   Update On 2022-07-18 08:21 GMT
  • எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தில் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டது.
  • எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலான வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது.

சென்னை:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக (பா.ஜனதா கூட்டணி) திரவுபதி முர்மு, எதிர்க்கட்சி சார்பில் (காங்கிரஸ் கூட்டணி) யஷ்வந்த் சின்கா வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.

இந்தியா முழுவதும் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்பதால் டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதே போல் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் ஓட்டு போட வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாட்டில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக சென்னை தலைமைச் செயலத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அங்கு ஓட்டு போட வரும் எம்.எல்.ஏ.க்களின் அடையாள அட்டையை ஒரு அதிகாரி பெயர் பட்டியலுடன் சரி பார்த்து வந்தார். இன்னொரு அதிகாரி வாக்குச் சீட்டை வழங்கினார்.

எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தில் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டது. எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலான வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த தேர்தலில் வாக்களிக்க முதலில் ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கும், அதனை தொடர்ந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கும் நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது.

சட்டசபையில் தி.மு.க.வுக்கு 125 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ்-18, ம.தி.மு.க.-4, விடுதலை சிறுத்தைகள்-4, இந்திய கம்யூனிஸ்டு-2, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-2, மனிதநேய மக்கள் கட்சி-2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-1, தமிழக வாழ்வுரிமை கட்சி-1 எம்.எல்.ஏ.க்களும்

அ.தி.மு.க.வில் உள்ள 65 எம்.எல்.ஏ.க்களில் எடப்பாடி பழனிசாமி அணியில் 62 எம்.எல்.ஏ.க்கள், ஓ.பன்னீர் செல்வம் அணியில் 3, பா.ம.க.-5, பா.ஜனதா-4, புரட்சி பாரதம்-1 ஆகியோர் உள்ளதால் இவர்கள் வாக்களிக்க ஏதுவாக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

இதில் ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் எந்த நேரத்தில் வந்து வாக்களிக்கலாம் என்பது பற்றி முன் கூட்டியே பேசி வைத்திருந்தனர்.

அதன்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலை 9.30 மணிக்கே தலைமைச் செயலகம் வந்து விட்டனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றுக்கு காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து விட்டதால் இன்று காலை டிஸ்சார்ஜ் ஆனார். அவர் நேராக 10 மணியளவில் தலைமைச் செயலகம் வந்தார். அவரை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

பதிலுக்கு வணக்கம் தெரிவித்த மு.க.ஸ்டாலின் நேராக சட்டசபை குழு கூட்டத்துக்கு சென்று ஜனாதிபதி தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர்.

அதன் பிறகு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் வந்து வாக்களிக்கின்றனர். ஓ.பன்னீர் செல்வம் அணி எம்.எல்.ஏ.க்கள் தனியாக வந்து வாக்களிக்கின்றனர்.

உடல்நலம் சரியில்லாத ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி., நாகை செல்வராஜ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் ஆகிய 3 எம்.பி.க்களும் சென்னையில் வாக்களிக்கின்றனர்.

இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவுக்கு நேரம் இருப்பதால் சில எம்.எல்.ஏ.க்கள் மதியம் வந்து வாக்களிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களும் இன்று வாக்களிக்கின்றனர். ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 176 என மதிப்பிடப்பட்டு உள்ளது. ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு 700 ஆகும்.

சென்னையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவை உதவி தேர்தல் அதிகாரியான சட்டசபை செயலாளர் சீனிவாசன் முன்னின்று நடத்தினார். தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஓட்டுப் பெட்டியுடன் பாதுகாப்பாக இன்றிரவே டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

Tags:    

Similar News