search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "presidential election"

    • அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
    • ஓஹியோ மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    இதற்கிடையே, அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்ட் டிரம்ப் தொடங்கியுள்ளார்.

    இந்நிலையில் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நவம்பர் 5-ம் தேதியை (அதிபர் தேர்தல்) நினைவில் வைத்து கொள்ளுங்கள். அது நமது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். என்னை மீண்டும் அதிபராக தேர்வு செய்யவில்லை என்றால் ரத்தக்களறி ஏற்படும் என தெரிவித்தார்.

    மெக்சிகோவில் கார்களை தயாரித்து அமெரிக்கர்களுக்கு விற்கும் சீனத் திட்டத்தை விமர்சித்தபோது அவர் இவ்வாறு கூறினார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தக் கார்களை அவர்களால் விற்க முடியாது. நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அது ஒட்டுமொத்த ரத்தக்களறியாக இருக்கும் என்றார்.

    இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் கூறுகையில், அவர் மற்றொரு ஜனவரி 6-ம் தேதியை விரும்புகிறார். அமெரிக்க மக்கள் இந்த நவம்பரில் அவருக்கு மற்றொரு தேர்தல் தோல்வியைக் கொடுக்கப் போகிறார்கள். ஏனெனில் மக்கள் அவரது பயங்கரவாதம், வன்முறை மீதான அவரது பாசம் மற்றும் பழிவாங்கும் தாகம் ஆகியவற்றை நிராகரித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

    • பிரபோவோ சுபியாண்டே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
    • அதிபர் தேர்தலில் பிரபோவோ 57 முதல் 59 சதவீதம் வரை வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தோனேசியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாதுகாப்பு மந்திரி பிரபோவோ சுபியாண்டோ முன்னாள் மாகாண கவர்னர்கள் அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவியது.

    வாக்குப்பதிவு முடிந்ததும் உடனே ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் பிரபோவோ சுபியாண்டே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.

    இந்நிலையில் அதிபர் தேர்தலில் பிரபோவோ 57 முதல் 59 சதவீதம் வரை வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதன் மூலம் அவர் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார். அதே வேளையில் தேர்தல் முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பிரபோவோ, தனது வெற்றி அனைத்து இந்தோனேசியர்களின் வெற்றியாகும் என்றார்.

    • அதிபர் முகமது சோலியும், சீன ஆதரவாளராக கருதப்படும் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான முகமது மூயிசும் நேரடியாக மோதினார்கள்.
    • 54.6 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வெற்றி பெற்றார்.

    மாலத்தீவு:

    இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு கூட்ட நாடான மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடை பெற்றது. இந்த தேர்தலில் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவராக அறியப்படும் அதிபர் முகமது சோலியும், சீன ஆதரவாளராக கருதப்படும் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான முகமது மூயிசும் நேரடியாக மோதினார்கள்.

    கடந்த 9-ந்தேதி அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை யாரும் பெறவில்லை. அந்நாட்டை பொறுத்தவரை அதிபராக 50 சதவீதம் ஓட்டுகளை பெற வேண்டும்.

    இதையடுத்து இறுதிகட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 85 சதவீத ஓட்டுகள் பதிவானது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் 54.6 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வெற்றி பெற்றார். அதிபர் முகமது சோலி தோல்வியை தழுவினார். அவர் தான் வெளியிட்ட எக்ஸ் வலைதளத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது மூயிசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். 61 வயதான முகமது சோலி நவம்பர் மாதம் 17-ந்தேதி வரை புதிய அதிபர் பதவியேற்கும் வரை தற்காலிக அதிபராக பதவி வகிப்பார்.

    சீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட முகமது மூயிஸ் மாலத்தீவு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால் இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

    ஏனென்றால் தேர்தல் பிரசாரத்தின் போது அவர் அதிபர் சோலி மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். தனது ஆட்சியில் இந்தியாவுக்கு அளவுக்கு அதிகமாக இடமளிப்பதாகவும், மாலத்தீவில் இந்திய ராணுவத்தினர் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என அவர் தெரிவித்தார்.

    மேலும் தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்திய ராணுவத்தினரை மாலத்தீவில் இருந்து திருப்பி அனுப்பப் போவதாக அறிவித்தார்.

    இந்த குற்றச்சாட்டை அதிபர் முகமது சோலி மறுத்தார். மாலத்தீவில் நடந்து வரும் கட்டமைப்பு பணிகளுக்காக இந்திய ராணுவம் வந்துள்ளதாகவும், இதனால் நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்தார்.

    • ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
    • 74 சதவீதம் பேர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு ஜோ பைடனுக்கு வயதாகி விட்டது என வாக்களித்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஜனாதிபதி ஜோ பைடன் (வயது 80) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

    இதனால் அங்கு அடுத்த ஆண்டு தேர்தலுக்கான பணிகள் தற்போதே சூடுபிடித்துள்ளன. இதற்கிடையே ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

    அதேசமயம் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகிறார். இவரை தவிர சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் இந்த தேர்தலில் போட்டியிட வரிந்து கட்டி நிற்கின்றனர். இந்தநிலையில் அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி குறித்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதில் சுமார் 44 சதவீதம் பேர் ஜோ பைடன் ஆட்சியில் தங்களது பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக கூறி உள்ளனர்.

    மேலும் சுமார் 37 சதவீதம் பேர் மட்டுமே ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 56 சதவீதம் பேர் இவரது செயல்பாட்டை ஏற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேசமயம் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகத்தை சுமார் 48 சதவீதம் பேர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது 2021-ல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தபோது இருந்ததை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.

    74 சதவீதம் பேர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு ஜோ பைடனுக்கு வயதாகி விட்டது என வாக்களித்துள்ளனர். எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனுக்கு பதிலாக வேறு ஒருவரை நிறுத்த வேண்டும் என 62 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக அந்த கருத்து கணிப்பு கூறுகிறது. இதன் மூலம் அங்கு தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

    • சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் பதவிக்காலம் செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைகிறது.
    • மீண்டும் போட்டியிட போவதில்லை என தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவிக்காலம் செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிகிறது. தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்தார்.

    அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் மந்திரி பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர்.

    இவர்கள் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவியது. அவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

    இதற்கிடையே, சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    இந்நிலையில், இன்று இரவு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபராக வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார்.
    • தர்மன் சண்முக ரத்னம் கடந்த 1988-ம் ஆண்டு சிங்கப்பூர் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூத்த பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இது அந்நாட்டின் 7-வது அதிபர் தேர்தல் ஆகும். இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார்.

    அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் அமைச்சர் பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    இவர்கள் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் தர்மன் சண்முக ரத்னம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    தர்மன் சண்முக ரத்னத்தின் தாத்தா, பாட்டி, தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூரில் குடியேறியவர்கள் தர்மன் 1957-ம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தார். அவரது தந்தை கனகரத்தினம் மருத்துவ துறையில் பேராசிரியராக பணியாற்றியவர்.

    தர்மன் சண்முகரத்னம், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பொது நிர்வாக படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றார். 2001-ம் ஆண்டு அரசியலில் ஈடுபட்ட அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் மக்கள் செயல் கட்சியில் அமைச்சராக பணியாற்றினார்.

    தர்மன் சண்முக ரத்னம் கடந்த 1988-ம் ஆண்டு சிங்கப்பூர் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூத்த பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டார்.

    சிங்கப்பூர் எம்.பி.யாக இவர் கடந்த 2001-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இவர் கல்வி, நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பணியாற்றினார்.

    • துருக்கியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும்.
    • எர்டோகனுக்கு எதிராக 6 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியினர் பொது வேட்பாளராக குடியரசு கட்சி தலைவர் கெமால் கிலிக்சதரோ களம் இறக்கப்பட்டுள்ளார்.

    அங்காரா:

    துருக்கியில் கடந்த 15-ந்தேதி அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் தய்யீப் எர்டோகனும், எதிர்க் கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கெமால் கிலிக்சத்ரோ இடையே கடும் போட்டி நிலவியது.

    துருக்கியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும்.

    இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் எர்டோகன் 49.50 சதவீத வாக்குகளும், கெமால் கிலிக்சதரோ 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 28-ந்தேதி (இன்று) அதிபர் தேர்தலின் 2-வது சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி இன்று துருக்கியில் அதிபர் தேர்தலின் 2-வது சுற்று வாக்குப் பதிவு நடந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    எர்டோகன் கடந்த 2003-ம் ஆண்டு முதல் துருக்கியில் ஆட்சி செய்து வருகிறார். அங்கு 20 ஆண்டுக்கு பிறகு அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. எர்டோகனுக்கு எதிராக 6 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியினர் பொது வேட்பாளராக குடியரசு கட்சி தலைவர் கெமால் கிலிக்சதரோ களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் எர்டோகனுக்கு கடும் சவால் அளித்து வருகிறார்.

    2003 முதல் 2014-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த எர்டோகன், அப்ப தவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமான அதிபர் பதவியை கொண்டு வந்தார். அவர் சர்வாதிகாரி போல் செயல்படுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    • துணைத் தலைவர்கள் சி.ஜெயபிரகாஷ், கே.ஆர்.பாபு என்கிற பால்ராஜ் வரவேற்று பேசினர்.
    • பி.பிரேமா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    மடத்துக்குளம்:

    ஜனாதிபதி தேர்தலில் பாஜக. கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றதையடுத்து குடிமங்கலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார். இந் நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர் கே.மோகன்ராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மண்டல தலைவர் பங்காரு நாராயணசாமி முன்னிலை வகித்தார்.மண்டல துணைத் தலைவர்கள் சி.ஜெயபிரகாஷ், கே.ஆர்.பாபு என்கிற பால்ராஜ் வரவேற்று பேசினர்.

    நிகழ்ச்சியில் மண்டல பொதுச் செயலாளர் யூ.மனோஜ்குமார், சந்திரசேகர், மண்டல செயலாளர் டி.சற்குணம், மாவட்ட பொறுப்பாளர்கள் கே.ஆர்.ஆனந்தன், சிவக்குமார், நாகமாணிக்கம், மருதமுத்து, தீபன். அணிபிரிவுத் தலைவர்கள் சி.சந்துரு, மெய்யப்பன், ஆர்.பத்மநாதன், சண்முகசுந்தரம், ரவீந்திரன், செந்தில்குமார், சிவக்குமார், மகளிர் அணி மண்டல தலைவர் கே.கலாமணி, துணைத்தலைவர் பொ.சரண்யா, பி.பிரேமா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 2-வது பெண் ஜனாதிபதி, மிகவும் இளைய ஜனாதிபதி என்ற பெருமையை பெறுகிறார்.
    • இவர் பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி ஆவார்.

    புதுடெல்லி :

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய குடியரசின் தலைவராக விளங்குபவர், ஜனாதிபதி.

    நாட்டின் முதல் குடிமகன் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியும் இவரே. இந்தியாவின் இந்த உயரிய பதவியை தற்போது அலங்கரிப்பவர், ராம்நாத் கோவிந்த். 14-வது ஜனாதிபதியான அவரது பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.

    புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் நடத்த தேவை ஏற்பட்டால், ஜூலை 18-ந்தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி தனது ஆளுமையை நிரூபிக்க மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி நடவடிக்கை எடுத்தது.

    இதற்காக ஒடிசாவை சேர்ந்த பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்முவை (வயது 64) வேட்பாளராக களமிறக்கியது. அவரை ஆதரித்து பழங்குடியினருக்கு நியாயம் சேர்க்குமாறு எதிர்க்கட்சிகளையும் கேட்டுக்கொண்டது.

    ஆனால் மத்திய அரசுக்கு எதிரான தங்கள் ஒற்றுமையை நிரூபிக்கும் வகையில் களமிறங்கிய எதிர்க்கட்சிகளோ, பொது வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்தன. இதற்காக பல்வேறு தலைவர்களின் பெயரை பரிசீலித்து, கடைசியில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்காவை இறுதி செய்தன.

    இந்திய ஜனாதிபதியை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்வதால், இந்த மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவை பெறுவதற்கு இரு அணியினரும் தீவிர களப்பணியாற்றினர். குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கிய திரவுபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்கா இருவரும் மாநிலங்கள்தோறும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர்.

    இதன் தொடர்ச்சியாக கடந்த 18-ந்தேதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. எம்.பி.க்கள் வாக்களிக்க நாடாளுமன்றத்திலும், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க நாட்டின் 30 இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாடு முழுவதிலும் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை சுமார் 4,800 ஆக இருந்த நிலையில், இதில் 99 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

    வாக்குச்சீட்டு முறையில் இந்த தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தேர்தல் முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டன. அங்கு நாடாளுமன்றத்தின் 63-ம் எண் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி மேலும் சில கட்சிகள் என சுமார் 44 கட்சிகள் திரவுபதி முர்முவை ஆதரித்தன. அத்துடன் வாக்குப்பதிவின்போதும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சில எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் அணி மாறி திரவுபதி முர்முவுக்கு வாக்களித்தனர். இதனால் அவருக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

    இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன. முதலில் பாராளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று பின்தங்கினார்.

    அதன்பின்னர் எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. 20 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், மெஜாரிட்டிக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றார் முர்மு. 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்மு 50 சதவீத வாக்குகளை கடந்ததால் அவர் ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பது உறுதியானது.

    அதன்பின்னர் மீதமுள்ள மாநிலங்களின் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி பி.சி.மோடி அறிவித்தார்.

    திரவுபதி முர்மு 6,76,803 வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 3,80,177 வாக்குகளும் பெற்றுள்ளனர். திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதன்மூலம் நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்க உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பிரதமர் மோடி நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரவுபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார். பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி, 2-வது பெண் ஜனாதிபதி, மிகவும் இளைய ஜனாதிபதி என பல்வேறு பெருமைகளை இதன் மூலம் அவர் பெறுகிறார்.

    மேலும் நாடு விடுதலைக்குப்பின் பிறந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் திரவுபதி முர்முவையே சாரும். 3-வது சுற்றிலேயே முர்முவின் வெற்றி உறுதி செய்யப்பட்டதால், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்கா தனது தோல்வியை ஒப்புக்கொண்டு முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    • குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்.
    • புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி நடக்கிறது.

    புதுடெல்லி :

    நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தியை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக சில எதிர்க்கட்சி தலைவர்கள் கோபாலகிருஷ்ண காந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்தியதாகவும், அப்போது அவர் தனக்கு யோசிப்பதற்கு சிறிது காலஅவகாசம் வேண்டும் என்றும், இன்று (புதன்கிழமை) தனது முடிவை கூறுவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    அவருடன் பேசிய தலைவர்கள் தங்கள் கோரிக்கைக்கு அவரது பதில் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக கூறினர். 77 வயதாகும் கோபாலகிருஷ்ண காந்தி, மகாத்மா காந்தி-ராஜாஜியின் பேரன் ஆவார். கடந்த 2017-ம் ஆண்டு துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட கோபாலகிருஷ்ண காந்தி, அப்போது வெங்கையா நாயுடுவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஒருமித்த முடிவுடன் பொது வேட்பாளரை நிறுத்த ஆளும் பாஜக திட்டமிட்டுள்ளது.
    • இந்த தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை

    குடியரசுத் தலைர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி முடிகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடக்கிறது.

    வாக்குப்பதிவு நடைபெறும் பட்சத்தில் ஜூலை 21-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.29ந் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். மனுக்களை திரும்ப பெற அடுத்த மாதம் 2ந் தேதி கடைசி நாள்.

    குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு பணி அதிகாரி முகுல் பாண்டே, இணைச்செயலாளர் சுரேந்திரகுமார் திரிபாதி ஆகியோர் துணை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த முடிவுடன் வேட்பாளரை நிறுத்த மத்தியில் ஆளும் பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளிடம் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும் பொறுப்பு ஜே.பி.நட்டா மற்றும் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    எனினும் எதிர்க்கட்சிகள் தரப்பில் பொதுவேட்பாளரை நிறுத்தும் நடவடிக்கையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக தி.மு.க. உள்ளிட்ட மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் உள்பட 22 கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    டெல்லியில் இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இதுவரை யார் ஜனாதிபதி வேட்பாளர், எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பதே தெளிவாகவில்லை.
    • வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன்பு, கட்சிகள், கூட்டணி சார்பில் அவர்களுக்குள் வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படும்.

    பாட்னா:

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு செய்ய இது சரியான நேரம் அல்ல. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியோ அல்லது எதிர்க்கட்சியோ இதுவரை நாட்டின் உயர் பதவிக்கான வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து எந்த விவாதத்தையும் நடத்தவில்லை. அப்படி இருக்கும்போது முன்கூட்டியே அதுகுறித்து முடிவு செய்ய முடியாது.

    2012-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளித்தோம். 2017-ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகித்தபோது அதன் வேட்பாளருக்கு ஆதரவு அளித்தோம். இதுவரை எங்கள் விருப்பப்படி ஆதரவு அளித்தோம். இந்த முறை இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதுவரை யார் ஜனாதிபதி வேட்பாளர், எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பதே தெளிவாகவில்லை.

    வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன்பு, கட்சிகள், கூட்டணி சார்பில் அவர்களுக்குள் வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படும். தற்போதுவரை அதுபோன்ற ஆலோசனையும் நடத்தப்படவில்லை. ஊடகங்களில் நான் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக வந்த தகவல்களிலும் உண்மையில்லை. எனக்கு போட்டியிடும் விருப்பம் சிறிதும் இல்லை" என்று அவர் கூறினார்.

    ×