பல்லாவரம் போலீஸ் உதவி கமிஷனர் கொரோனாவால் மரணம்- மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வந்த சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பெருந்தொற்றுக் காலத்திலும் தன் கடமையைச் சிறப்பாக ஆற்றி வந்த ஈஸ்வரனின் மறைவு, தமிழ்நாடு காவல்துறைக்குப் பேரிழப்பாகும்.
ஈஸ்வரன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காவல்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்கள வீரர்களாக நின்று கடமையாற்றுவோர் அனைவரும் முன்எச்சரிக்கையோடும், உரிய பாதுகாப்புடனும் தங்களது பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு இரங்கல் செய்தியில், ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் சகோதரர் கருணாகரன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்ற துயரச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருணாகரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் டி.ராஜாவுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.