தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம்
தர்மபுரி:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலையாக வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி தர்மபுரி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகளில் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் போன்றவை கடை பிடிப்பதை கண்காணிக்க நகராட்சி, உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆகியோர் மாஸ்க் அணியாமல் சென்றால் அவர்களிடம் அபராதம் வசூலிக்கவும், புதிய கொரோனா கட்டுபாடு விதிமுறைகளை கடைபிடிக்காத வணிக நிறுவனங்கள், கடைகள் மீதும் அபராத விதிக்க வேண்டும் என்று நகராட்சி, உள்ளாட்சி ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்திரவிட்டுள்ளனர்.
இதேபோல் தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராம பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தவும், அதன்படி சுகாதாரதுறை சார்பில் கிராம பகுதிகளில் வீடு, வீடாக சென்று காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை சேகரித்து கொரோனா பரிசோதனை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.