செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

இலவச மின்சாரத்தை ரத்து செய்ய அரசு தயாராக இல்லை- அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2020-05-23 11:49 GMT   |   Update On 2020-05-23 11:55 GMT
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய அரசு தயாராக இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை:

மதுரை மாநகர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் அமைச்சர் செல்லூர் ராஜூ தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இன்று மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், கபசுர குடிநீர் மற்றும் நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைக்கப்பட்டு உள்ளது. தற்போது வெளிப்பகுதியில் இருந்து வரும் நபர்களுக்குதான் கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் திறம்பட பணியாற்றி கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளது. இதற்கு மக்கள் அனைவரும் நிர்வாகத்தை பாராட்ட வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்க பரிசோதனைகளை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு விவசாயி. விவசாயிகளின் துயரம் அறிந்தவர். எனவே இந்த அரசு விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருபோதும் எடுக்காது.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய அரசு தயாராக இல்லை. இப்படி இருக்கும்போது காங்கிரஸ் போராட்டம் என்பது அவர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டி கொள்ளத்தான்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள்? மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்கள் கொண்டு வந்தார்? ஒன்றும் செய்யவில்லை. இது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன், நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், பைக்காரா கருப்பசாமி, முத்துவேல், சோலை ராஜா, குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News