செய்திகள்
கேஎஸ் அழகிரி

மக்களின் வாழ்வாதாரத்தை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும்- கே.எஸ்.அழகிரி

Published On 2020-04-11 08:36 GMT   |   Update On 2020-04-11 08:36 GMT
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய விமான நிலையங்களை ஒரு மாதத்திற்கு முன்பே மூடியிருந்தால் இந்தியாவில் கொரோனா நோய் நுழைந்திருக்காது.

தலைநகர் டெல்லியில் மார்ச் 8-ந்தேதி நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முன்கூட்டியே தடை விதித்திருந்தால் இன்றைய பாதிப்பில் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கும். இதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் பொறுப்பே தவிர, மத்திய அரசு அனுமதியோடு மாநாடு நடத்திய தப்லிக் ஜமாத் அல்ல. கொரோனா நோய்க்கு மதசாயம் பூசுபவர்கள் அந்த நோயை விட கொடியவர்கள்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனா நோய் ஒழிப்பில் முக்கிய கவனம் செலுத்தவேண்டியதில் பரிசோதனையும், தடுப்பு நடவடிக்கையும் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகத்திலேயே பரிசோதனை வசதி இந்தியாவில் குறைவாக இருக்கிறது. 10 லட்சம் பேரில் 120 பேருக்குத்தான் சோதனை செய்கிற வசதி இருக்கிறது.

கொரோனா பரிசோதனைக்கு ரூ.4500 வாங்குவதை தனியார் மையங்கள் தவிர்த்து இலவசமாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோர்ட்டு கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

மேலும் மக்கள் ஊரடங்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒவ்வொரு ஜன்தன் வங்கி கணக்கிலும் ரூ.7500 மத்திய அரசு செலுத்தவேண்டும்.

எனவே, மத்திய அரசு நாட்டில் நிலவுகிற அசாதாரண சூழலில் போர்க்கால அடிப்படையில் அசாதாரண நடவடிக்கைகளை எடுப்பது மிக மிக அவசியமாகும். ஒரு பக்கம் கொரோனா நோய் தடுப்பில் கவனம் செலுத்துகிற மத்திய, மாநில அரசுகள், மக்கள் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து நிற்கிற ஏழை, எளிய மக்களை பசி, பட்டினி, பஞ்சத்தில் இருந்து காப்பாற்றுகிற மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News