தவறான சிகிச்சையால் மாணவன் இறந்ததாக புகார்- ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம்
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள வத்தல்பட்டியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் தேவதர்ஷன் (வயது 11). 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மாணவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும என கூறி ஆஸ்பத்திரி நிர்வாகம் ஒரு தொகையை பெற்றுள்ளனர். பின்னர் மயக்க மருந்து கொடுத்த போது, மாணவனுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் வழியிலேயே தேவதர்சன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தவறான சிகிச்சையால்தான் தேவதர்சன் உயிரிழந்து விட்டான் என கூறி வத்தலக்குண்டு தனியார் ஆஸ்பத்திரி முன்பு மாணவனின் உறவினர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு நிலக்கோட்டை டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதா? என விசாரணை நடத்துவதாக உறுதியளித்ததின் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து இளங்கோவன் விருவீடு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து போலீசார் ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.