செய்திகள்
ரஜினிகாந்த்

ரஜினி வீட்டில் வருமான வரி சோதனை நடத்தாதது ஏன்?: கே.எஸ்.அழகிரி-சீமான் கேள்வி

Published On 2020-02-07 09:53 GMT   |   Update On 2020-02-07 09:53 GMT
விஜயை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினி வீட்டில் வருமான வரி சோதனை நடத்தாதது ஏன்? என்று கே.எஸ்.அழகிரி மற்றும் சீமான் ஆகியோர் கேள்வியெழுப்பியுள்ளர்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசியல் களம் பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு எதிராக வலிமை பெறுவதை தடுக்கிற வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. சில நிகழ்வுகள் திரைக்கு முன்னாலும், இன்னும் சில திரைக்கு பின்னாலும் நடைபெற்று வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.

நடிகர் விஜய்யின் வீடுகளிலும், தயாரிப்பாளர் அன்புசெழியன் சம்மந்தப்பட்ட மொத்தம் 38 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டிருக்கிறார்கள். நெய்வேலியில் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் பங்கு கொண்டிருந்த நடிகர் விஜய், வருமான வரித்துறையினரால் வலுக்கட்டாயமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்.

நடிகர் விஜய் ஆளுங்கட்சிக்கு எதிராக இளைய சமுதாயத்தினரின் கோபத்தை வெளிப்படுத்துகிற வகையில் ‘மெர்சல், பிகில்’ ஆகிய திரைப்படங்களில் சில வசனங்களைப் பேசியது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவார்கள்.

நடிகர் விஜய்யைப் பொறுத்தவரை அரசியலுக்கு வருவேன் என்று கூறவில்லையே தவிர, அரசியல் உணர்வோடு திரைப்படங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, மத்திய பா.ஜ.க. அரசின் ஜி.எஸ்.டி. வரி, பணமதிப்பு நீக்கம் ஆகியவை குறித்து அவரது திரைப்படங்களில் விமர்சனம் செய்யப்பட்டது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்த வசனங்களை உடனடியாக நீக்க வேண்டுமென்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா கருத்து கூறும் போது, நடிகர் விஜய் என்ற பெயருக்கு முன்னாலே ஜோசப் விஜய் என்று அழைத்து கிறிஸ்துவ மதசாயம் பூசியதை அனைவரும் அறிவர். அதேபோல, அ.தி.மு.க. அமைச்சர்களும் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தினார்கள்.

இந்நிலையில் வருமான வரித்துறையினர் நடிகர் விஜய் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்துவது ஏதோ ஒருவகையில் அவரை அச்சுறுத்துகிற நடவடிக்கையாக இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஒருபக்கம் நடிகர் ரஜினிகாந்த் வருமானத்தை மறைத்த விவகாரத்தில் குறைந்தபட்ச அபராதமாக ரூபாய் 66.22 லட்சம் வசூலிக்க வருமான வரித்துறை ஆணையிட்டுள்ளது.

தமது வருமானத்தை சரிகட்டுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் 2002-03-ல் ரூபாய் 2.63 கோடியை 18 சதவீத வட்டிக்கு கடன் கொடுத்து ரூபாய் 1.99 லட்சம் லாபம் அடைந்திருப்பதாக கணக்கில் கூறியிருக்கிறார். ஆனால் 2004-05-ம் ஆண்டிலோ ரூபாய் 1.71 கோடி வட்டிக்கு கடன் கொடுத்ததில் வசூல் ஆகாததால் வாராக் கடனாக மாறி, ரூபாய் 33.93 லட்சம் நஷ்டம் அடைந்ததாகவும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியிருக்கிறார்.

இதன்மூலம் வருமான வரித்துறையின் கிடுக்கிப் பிடியில் ரஜினிகாந்த் சிக்கிக் கொண்டிருப்பது குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன. இச்சூழலில் தான் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கான ஆதரவை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்று எவரும் கூறிவிட முடியாது.

இந்நிலையில் ரூபாய் 1 கோடிக்கு குறைவாக வரி தொடர்பான வழக்குகளில் மேல்முறையீடு தேவையில்லை என்று வருமான வரித்துறையின் சுற்றறிக்கையினால் நடிகர் ரஜினிகாந்த் மீது தொடுக்கப்பட்ட வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக காரணம் கூறப்பட்டுள்ளது. இந்த வகையில் வருமான வரித்துறையின் நடவடிக்கை நடிகர் ரஜினிகாந்தை பிரச்சனையிலிருந்து முழுமையாக விடுவித்திருக்கிறது.

ஆனால் நடிகர் விஜய், மத்திய வருமான வரித்துறையின் சோதனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதை ஏதோ வருமான வரித்துறையின் சோதனையாக மட்டும் கருத முடியாது.

ஏனெனில் மத்திய பா.ஜ.க. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகள் கடந்த சில வருடங்களாக எத்தகைய சோதனைகளை எத்தனை முறை தமிழகத்தில் நடத்தியது என்பதையும், அதனுடைய தொடர் நடவடிக்கைகள் எந்த நிலையில் இருப்பதையும் ஒப்பிட்டு பார்த்தால் நடிகர் விஜய் மீது வருமான வரித்துறை எடுத்திருக்கும் நடவடிக்கைகளின் உள்நோக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

எனவே, நடிகர் விஜய் மீது வருமான வரித்துறை தொடுத்திருக்கும் சோதனைகள் மூலம் அவரது உரிமைக் குரலை ஒடுக்கி, அச்சுறுத்தி விடலாம் என மத்திய பா.ஜ.க. அரசு கருதுமேயானால் அது வெறும் பகல் கனவாகத் தான் முடியும். இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் நடிகர் விஜய் அஞ்சக் கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

தம்பி விஜயை மிரட்டுவதற்காகவே அவரது வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அரசியல் ஆர்வத்துடன் இருக்கும் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கி விடுவாரோ? என்கிற எண்ணத்தில்தான் விஜய்யின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

விஜயை விட ரஜினியே அதிக சம்பளம் வாங்குகிறார். ரூ.126 கோடி சம்பளம் வாங்கும் அவரது வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தாதது ஏன்?

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு செய்திகள் பிரதான இடத்தை பிடித்து விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே ரஜினிகாந்த் அதே நாளில் பேட்டி கொடுத்துள்ளார்.

வட்டிக்கு விட்டு சம்பாதித்தாக ரஜினிகாந்த் கூறுகிறார். 18 சதவீத வட்டி என்பது அநியாய வட்டி இல்லையா? இந்த வட்டி கடை முதலாளியை கொண்டு வரவேண்டும் என்றுதான் நீங்களே விரும்புகிறீர்கள்.

இவ்வாறு சீமான் கூறினார்.

கேரளா சுயேச்சை எம்.எல்.ஏ. அன்வர் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:-

“வரலாற்றைப் புரட்டிப் போடும், எதிர்க் குரல்கள் அடக்கப்படுகின்றன. நிலைப்பாடுகளை அறிவித்த நாள் முதல் அவர்கள் வேட்டையாடத் தொடங்கினர்.

‘மெர்சல்’ திரைப்படம் திராவிட மண்ணில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்குத் தடையானது என்பது தெளிவு. சி.ஜோசப் விஜய்க்கு ஆதரவு.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News