தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க செல்லும் சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம்- 2 பேர் கைது
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் ஏராளமான பெண்கள் அதிகாலையிலேயே தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க செல்வது வழக்கம். என்றாவது சிறுமிகள், இளம்பெண்கள் தனியாக குளிக்க சென்றால் அவர்களை அந்த பகுதியில் உள்ள சில இளைஞர்கள், புதர் பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர்.
இதை வெளியே சொன்னால் இளம் பெண்களின் வாழ்க்கை கெட்டு விடும் என்று அஞ்சி பல பெற்றோர்கள் புகார் கொடுக்க முன்வருவதில்லை. இதனால் பாலியல் பலாத்காரம் செய்யும் இளைஞர்கள் தங்கள் பாலியல் பலாத்காரத்தை தொடர்ந்து அரங்கேற்றி வந்தனர்.
கடந்த 16-ந்தேதி இது போல அம்பை பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதுள்ள மாணவி தாமிர பரணி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அவரிடம் உதவுவது போல பேச்சு கொடுத்த 2 வாலிபர்கள், அந்த மாணவியை நைசாக புதர் அருகே அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அந்த மாணவி நீண்ட நேரம் வீடு திரும்பாததால், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாணவியை தேடினர். அப்போது அந்த மாணவியை ஊர்க்காடு பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இது வெளியே தெரிந்தால் அவமானம் என்று அந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்ய வில்லை.
ஆனால் இப்படிப்பட்ட பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்வதால், அந்த பகுதியை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சமூக சேவகி ராஜம்மாள் என்பவர் அம்பை போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த 16-ந் தேதி 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது, ஊர்காட்டை சேர்ந்த மூர்த்தி (வயது31), மாரியப்பன் (28) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் மூர்த்தி, மாரியப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை நேற்று கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.