செய்திகள்
விபத்து

கோவையில் பள்ளிக்கு சென்ற அக்காள்- தங்கை லாரி மோதி பலி

Published On 2019-11-16 07:29 GMT   |   Update On 2019-11-16 07:29 GMT
கோவையில் தந்தை கண்முன்னே அக்காள்-தங்கை லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை:

தர்மபுரியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி.இவர்களுக்கு கீர்த்தனா(7), காயத்திரி(9) என்ற மகள்களும், கார்த்திக்(10) என்ற மகனும் உள்ளனர்.

வெங்டேஷ் தற்போது கோவை ரத்னபுரியில் உள்ள கண்ணப்பன் நகரில் குடும்பத்துடன் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்.

கீர்த்தனா, காயத்திரி ஆகியோர் சங்கனூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். கீர்த்தனா 2-ம் வகுப்பும், காயத்திரி 4-ம் வகுப்பும் படித்து வந்தனர். கார்த்திக் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர்களை தினமும் வெங்கடேஷ் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று விடுவது வழக்கம்.

இன்று காலை வெங்கடேஷ் தனது மகன் மற்றும் மகள்களை பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

அப்போது தயிர் இட்டேரி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ஓரமாக இருந்த குப்பை தொட்டியில் மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது முன்னால் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது லாரி பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது லாரியின் முன் டயரில் விழுந்த கீர்த்தனா மீது லாரி ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்ற 3 பேரும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் காயத்திரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து சென்றபோது தந்தை கண்முன்னே மகள்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News