செய்திகள்
வெளிநாட்டு பயணம் மூலம் சகாப்தம் படைத்தவர் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் உதயகுமார் பாராட்டு
வெளிநாட்டு பயணம் மூலம் சகாப்தம் படைத்தவர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை:
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கள்ளிக்குடி ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். கூட்டத்தில் முதல்- அமைச்சரை பாராட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உருவாக வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை தனது லட்சியமாக கொண்டு அதனை நனவாக்கும் வண்ணம் ஜெயலலிதாவை பின்பற்றி 2-ம் உலக முதலீட்டாளர் மாநாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தினார்.
அதில் பங்கேற்ற தொழில் முதலீட்டாளர்களின் வேண்டுகோளை ஏற்று வெளிநாடுகளுக்கு சென்று தலைசிறந்த நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீட்டை குவிக்க வெற்றிப்பயணம் மேற்கொண்டு வந்துள்ளார். தமிழக மக்களின் நலனே தன் நலன், தமிழக வளர்ச்சியே தன் வளர்ச்சி என்று கருதி இந்தியாவிலேயே எந்த முதல்- அமைச்சரும் செய்திடாத வகையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.8830 கோடி அளவில் தமிழகத் திற்கு முதலீடுகளை ஈர்த்து தந்துள்ளார்.
இந்த ஆட்சி நிலையான ஆட்சியா? என்று கேட்பவர்களுக்கு இது சாதனையை வென்று காட்டும் ஆட்சி என்று சவுக்கடி கொடுக்கும் வகையில் தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்மை படைத்துள்ளார். வெளிநாட்டு பயணத்தின் மூலம் சகாப்தம் படைத்த அவருக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.