செய்திகள்
கேஎஸ் அழகிரி

ப.சிதம்பரத்தின் தாத்தாவுக்கு 14 நாடுகளில் சொத்துக்கள் - கே.எஸ்.அழகிரி

Published On 2019-08-26 07:39 GMT   |   Update On 2019-08-26 07:39 GMT
ப.சிதம்பரத்தின் தாத்தா அண்ணாமலை செட்டியாருக்கு 14 நாடுகளில் சொத்துக்கள் உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
மதுரை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் மிக மோசமாகவும், பாழடைந்த நிலையிலும் உள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சிறப்பாக கட்டிய பொருளாதாரம் என்ற மாளிகையை மோடி அரசு இப்போது தாறுமாறாக இடித்து வருகிறது.

நடப்பு மாதத்தில் மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி அன்னிய முதலீடு மற்ற நாடுகளுக்கு சென்றுவிட்டது. பார்லே நிறுவனம் ஒரே நாளில் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. ஜி.எஸ்.டி. கட்ட முடியாததால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

நரசிம்மராவ் ஆட்சியில் ஆட்டோ மொபைல் துறை எழுச்சி பெற்று இருந்தது. ஆனால் தற்போது மோடி ஆட்சியில் இந்த துறை நலிவடைந்து வருகிறது. மோடி நாட்டை பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளிவிட்டார்.

பொருளாதார சீரழிவுக்கு மத்திய பா.ஜனதா அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் என அந்த கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொருளாதார சீரழிவை மறைக்க மத்திய அரசு செயற்கையாக பல்வேறு நிகழ்வை ஏற்படுத்துகிறது.

காஷ்மீர் ஆளுநர் அழைப்பின் பேரில் ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீர் சென்றனர். ஆனால் அங்கு விமான நிலையத்திலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மோடி அரசு எதைக்கண்டு அஞ்சுகிறது என தெரியவில்லை. இது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால் ஆகும்.

ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) 99 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதை அரசியல் ரீதியாக பார்க்காமல் சமூக ரீதியான பிரச்சினையாக பார்க்க வேண்டும். தமிழக முதல்வர் அன்னிய முதலீடுகளை பெற வெளிநாடு சுற்றுப் பயணம் சென்று உள்ளார். அப்படியானால் சென்ற ஆண்டு நடந்த 2 அன்னிய மூலதன மாநாட்டால் எவ்வளவு முதலீடு பெறப்பட்டது? எத்தனை ஆலைகள் திறக்கப்பட்டது? என அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ஆனால் மத்திய அரசு பட்ஜெட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 10 ரூபாய் கூட ஒதுக்கவில்லை. இதற்கு அந்த தொகுதியின் அமைச்சர் உதயகுமார் என்ன பதில் சொல்ல போகிறார்.

பா.ஜனதா கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதியை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். 2017-ம் ஆண்டு நடந்த குட்கா ஊழல் தொடர்பாக இதுவரை ஒரு எப்.ஐ.ஆர்.கூட பதிவு செய்யவில்லை. இதற்கு யார் காரணம் என கண்டறிய வேண்டும்.



ப.சிதம்பரம் கைதானதை கண்டித்து ராகுல், பிரியங்காகாந்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர் தனித்து விடப்படவில்லை. ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்களை நடத்தியுள்ளோம். ப.சிதம்பரத்தின் தாத்தா அண்ணாமலை செட்டியாருக்கு 14 நாடுகளில் சொத்துக்கள் உள்ளது. இதுதொடர்பாக அவர் கொடுத்த பிரமாண பத்திரத்திலும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News