கல்லூரியில் முறைகேடு நடந்ததாக புகார் - கே.எஸ்.அழகிரி விளக்கம்
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது சொந்த மாவட்டமான சிதம்பரத்தில் கல்லூரி நடத்தி வருகிறார்.
இந்த கல்லூரியில் கப்பல் தொழில்நுட்பம் தொடர்பாக பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்து தருவதாக கூறி ஏராளமான கல்வி கட்டணம் வசூலித்ததாக தகவல் பரவியது.
இது தொடர்பாக மத்திய கப்பல் கழகம் விளக்கம் கேட்டுள்ளது. இது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக இன்று சத்தியமூர்த்தி பவனில் அழகிரியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-
எங்கள் கிராமத்தில் 3 கல்லூரிகள் நடத்தி வருகிறேன். இதில் முதல் உதவி தொடர்பான 15 நாள் பயிற்சிக்காக ரூ.8 ஆயிரம் கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டது.
ஒரு மாணவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தவறான தகவல் புகாராக கொடுக்கப்பட்டது.
இதுபற்றி ஏற்கனவே விளக்கம் அளித்து இருக்கிறோம். கிட்டத்தட்ட 50 முறையாவது ஒரே புகாருக்கு விளக்கம் அளித்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.